மில்கோ நிறுவனத்தின் தினசரி பால் உற்பத்தியினை மூன்றரை இலட்சம் லீட்டராக அதிகரிக்குமாறு  விவசாய, கிராமியப் பொருளாதார அலுவல்கள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் கடற்றொழில், நீரியல் வளங்கள் அமைச்சர் பீ.ஹரிசன், கிராமியப் பொருளாதார அமைச்சில் நடைபெற்ற அதிகாரிகளுடனான சந்திப்பில் கோரிக்கை விடுத்தார். 

2018 முதல் இன்று வரை தினசரி பால் உற்பத்தி ஒரு இலட்சத்து எழுபதாயிரம் லீட்டர் அளவில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமை ஒரு பிரச்சினையாக உள்ளதாகவும், அதற்கு பால் சேகரிக்கும் இடங்களிலிருந்து அதற்கான தீர்வைப் பெற வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

ஒரு லீட்டர் பாலின் விலை ரூபா 50 ஆக இருக்கும் போது,  இரு சந்தர்ப்பங்களில் பாலின் விலை நான் அமைச்சராக இருக்கும் போதே ரூபா 70 வரை அதிகரிக்கப்பட்டதுடன், பால் உற்பத்தியாளர்களுக்குப் பயிற்சி வழங்கும் நிகழ்வுகளை ஆரம்பித்து பால் உற்பத்திகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இந்த ஆண்டுக்குள் புல்மோட்டை, எப்பாவல, வெலிஓய, ரபேவ உள்ளிட்ட புதிய பால் குளிர்வடையச் செய்யும் நிலையங்கள் 7 ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவித்த அமைச்சர், பெரிய அளவிலான பால் பண்ணை விவசாயிகளின் பால் உற்பத்திகளையும் மில்கோவிற்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் அதிகாரிகளைப் பணித்தார். 

யோகட் மற்றும் ஐஸ்கிரீம் மூலம் தேசிய பால் உற்பத்தியினை அதிகரித்து, பால் உற்பத்தியாளர்களை மேம்படுத்த நிறுவனம் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்பதுடன், 2019 இல் வைத்திருக்கும் வருமான இலக்கினை அடைய அதிகாரிகளும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 இந்நிகழ்வில் மில்கோ நிறுவன அதிகாரிகளுடன் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி அவர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. 

கஹட்டோவிட்ட ரிஹ்மி
கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.