முஸ்லிம் சமூகம் இன்று எரிமலைக்கு மேல் உட்கார்ந்து கொண்டிருக்கின்ற ஒரு நிலையில் காணப்படுவதாகவும் இந்த நிலைமையிலிருந்து மீள்வதற்கு எமது சமூகத்துக்குள் உள்ள சகல அமைப்புக்களும் ஒற்றுமைப்பட்டு ஒன்றிணைவதே ஒரே வழியாகும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும் நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான என்.எம். அமீன் தெரிவித்தார்.
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தேர்தல்கள் ஆணையாளர் நாயகமாக பதவி உயர்வு பெற்றுள்ள அஷ்ஷெய்க் எம்.எம். முஹம்மத் நளீமியை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (27) கஹட்டோவிட்டாவில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
குறுகிய வேறுபாடுகளையும், கருத்து முரண்பாடுகளையும் மறந்து சமூக அமைப்புக்கள் அனைத்தும் ஒன்றிணைந்து செயற்பட முன்வர வேண்டும். நாம் பிரிந்து செயற்படும் போது எம்மை நோக்கி வருகின்ற ஆபத்துக்களின் தாக்கம் அதிகமாக காணப்படுகின்றது.
இந்த நாட்டில் உயர் பதவிகள் சிறுபான்மையினருக்கு மறுக்கப்பட்ட ஒன்று அல்ல. நல்ல பண்பாடுகளை வெளிப்படுத்தினால் அவற்றை நாம் அடைந்து கொள்ளலாம். கஹட்டோவிட்ட சகோதரர் முஹம்மதுக்கு தேர்தல்கள் ஆணையாளர் நாயகமாக வர முடியுமாக உள்ளமை இதற்கு சிறந்த சான்றாகும் எனவும் அவர் மேலும் கூறினார்.
கருத்துரையிடுக