அவள் மென்மையானவள் என்றா சொல்கிறீர்கள்!!

உடலின் ஒட்டுமொத்த வலியையும்
ஓரிடத்தில் குவித்து
ஊசி முனையாலதை மெல்ல மெல்ல குத்திக்கிழித்தெடுக்கும்
வேதனையை
தனக்குள் மறைத்து
புன்னகைக்கிறாளே
அவளா மென்மையானவள்!!

அதையும் மீறி வெடித்துச்சிதறும்
கோபங்கள் அத்தனையுக்கும்
அர்த்தம் தேடித்திரியாதீர்கள்?

அடிவயிற்றை தடவிக்கொடுக்கும்
அவள் கரங்களுக்குக்கூட
அது தெரிந்திருக்க வாய்ப்பில்லை...

நிச்சயம் அவற்றிட்கு
காரணங்கள் அவளுக்கே தெரியாது!!

இயற்கையின் மாறுதல்களவை...

அவளையறியாமல் கசியுமந்த
வலிகளின் மழைக்கு
நனைந்து விட்டீர்களெனில்
கொஞ்சம் பொருத்துக்கொள்ளுங்கள்
சில தினங்களில் அவளே தலைதுவட்டி
முத்தமிடுவாள்!!

இல்லையெனில்
குடைபிடித்துக்கொள்ளுங்கள்!!

வழமைக்கு மாறாய்
வியர்த்துக்கொட்டும் போது
ஏற்படும் அசெளகரியங்களால்
உங்கள் மீது வீசி எறியும் வார்தைகளை
சேர்த்து முத்தங்களாய் அவளுக்கு திருப்பிக்கொடுங்கள்...

குறைந்துவிட மாட்டீர்கள்!!

உங்கள் மீதுள்ள வெறுப்பால்
அவள் அப்படி செய்ய வில்லை
அவளுக்கே அவள் மீது
வெறுப்பாயிருக்கும் போது
உங்கள் மீதும் அதை கொஞ்சம்
அப்பிவிடுகிறாள் அவ்வளவு தான்!!

இரைபைக்கு உணவு பிடிக்காமல்
துப்பிடும் போது
அது கோபமாய் உங்கள் மேல் கக்கப்பட்டிருக்கக்கூடும்...

மாதமொருறை அவள் அனுபவிக்கும்
அசெளகரியங்களால்
உணர்ச்சிவசப்பட்டு
அவள் செய்யும் வேலைகளை
பேசும் விடயங்களை
மறந்து மன்னித்து விடுங்கள்!!

அவளையறியாமல்
நடக்கும் இம்மாற்றங்களுக்கு
அவள் காரணமல்லவே!!

மீண்டும் சொல்கிறேன்

உங்கள் மீதுள்ள வெறுப்பால்
அவள் அப்படி செய்ய வில்லை
அவளுக்கே அவள் மீது
வெறுப்பாயிருக்கும் போது
உங்கள் மீதும் அதை கொஞ்சம்
அப்பிவிடுகிறாள்
அவ்வளவு தான்!!

புரிந்துணர்வுடன் வாழ்தலே
வாழ்தலென்பேன்!!

அந்த ஐந்து........நாட்களுக்கேனும்.....

வாழ்ந்துதான்
பாருங்களேன்!!

#சப்னா_செய்ன்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.