வெளிநாட்டு பால்மா என்ற பெயரில் பன்றிக்கொழுப்பு,  மரக்கறி எண்ணெய்யை  மற்றும் லக்டோ கலந்த பால்மாவே வருகின்றது என பிரதி அமைச்சர் புத்திக்க பதிரன சபையில் முன்வைத்த கருத்தினை அடுத்து சபையில் கடும் சர்ச்சை எழுந்தது. 


இத்தனை காலமாக பன்றி கொழுப்பையா பிள்ளைகளுக்கு கொடுக்கின்றோம் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியதுடன் முஸ்லிம் மக்கள் மத்தியில் பாரிய குழப்பம் ஏற்படும் என ஆளும் தரப்பின் முஸ்லிம் உறுப்பினர் சுட்டிக்காட்டினர். 

எனினும் இது உண்மையென விடயத்துக்கு பொறுப்பான முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா குறிப்பிட்டார். 

பாராளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான நேரத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் நாட்டில் பால் மா தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தேசிய பால் மா உற்பத்தியின் வரியை குறைத்தாவது இந்த தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண நடவடிக்கையெடுக்கப்படுமா? என கேள்வியெழுப்பினார்.

இதற்கு பதிலளித்து உரையாற்றும்போதே புத்திக்க பதிரன மேற்கண்டவாறு கூறியதுடன்,  பால் மா விலை அதிகரிப்பு குறித்து பால்மா நிறுவனங்கள் அடிக்கடி கோரிக்கை முன்வைத்து வருகின்றனர். பால் மா நிறுவனமொன்றின் உயர் அதிகாரியொருவர் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டும் அது தொடர்பான கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

எவ்வாறாயினும் நாங்கள் இதுவரையில்  பால்மா விலை அதிகரிப்பு குறித்து எந்த  தீர்மானமும் எடுக்கவில்லை. வாழ்க்கைச் செலவு தொடர்பான குழு  அடுத்த வாரம் கூடவுள்ளது. இக்குழு  கூடியதும் இந்த விவகாரம் தொடர்பாக ஆழமான தீர்மானம் எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.  

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.