கல்லொழுவை அல் - அமான் ஆரம்ப பாடசாலைக்கு மூன்று மாடிக்கட்டிடம்
- ஆளுநர் அஸாத் சாலி நடவடிக்கை


( மினுவாங்கொடை நிருபர் )
   
   அல் - அமான் பாடசாலையின் ஆரம்பப் பிரிவுக்காக,  மூன்று மாடிகளைக்கொண்ட கட்டிடம் ஒன்று, இவ்வருட இறுதிக்குள்  பெற்றுத்தரப்படும். இதேவேளை, இப்பாடசாலையின் ஆளணி மற்றும் பெளதிக வளப்பற்றாக் குறைகளும் துரிதமாக என்னால் நிவர்த்தி செய்து தரப்படும் என்று, 
 மேல் மாகாண ஆளுநர் அஸாத் சாலி தெரிவித்தார். 
மினுவாங்கொடை -  கல்லொழுவை அல் - அமான் முஸ்லிம் மகா வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிகளின் இறுதி நாள்  நிகழ்வுகளில்  பிரதம அதிதியாகக்  கலந்துகொண்டு உரையாற்றும்போதே, ஆளுநர்  மேற்கண்டவாறு தெரிவித்தார். 
   கல்லொழுவை, அழுத்மாவத்தை வீதி, முனாஸ் ஹாஜியார் விளையாட்டரங்கில், அண்மையில்   அதிபர் எம். ரி. எம். ஆதிம் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில்,  மேல் மாகாண ஆளுநர் தொடர்ந்தும்  பேசுகையில் கூறியதாவது,
   மேல் மாகாணத்திலுள்ள முஸ்லிம் பாடசாலைகள் உட்பட தமிழ் மொழி மூலப் பாடசாலைகளின் தரத்தை உயர்த்துவதே எனது நோக்கம். அடுத்த 10  மாதங்களுக்குள் இந்த இலக்குகள் எட்டப்படும். 
   தமிழ் மொழி மூலப் பாடசாலைகள் கல்வித்துறையில் பின்னடைந்துள்ளன. முழு நாட்டினதும் கல்வி நடவடிக்கைகளை நோக்குகின்ற போது, மேல் மாகாண தமிழ் மொழி மூலப்  பாடசாலைகள்,  மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளன. இதற்கான காரணங்களைத்  தேடுவதில் காலத்தை வீணடிக்க விரும்பவில்லை. 
   எனினும், இந்த  வருடம் முடிவடைவதற்கு முன்னர், இதனை மாற்றுவதற்கு உறுதி பூண்டுள்ளேன். மேல் மாகாணப் பாடசாலைகளில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்யவும்  உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஆளணிப் பற்றாக்குறை, பௌதிக வளப் பற்றாக்குறைகளைத் தீர்ப்பதற்குத் தேவையான  அவசியமான நடவடிக்கைகளும் என்னால் எடுக்கப்படும். 
   ஆளுநராக நான் பதவியேற்ற போது,  கல்வித்துறைக்கு முன்னுரிமையளிக்க எண்ணினேன். மூன்று மாவட்டங்களிலுமுள்ள அனைத்து தமிழ் மொழி மூலப் பாடசாகைளின் தரத்தை உயர்த்துவதற்கான வேலைத் திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளேன். மூன்று கட்டங்களில் அதிபர்களிடமிருந்து முழுமையான விபரங்களைப் பெற்று,  இத்திட்டம் செயற்படுத்தப்படும். மேல் மாகாண தமிழ் மொழி மூலமான பாடசாலைகளின் கல்வித்தரத்தை உயர்த்துவதற்கான வேலைத்திட்டத்தை தான் முன்னெடுத்து வரும் நிலையில், இதற்கு சகல ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் பூரண ஒத்துழைப்பு மிக மிக அவசியம் என்றார்.






( ஐ. ஏ. காதிர் கான் )

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.