( ஐ. ஏ. காதிர் கான் )

 விளையாட்டுடன்  தொடர்புடைய அனைத்துத் தேர்தல்களும்,  இவ்வருட இறுதிக்குள் நடாத்தி முடிக்கப்படும். அதற்கான சகல ஆயத்தங்களும் விளையாட்டுத்துறை அமைச்சினால்  மேற்கொள்ளப்பட்டு வருவதாக,  விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ, இன்று (14) மாலை விளையாட்டுத்துறை அமைச்சில் வைத்து அதிகாரிகளுக்கு மத்தியில் கூறினார்.

   அமைச்சர் இங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கும்போது,
விளையாட்டுத்துறையை பல்வேறு வகையிலும் மேம்படுத்த, பல பாரிய வேலைத்திட்டங்களை நாம் முன்னெடுத்துள்ளோம். இவ்வருட இறுதிக்குள், இத்திட்டம் முறையாக அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்படும்.   விளையாட்டுத்துறை என்பது, மிக முக்கிய துறைகளில் ஒன்றாகும். இது சர்வதேச மட்டத்தில் மிகப் பொறுப்புவாய்ந்த துறையுமாகும்.
இதில், எவ்விதக் குளறுபடிகளும் நடப்பதற்கு இடமளிக்க முடியாது. என்னைப் பொறுத்தமட்டில், இதற்கு ஒருபோதும் அனுமதியளிக்கவும் மாட்டேன்.

விளையாட்டுத்துறையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், விளையாட்டுத்துறை சார்ந்த சங்கங்களையும், சபைகளையும் ஒன்று கூட்டவுள்ளேன். சங்கங்களினதும் சபைகளினதும் முக்கியஸ்தர்கள் மற்றும் உறுப்பினர்களை ஒன்று கூட்டி, அவர்களுடன் விளையாட்டுத்துறை தொடர்பில் விரிவான நலன்மிக்க, பயன்மிக்க  திட்டங்களை முன்னெடுக்கவுள்ளேன். அவர்களுடன் இத்துறை தொடர்பில் பரவலான முறையில் கலந்தாலோசிப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்துள்ளேன்.
எதிர்வரும் 26 ஆம், 27 ஆம் திகதிகளில், கொழும்பிலுள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் இத்துறை தொடர்பிலான கருத்தரங்கு நடைபெறும். இவ்விருநாள் கருத்தரங்கில், விளையாட்டுத்துறை சார்ந்த சகல அதிகாரிகளும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று குறிப்பிட்டார்.

விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் சூலானந்த பெரேராவும் இங்கு உரை நிகழ்த்தினார்.





( ஐ. ஏ. காதிர் கான் )

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.