8300 இளைஞர், யுவதிகள் பங்கேற்பு

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 2019 யொவுன்புர நிகழ்வு திஸ்ஸமகாராமை வீரவிலையில் இன்று 27 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை நடை பெறவுள்ளது.

இது பத்தாவது யொவுன்புர நிகழ்வாகும். இதில் நாடு பூராவுமிருந்தும் சகல இனங்களையும் சேர்ந்த 8300 இளைஞர், யுவதிகள் பங்குபற்றவுள்ளனர்.

இவர்களில் இளைஞர் கழக அங்கத்தவர்கள் 6900, வெளிநாட்டு இளைஞர், யுவதிகள் 100, இளைஞர் பதக்கம் பெற்றவர்களும் அபேட்சகர்களும் 100, சாரணர்கள் 350, கொத்தலாவை பாதுகாப்பு கல்லுாரியிலிருந்து 100, இளைஞர் பாராளுமன்ற மற்றும் மாணவத் தலைவர்கள் 100 மற்றும் தொழில் பயிலுனர்கள் 500 பேரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இம் முறை யொவுன்புர நிகழ்வு தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தினை கட்டியெழுப்புவதினை அடிப்படையாகக் கொண்டு இடம் பெறவுள்ளது. இந்த யொவுன்புர நிகழ்வில் கல்வி மற்றும் தொழில்நுட்ப நிகழ்வுகள், தகவல் தொழிநுட்பம், தலைமைத்துவம், ஆளுமை விருத்தி, விளையாட்டு நிகழ்வுகள், கலாசார போட்டிகள், யொவுன்புர இளைஞன் மற்றும் யுவதி தெரிவு, இசை நிகழ்ச்சிகள், தொழில் வான்மை வழிகாட்டல்கள், தொழில் சந்தைகள், தலைமைத்துவப் பயிற்சி, மரநடுகை திட்டங்கள், சிரமதானம், வீட்டுத் தோட்ட பயிர் செய்கை, இயற்கை உர உற்பத்தி, மீன் வளர்ப்பு மற்றும் ஊடகத் துறை ஆகிய செயற்பாடுகளோடு அரச மற்றும் அரச சார்பற்ற நிறவனங்களின் கண்காட்சிகளோடு இசை நிகழ்சிகள் மற்றும் மகிழ்வூட்டும் நிகழ்வுகளும் நாளாந்தம் இடம்பெறவுள்ளன.

அங்குரார்ப்பண நிகழ்வில் துறைமுகங்கள் கப்பற்துறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க, தேசிய இளைஞர் சேவைகள் சபையின் தலைவரும் பணிப்பாளர் நாயகமுமாகிய சட்டத்தரணி எரந்த வெலிஅங்ககே ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளதோடு இறுதி நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெறவுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.