அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை 25 சதவீதமாக அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று (26) இடம்பெற்ற சமுர்த்தி பயனாளிகள் குடும்பத்தைச் சேர்ந்த பெண் தொழில் முனைவோருக்கான நிகழ்விலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டத்தில் பல தடைகளை எதிர்நோக்க நேரிடலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
உள்ளுராட்சிமன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, அவர்களின் குரல்களுக்காக கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.
எனினும், அரசியலில் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கச் செய்வதில் சில குறைபாடுகள் காணப்படுவதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
மேலும், அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கான திட்டம் ஏற்கெனவே முன்வைக்கப்பட்ட போதிலும், அதை அமுல்படுத்த முடியாமல் போனது. ஆகவே இவ்விடயம் மீண்டும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
உள்ளூராட்சி மற்றும் மாகாண சபை மட்டத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் 25 சதவீதமாக அதிகரிக்கப்பட்டால், பாராளுமன்றத்தில் பெண்கள் பொருத்தமான பிரதிநிதித்துவத்தைப் பெறுவதில் கடினம் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், தெரிவுசெய்யப்பட்ட பெண்கள் கூட, பெண்களுக்கு நல்லதொரு எதிர்காலத்தை உருவாக்குவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
கருத்துரையிடுக