ஏப்ரல் முதல் நடைமுறை; ஜனாதிபதி தெரிவிப்பு

சுற்றுலா மற்றும் பௌத்த சமய நடவடிக்கைகளுக்காக இலங்கைக்கு விஜயம் செய்வதில், பல நாடுகளுக்கான வீசா நடைமுறையை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

கடுவெல கம்பூச்சியா சர்வதேச பௌத்த மத்திய நிலையத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள விகாரையை திறந்துவைக்கும் புண்ணிய நிகழ்வில் நேற்று (09) பிற்பகல் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இதனை தெரிவித்தார்.

நாட்டின் சுற்றுலா கைத்தொழில் அபிவிருத்திக்காகவும் பௌத்த சமய எழுச்சிக்காகவும் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் இதனை நடைமுறைப்படுத்தவுள்ளதாக குறிப்பிட்டார்.

கம்பூச்சியாவிலிருந்து இலங்கைக்கு வருகை தருகின்றபோது வீசா பெற்றுக்கொள்வது தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகள் பற்றி மகாசங்கத்தினர் முன்வைத்த கோரிக்கையின் பேரில் எதிர்காலத்தில் சுற்றுலா மற்றும் பௌத்த சமய நடவடிக்கைகளுக்காக நாட்டுக்கு வருகை தருகின்றபோது கம்பூச்சியாவிற்கும் வீசா நடைமுறையை நீக்கி நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

இலங்கைக்கும் கம்பூச்சியாவுக்குமிடையே இருந்துவரும் நீண்டகால நட்புறவுக்கு முக்கிய காரணம் தேரவாத பௌத்த தத்துவமாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், தேரவாத பௌத்த தத்துவத்தின் கேந்திர நிலையம் என்ற வகையில் இலங்கை அனைத்து பௌத்த நாடுகளுடனும் உறவுகளை பலப்படுத்தி தேரவாத பௌத்த தத்துவத்தின் மேம்பாட்டிற்காக அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

தேரவாத பெளத்த தத்துவத்தை வெளிப்படுத்தும் கம்பூச்சியாவின் கட்டடக் கலையை எடுத்துக்காட்டும் வகையில் இந்த புதிய விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

கடுவெல, இஹல போமிரிய சர்வதேச பௌத்த மத்திய நிலையத்திற்கு சென்ற ஜனாதிபதி, முதலில் சமயக் கிரியைகளில் ஈடுபட்டு ஆசீர்வாதங்களை பெற்றுக்கொண்டதன் பின்னர் நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்து புதிய விகாரையை திறந்து வைத்தார். 

கம்பூச்சியாவில் வடி லங்கா விகாரையில் நடுவதற்காக ஸ்ரீ மகாபோதி அரச மரக்கன்று ஒன்று அவ்விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய ஆரியவங்ச நாயக்க தேரரிடம்  ஜனாதிபதி கையளித்தார்.

கம்பூச்சியாவின் உப சங்கராஜ சங்கைகுரிய ஒம் லிம் ஹெட் நாயக்க தேரரினால் ஜனாதிபதிக்கு நினைவுச் சின்னமொன்று வழங்கி வைக்கப்பட்டதுடன். ஜனாதிபதியும் நினைவுச் சின்னமொன்றை வழங்கி வைத்தார்.

விகாரையை நிர்மாணிப்பதற்கு பங்களிப்பு செய்த கம்பூச்சியா கட்டிட கலைஞரையும் ஜனாதிபதி பாராட்டினார்.

மேலும் கம்பூச்சியா சர்வதேச பௌத்த மத்திய நிலையத்தின் பிக்குகளுக்கு ஜனாதிபதி பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கி வைத்தார்.

இலங்கை ராமான்ய மகா நிக்காயவின் மகா நாயக்க தேரர் சங்கைக்குரிய நாபான பேமசிறி நாயக்க தேரர், சங்கைக்குரிய அத்தங்கனே சாசனரத்தன நாயக்க தேரர், கம்பூச்சியா சர்வதேச மத்திய நிலையத்தின் விகாராதிபதி கலாநிதி ஓமல்பே சோபித்த நாயக்க தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினரும் கம்பூச்சியா உப சங்கராஜ சங்கைக்குரிய ஒம் லிம் ஹெட் நாயக்க தேரர் உள்ளிட்ட கம்பூச்சியா நாட்டின் பிக்குகளும் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட பிரதேசவாசிகள் பெருமளவானோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.