கிழக்கு மாகாண முஸ்லிம் சமூகத்தின் நீண்டகாலக் கோரிக்கையான  அம்பாறைக்கான கரையோர மாவட்டத்தை உருவாக்கித் தருவதற்கு அரசாங்கம் விரைந்து  நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் இராஜாங்க  அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் கோரிக்கை விடுத்தார்.  

வரவு-செலவுத்திட்டம் இரண்டாவது வாசிப்பு மீதான இரண்டாவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இராஜாங்க அமைச்சர் இந்தக்  கோரிக்கையை முன்வைத்தார்.  

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், தேசிய இனப்பிரச்சினையைத்  தீர்ப்பதற்கு இன்று பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. நல்லாட்சி  அரசாங்கம் புதிய அரசியலமைப்பை மேற்கொள்ள நகல் அரசியலமைப்பு அறிக்கையை  பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.  

இவ்வாறான நிலையில் முஸ்லிம் சமூகத்தின் அபிலாசைகள் தொடர்பில் தெளிவற்ற நிலை காணப்படுகிறது. கிழக்கு மாகாணத்தில் நிர்வாகத்தை பரவலாக்க  மொழிரீதியான கரையோர, பிரதேச நிர்வாக மாவட்டம் ஒன்று உருவாக்கப்பட  வேண்டுமென, முஸ்லிம் காங்கிரஸ் நீண்டகாலமாகக் கோரி வருகிறது.

இது தொடர்பான யோசனைகளை அரசியலமைப்பு சபையிலும் சமர்ப்பித்து உளோம். இது சம்பந்தமாக  சபையில் மீண்டும் அழுத்தமாகக் கூறிக்கொள்ள விரும்புவது கரையோர மாவட்டம் என்பது எதேச்சையாக உருவாக்கப்பட்ட கோரிக்கை அல்ல.  

ஜே.ஆர். ஜெயவர்த்தன ஆட்சியில் இருக்கும் போது புதிய மாவட்டங்களை உருவாக்கும் நோக்கில் மொறகொடை ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. இது  பல்வேறு புதிய மாவட்டங்களை சிபாரிசு செய்தது. இதில் முன்வைக்கப்பட்ட  சிபாரிசுகள் நடைமுறைப் படுத்தப்பட்டபோதும் அம்பாறையின் கல்முனை மாவட்ட  கோரிக்கை மாத்திரம் நிறைவேற்றப்படவில்லை. இந்தக் கோரிக்கை இன்றும் கூட  நிறைவேற்றப்படாதுள்ளது.  

இவற்றை உருவாக்கித் தருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  தேர்தல் காலத்தில் எங்களுடன் ஒப்பந்தங்களைச் செய்திருந்தார். இவ்வாறான  நிலையில் நீண்டகால இந்தக் கோரிக்கையை நிறைவேற்ற கல்முனை மாவட்டத்தை  உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

நாட்டில் 20ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை ஜே.வி.பியினர்  முன்வைத்துள்ளனர். இது தொடர்பில் அவர்கள் எதிர்க்கட்சித் தலைவரைச்  சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். 20ஆவது திருத்தத்தில்  குறிப்பிடப்பட்டுள்ள ஜனாதிபதி முறையை ஒழிப்பது பற்றி உறுதியான முடிவுக்கு வரவில்லையென எதிர்க்கட்சித் தலைவர் கூறியிருந்தார்.  

தற்பொழுது இருக்கும் நிறைவேற்று ஜனாதிபதி முறைமை நாட்டின்  பாதுகாப்புக்கு உசிதமான முறையாகும். மாகாணங்களுக்கும் அதிகாரங்கள்  பகிரப்பட்டிருப்பதால் நாட்டை பாதுகாத்து வழிநடத்த நிறைவேற்று ஜனாதிபதி  முறைமை தேவையாக உள்ளது.

நாட்டில் உள்ள சகல இன மக்களினதும் வாக்குகளைப்  பெற்று தேர்வுசெய்யப்படும் நிறைவேற்று ஜனாதிபதி சகலரையும் பற்றி சிந்தித்து  தீர்மானங்களை எடுப்பார். இதனால் தான் கட்சியின் ஸ்தாபகர் மர்ஹும் அஷ்ரஃப்  நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை வேண்டும் என  முடிவெடுத்திருந்தார்.

இந்த நிலைப்பாட்டிலேயே தற்போதைய தலைவர் ரவூப்  ஹக்கீமும் இருக்கின்றார். இதற்கு பாராளுமன்றத்தில் உள்ள சலகரும்  ஒத்துழைப்பு வழங்குவரென நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.