அமைச்சர் ரிஷாத் மீது அபாண்டம்

வில்பத்து வன எல்லைக்குள் எந்தவொரு முஸ்லிம் குடும்பமும் குடியமர்த்தப்படவில்லை எனவும் சில தீயசக்திகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக சிங்கள மக்களைத் தூண்டிவிட்டுக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்த முன்னாள் அமைச்சரும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினருமான பைசர் முஸ்தபா, வில்பத்து வனப்பகுதியில் எந்தவித காடழிப்பும் இடம்பெறவில்லை என்பதை உறுதிப்படுத்தியிருப்பதாகவும் குறிப்பிட்டார். முஸ்லிம் குடியேற்றங்கள் வில்பத்து வன எல்லைக்கு வெளியேயே இடம்பெற்றிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ரிஷாத்பதியுதீன் மீது வீண்பழி சுமத்தப்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்தார். நேற்று (26) கொழும்பில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பின்போதே பாராளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் அப்பட்டமான பொய்யாகும். சில சக்திகள் வில்பத்து விவகாரத்தை தமது அரசியல் சுயநலனுக்காக கையில் எடுத்து தென்னிலங்கை பெரும்பான்மைச் சிங்கள மக்களை தூண்டிவிடுகின்றனர். உண்மையிலேயே வில்பத்து வன எல்லைக்குள் ஒரு முஸ்லிம் குடும்பமாவது குடியேற்றப்படவில்லை என்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையிலும் கூட இந்த இனவாதச் சக்திகள் சில சிங்கள ஊடகங்கள் மூலம் அமைச்சர் ரிஷாத் பதியுத்தீனுக்கு எதிரான பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

அமைச்சர் ரிஷாத் பதியுதீனை நேர்மையான அரசியல்வாதியாக நான் காண்கின்றேன். அவர் தனது சமூகத்தின் விடியலுக்காகப் பாடுபடுகின்றார். குரல்கொடுத்து வருகின்றார். இதனை தவறெனக் கொள்ள முடியாது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூவ் ஹக்கீமிடம் நான் ஒரு வேண்டுகோளை வைக்க விரும்புகின்றேன்.

வில்பத்து விவகாரத்தில் அமைச்சர் ரிஷாத் பதியுத்தீனுக்கு கைகொடுத்து உதவ வேண்டும். அவரைப் பாதுகாக்க வேண்டும். இந்த விடயத்தில் கட்சி அரசியல் பேதம் பார்க்க முற்பட வேண்டாம். ரிஷாத்தின் நல்ல பணிக்கு ஒத்துழைப்பு வழங்க முன்வருமாறு கேட்டுக்கொள்கின்றேன் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.