நாட்டில் தற்போது 80 ஆயிரம் கல்வி டிப்ளோமாப் பட்டதாரிகள் பணிபுரிகின்றனர் இவ்வருட இறுதிக்குள் இந்த எண்ணிக்கை 90 ஆயிரமாக அதிகரிக்கப்படுமென்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

நேற்று காலை அலரிமாளிகையில் நடைபெற்ற தேசிய போதனாபீட டிப்ளோமா பட்டம் பெற்றவர்களுக்குச் சான்றிதழ் வழங்கும் வைபவத்தில் பிரதமர் உரையாற்றினார்.

உலகை வெற்றிகொள்ளக்கூடிய நவீன கல்வித் திட்டத்தை ஏற்படுத்தும் பாரியதொரு பொறுப்பை அரசாங்கம் கொண்டுள்ளது என்று தெரிவித்த பிரதமர் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் நான் கல்வியமைச்சராகப் பதவி வகித்த காலத்தில் பாடசாலைகளில் பயிற்சிபெறாத ஆசிரியர்கள் ஒருவர் அல்லது இருவரே காணப்பட்டனர் என்றார்.

கல்வித்துறையில் பயிற்சிபெற்ற ஆசிரியர்களை உருவாக்க வேண்டும் என்ற உறுதிப்பாட்டை அன்று நான் மேற்கொண்டேன். எனது இந்தக்கனவை நனவாக்க முப்பது வருடங்கள் கடந்தது. 15 வருடங்களுக்குள் இதனைச் செய்ய திட்டமிட்டிருந்தேன். ஆனால், அரசியல் மாற்றங்களால் அது சாத்தியப்படாமல் போனது.எதிர்காலத்தில் அரசாங்கம் பயிற்சி பெறாத ஆசிரியர்களை நியமிக்கும் எண்ணம் கிடையாது. 

கல்வி டிப்ளோமாப் பயிற்சியைப் பெற்றுக்கொடுத்த பின்னரே நியமனங்கள் வழங்கப்படும். நாட்டில் நவீன கல்வித் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்குப் பயிற்சிபெற்ற ஆசிரியர்கள் அதிகாரிகள் தேவைப்படுகின்றனர். ஒரு இலட்சம் என்ற இலக்கில் பயிற்சிபெற்ற ஆசிரியர்களை உருவாக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வருட இறுதிக்குள் 90 ஆயிரம் பேராக அதிகரித்து அடுத்த வருடத்தில் இலக்கை பூர்த்தி செய்வோம்;. சமகால அரசாங்கம் கடந்த நான்கு வருடங்களில் கல்விக்காக பெரும் நிதியை ஒதுகீடு செய்துள்ளது. அதனூடாக நவீன கல்வித் திட்டத்தின் பக்கம் எம்மால் நகர முடிந்தது என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார்.

கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், கல்வியமைச்சு உயரதிகாரிகள் தேசிய கல்வி நிறுவகத்தின் அதிகாரிகள், கல்வி போதனா பீட விரிவுரையாளர்கள் உள்ளிடட பலர் இந்த வைபவத்தில் கலந்துகொண்டனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.