வில்பத்து காடழிப்புக்கு எதிராக பாரிய எதிர்ப்பு போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்வதாக வில்பத்துவை பாதுகாப்போம் அமைப்பு கூறியுள்ளது. 

தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுகின்ற வில்பத்து காடழிப்பு சம்பந்தமான தகவல்கள் அண்மையில் பெற்றுக் கொள்ளப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் தெரிய வந்துள்ளதாக அந்த அமைப்பின் தலைவர் பாகியங்கல ஆனந்த சாகர தேரர் கூறியுள்ளார். 

இது சம்பந்தமாக வன ஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரி ஒருவரிடம் அத தெரண செய்தி சேவை வினவியதற்கு வில்பத்து தேசிய வனத்தில் எவ்வித பாதிப்பும் இதுவரை ஏற்படவில்லை என்று அவர் கூறியுள்ளார்.  

பாதுகாக்கப்பட்ட வனத்திற்கு வடக்கில் உள்ள வனப் பகுதி தொடர்பிலேயே சர்ச்சை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார். 

எவ்வாறாயினும் குறித்த பகுதி பாதுகாக்கப்பட்ட பிரதேசமாக வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளதால் அங்கு பாதிப்பை ஏற்படுத்துவது சட்டவிரோதமானது என்றும், அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு வனப் பாதுகாப்பு திணைக்களத்திற்குறியது என்று வன ஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரி கூறினார். 

அதேநேரம் வில்பத்து வனத்தில் காடழிப்பு தொடர்ச்சியாக இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக இலங்கை சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆய்வு மையத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் கலாநிதி ரவீந்திர காரியவசம் கூறினார். 

தற்போதைய அரசாங்கத்தினால் செயற்படுத்தப்படுகின்ற வேலைத்திட்டம் ஒன்றின் கீழ் இந்தக் காடழிப்பு இடம்பெறுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

(அத தெரண)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.