எதிர்காலத்தில் புதிய தொழில் மார்க்கங்களில் இலங்கையர்களுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுக்க உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார்.
வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கை பணியாளர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (11) அலரி மாளிகையில் இடம்பெற்றது. அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும், மத்திய கிழக்கு நாடுகளில் மாத்திரம் தங்கியிருக்காமல் பயிற்சிகளை வழங்கி ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் பணிபுரிவதற்கான ஏற்பாடுகளையும் செய்து கொடுக்க உள்ளதாக பிரதமர் அங்கு தெரிவித்தார்.
வெளிநாட்டு தொழில் பயிற்சி நிறுவனங்களின் எண்ணிக்கையினை அதிகரிப்பதற்கு அமைச்சர் ஹரின் பெர்னான்டோ அவர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவித்த பிரதமர், வெளிநாட்டு பணியாளர்களுக்கு அவர்கள் செய்கின்ற சேவையினை கௌரவிக்கும் பொருட்டு இன்னும் பல திட்டங்களை முன்னெடுக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
இம்முறை வரவு செலவு திட்டத்தில் 'சிஹின மாளிகாவ' எனும் வீட்டுத் திட்டமொன்றும் வெளிநாட்டில் பணிபுரியும் பணியாளர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமையினையும் பிரதமர் அதன் போது நினைவு கூர்ந்தார்.
கருத்துரையிடுக