அல்ஹஸனாத் தொடர்பாக வாசகர்களுக்கும் பொதுமக்களுக்கும் வழங்கும் தெளிவு


 

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக பாதுகாப்புக் கருதி நாடளாவிய ரீதியில் வீடுகள், நிறுவனங்கள், பள்ளிவாசல்கள் பரிசோதிக்கப்பட்டு வருவதை சகலரும் அறிவர். பரிசோதிக்கப்பட்ட பல முஸ்லிம் வீடுகளின் வரவேற்பறையில் அல்ஹஸனாத் பிரதிகள் காணப்பட்டுள்ளன. அந்த சந்தர்ப்பத்தில் அல்ஹஸனாத் மாத இதழ் பற்றியும் பாதுகாப்புப் பிரிவினர் வினவியுள்ளனர். இது பற்றி அல்ஹஸனாத் வாசகர்கள் எமது கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
 
அல்ஹஸனாத் இதழை வெளியிடும் ஊடக நிறுவனமான ஜஸ்ட் மீடியா பவுண்டேஷன் காரியாலயத்திற்கு வருகை தந்த பாதுகாப்புத் தரப்பினருக்கு எமது வெளியீடுகள் குறித்து நாம் விளக்கமளித்துள்ளதுடன் அல்ஹஸனாத் பிரதிகளையும் வழங்கி வைத்துள்ளோம். 
 
எனவே, நாட்டு மக்களுக்கு பொதுவாகவும் அல்ஹஸனாத் வாசகர்களுக்கு குறிப்பாகவும் அல்ஹஸனாத் வெளியீட்டுடன் தொடர்பான சில விடயங்களை தெளிவுபடுத்த விரும்புகின்றோம்.

▪ அல்ஹஸனாத் 1970ஆம் ஆண்டு முதல் வெளியிடப்படுகின்ற ஒரு குடும்ப மாத இதழ்.
 
▪ இது இலங்கை தேசிய புலமைச் சொத்து அலுவலகத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு வர்த்தமானிப்படுத்தப் பட்டுள்ளது.
 
▪ கல்வி அமைச்சின் கீழ் இயங்குகின்ற இலங்கைத் தேசிய நூலகம் மற்றும் ஆவணவாக்க சேவைகள் சபையிலும் (National Library and Documentation Services Board, Ministry of Education Services) பதிவு செய்யப்பட்டுள்ள அல்ஹஸனாத், சர்வதேச நியம சஞ்சிகை இலக்கத்தையும் (ISSN- International Standard Serial Numbering) பெற்றுள்ளது. (ISSN NO: 1391- 460X)
 
▪ இலங்கை அஞ்சல் திணைக்களத்தில் பத்திரிகைகளுக்கான பதிவைப் பெற்றுள்ள அல்ஹஸனாத், வருடாந்தம் அதனைப் புதுப்பித்தும் வருகிறது. (Registered as News Paper in GPO/QD/132/NEWS/2019)
 
▪ அல்ஹஸனாத்தை வெளியிடும் ஊடக நிறுவனமான ஜஸ்ட் மீடியா பவுண்டேஷன் இலங்கை கம்பனி சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு நிறுவனமாகும்.
 
▪ அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஊடக அங்கீகாரப் பிரிவினால் ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்படும் ஊடக அடையாள அட்டைகளையும் ஜஸ்ட் மீடியா பவுண்டேஷன் நிறுவனத்தின் ஊடகவியலாளர்கள் பெற்றுள்ளனர்.
 
▪ இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் தரவுப் பதிவேட்டில் எமது வெளியீடுகள் அனைத்தும் வருடாந்தம் இற்றைப்படுத்தப்பட்டு (Update) கோவைப்படுத்தப்பட்டு வருகின்றன.
 
நடுநிலைச் சிந்தனையை நோக்கி முஸ்லிம் சமூகத்தை வழிநடத்தும் வகையில் மார்க்க, சமூக, கலாசார, பண்பாட்டு அம்சங்களைச் உள்ளடக்கியதாக கடந்த 49 வருடங்களாக அல்ஹஸனாத் வெளிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 
எனவே, நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில், இஸ்லாமிய குடும்ப இதழான அல்ஹஸனாத் குறித்த மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ள விரும்புவோர் அதன் நிர்வாகத்தை தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.
 
தொடர்புகளுக்கு: 
0777874983
0773783810
0112689324
 
அஷ்ஷெய்க் ஜெம்ஸித் அஸீஸ்
ஆசிரியர்,
அல்ஹஸனாத்


தவறினால் மக்களுடன் இணைந்து போராடுவோம்

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையை விரைவில் சுமுகப்படுத்துவதற்கும் பயங்கரவாதச் செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்ளைக் கைதுசெய்வதற்கும் அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேராயர் கர்தினால் ​மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளை உரியவாறு மேற்கொண்டு குற்றவாளிகளை சட்டத்தின் முன் கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்த ஆண்டகை, தவறும் பட்சத்தில் அரசாங்கத்தின் மந்தமான செயற்பாட்டுக்கு எதிராக மக்களுடன் இணைந்து வீதிக்கு இறங்கத் தயங்கப்போவதில்லை என்றும் தெரிவித்தார். சட்டத்தைத் தாம் கையில் எடுக்க வழிவகுக்க வேண்டாம் என்றும் அவர் அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்வதாகவும் கூறினார்.

புதிய சட்டங்களை உருவாக்குவதற்கு பதிலாக நடைமுறையிலுள்ள சட்டங்களில் திருத்தம் செய்வதும் ஏனைய கட்சிகளின் ஒத்துழைப்புடன் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளை பலப்படுத்துவதும் அவசியமெனவும் பேராயர் தெரிவித்தார்.

நேற்றைய தினம் கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு பின்னர் மக்கள் இன்னும் அச்சத்திலேயே உள்ளனர். அரசியல் துறையிலும் பாராளுமன்றத்திலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளியிலும் தகவல்கள் சகல அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படுவதை காட்டவில்லை.

கட்சி, நிறம் ஏனைய பேதங்களைக் கடந்து தற்போது நாட்டிலுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தி நாட்டைக் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜனாதிபதி, பிரதமர்இ எதிர்க் கட்சித் தலைவர் உள்ளிட்ட ஏனைய அனைத்துக் கட்சிகளின் தலைவர்களையும் கூட்டி நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் பொது கொள்கையொன்றை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். தேர்தலை ஒருபுறம் வைத்துவிட்டு திட்டமிட்ட ரீதியில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்.

தற்போதுள்ள பாதுகாப்பு நிலைமைகள் அமைப்பு ரீதியாக உள்ளதாக தெரியவில்லை. தகவல்கள் கிடைத்தவுடன் சென்று குறித்த இடத்தில் சோதனைகளை நடத்துவதே தற்போது இடம்பெற்று வருகிறது. சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டிய பல பிரதேசங்கள் உள்ளன. அங்கு முறையான சோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆயுதங்கள் வாள்கள், கத்திகள் போன்றவற்றை உடனடியாக கைப்பற்ற வேண்டும்.

கைதானோரை விடுவிப்பதற்கு முன்பதாக அவர்களிடம் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவது அவசியம். சிலவேளைகளில் அவர்களே உண்மையமான குற்றவாளிகளாக இருந்து அவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதற்கு வாய்ப்புகளுண்டு.

அனைத்துப் பிரிவுகளும் ஒன்றிணைந்து தற்போதைய நிலைமையை முறையாக செயற்படுவது அவசியமாகும். துறைசார்ந்தோரின் அனுபவங்களைப் பெற்றுக்கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். நாட்டிலுள்ள மக்கள் கொண்டாடும் விசேட பண்டிகைகள் பல எதிர்வரும் மாதங்களில் உள்ளன. அச்சமயத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் அமைதியை நிலைநாட்டுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும். இதற்காக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரே நோக்குடன் செயற்படுவது அவசியமாகும்.

ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமித்துள்ளதாக தெரியவருகிறது. எனினும் அவர்கள் அமர்வுகளை நடத்தினார்களா, சம்பந்தபட்ட குழுவில் உள்ளோர்கள் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தினார்களா என்பது தொடர்பில் எம்மால் அறியமுடியவில்லை. பெருமளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டுமுள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் இனியும் இடம்பெறாமல் பாதுகாக்கப்பட வேண்டும். அரச நிறுவனங்கள் இதற்கான வேலைத்திட்டங்களை அமைத்து நடைமுறைப்படுத்துவது நல்லது.

முஸ்லிம் மக்களுக்கு எத்தகைய பாதிப்பையும் கத்தோலிக்க மக்கள் ஏற்படுத்தப் போவதில்லை. இதனை நாம் முஸ்லிம் சமூகத்துக்கு உறுதியாக சொல்லமுடியும். நாட்டின் பாதுகாப்பானது நாட்டின் அரசியலைவிட முக்கியமானது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.


தொடர் வெடிப்புச் சம்பவங்களுடன் தேடப்பட்டுவந்த லொறி ஒன்று பொலன்னறுவை, சுங்காவில பகுதியில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. 

குறித்த லொறியுடன் 3 சந்தேகநபர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

EP - PX 2399 என்ற இலக்கத் தகடு கொண்ட லொறி ஒன்றே இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் முடியும் வரை நாட்டில் வெசக், பொசன் பண்டிகைகளை நடத்த வேண்டாமென்று பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
அத்துடன்  50 விகாரைகளில் தற்கொலைத் தாக்குதல்களை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக மேலதிக தகவல்களை தேவையெனில் சிறைக்கு வந்து தன்னை சந்திக்குமாறு பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
இன்று ஹோமாகம நீதவான் நீதிமன்ற வளாகத்தில் வைத்தே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
 (தமிழ் மிரர்)

பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக ஓய்வு பெற்ற முன்னாள் இராணுவ தளபதி ஷாந்த கோட்டேகொட நியமிக்கப்பட்டுள்ளார். 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து அவர் தனது நியமன கடிதத்தை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து பெற்றுக்கொண்டுள்ளார்.

(அத தெரண)


உயிர்தெழுந்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தை அடுத்து போக்குவரத்து சேவையில் பாதுகாப்பு நடவடிக்கை மேலும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

பயணிகளை ஏற்றிச் செல்லும் போது கடைப்பிடிக்க வேண்டிய அனைத்து பாதுகாப்பு வேலைத்திட்டம் குறித்து சாரதிகளுக்கும் நடத்துனர்களுக்கும் தெளிவுப்படுத்தப்பட்டு இருப்பதாக இலங்கைப் போக்குவரத்து சபையின் தலைமை நடவடிக்கை அதிகாரி நிஹால் ஹிதல்ல ஆராச்சி தெரிவித்துள்ளார். 

பஸ் பாதுகாப்பு தொடர்பாக போக்குவரத்து அமைச்சில் எமக்கு விஷேட அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. 

பயணிகளுக்கு அருகாமையில் உள்ள பொதிகள் தொடர்பில் கூடிய அவதானம் செலுத்துமாறும் நாம் கேட்டுக் கொள்கின்றோம். உரிமையாளர் அற்ற நிலையில் காணப்படும் பொதிகளை வைத்திருக்க வேண்டாம் எனவும் அது தொடர்பாக நடத்துனருக்கு அறிவிக்க வேண்டும். இதே போன்று சந்தேகத்திற்கிடமான நபர் அல்லது நபர்கள் காணப்படுவராயின் அவர்கள் தொடர்பாக பொலிஸ் மற்றும் இராணுவத்திற்கு அறிவிப்பதற்கு தொலைபேசி இலக்கங்களையும் நாம் வழங்கியுள்ளோம். 

பஸ்களில் தற்பொழுது பொதிகள் ஏற்றிச் செல்வது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. பயணிகளின் சிறிய பொதிகளை தம்முடன் எடுத்து செல்வதற்கு அனுமதி வழங்கியுள்ளோம். இந்த பொதிகள் பஸ் நடத்துனர்களின் மேற்பார்வைக்கு வைக்கப்பட்ட பின்னர் எடுத்து செல்ல முடியும் என தலைமை நடவடிக்கை அதிகாரி தெரிவித்துள்ளார். 

(அரசாங்க தகவல் திணைக்களம்)


சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சி.டீ. விக்ரமரத்ன, பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். 

இதேவேளை, முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோன் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.


இனரீதியான முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் வகையிலான பிரசாரங்கள் மற்றும் பாதுகாப்புத் தரப்பினரை பிழையாக வழிநடத்தும் தகவல்களை வெளியிடுவது போன்றவற்றிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறு பொது மக்களிடமும், ஊடகங்களிடமும் பாதுகாப்பு அமைச்சு கோரியுள்ளது.  

பாதுகாப்பு அமைச்சில் ஊடக நிலையத்தின் சார்பில் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து இந்தக் கோரிக்கை தொடர்பான அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு அவசரகாலச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இனங்களுக்கிடையில் முரண்பாடுகள் அல்லது வன்முறைகளைத் தோற்றுவிக்கும் வகையில் அல்லது பொது மக்களிடையே காணப்படும் ஒற்றுமையைக் குலைக்கும் வகையில் போலியான செய்திகள், படங்கள், நேர்காணல்கள் மற்றும் ஏனைய வெளியீடுகளை பகிர்ந்துகொள்பவர்களுக்கு எதிராக அவசரகாலச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.  

எந்தவொரு நபர் அல்லது அமைப்பு போலியான பிரசாரங்கள், வதந்திகள் மற்றும் தவறுதலான தகவல்களை பரப்புவதற்கு எவ்வகையான ஊடகங்களைப் பயன்படுத்தினாலும் அவர்களுக்கு எதிராக அவசரகாலச் சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்படும்.


அனைத்து வகையான முகத் திரைகளையும் பயன்படுத்துவதை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இன்று (29) முதல் தடைசெய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளார்.

தேசிய பாதுகாப்பு மற்றும் மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடியதும் நாட்டினுள் மக்களின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு தடையாக அமையக்கூடியதுமான அனைத்து வகையான முகத் திரைகளையும் பயன்படுத்துவதை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இன்று (29) முதல் அவசரகால சட்டத்தின் கீழ் தடைசெய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளார்.

அடையாளத்தை உறுதிப்படுத்துவதில் அடிப்படை அளவீடாக உள்ள நபரொருவரின் முகத்தை தெளிவாக காணக்கூடியதாயிருப்பது அவசியமாகும் என்பது இந்த உத்தரவின் மூலம் மேலும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் தேசிய பாதுகாப்பை கருத்திற்கொண்டு, எந்தவொரு சமூகப் பிரிவையும் அசௌகரியத்திற்குள்ளாக்காத வகையில் அமைதியானதும் நல்லிணக்கமானதுமான சமூகமொன்றை உருவாக்குவதற்காக ஜனாதிபதியினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வெல்லவாய, மஹவெல்லகம முஸ்லிம் வீடொன்றின் முன்னாள் வெடிபொருள் ஒன்றை மறைத்து வைக்க முற்பட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

குறித்த வீட்டின் உரிமையாளர் தொழுகைக்காக மசூதிக்கு சென்று திரும்பி வரும் போது தனது வீட்டிற்கு முன்னாள் சிலர் சந்தேககத்திற்கிடமான முறையில் நடந்து கொள்தை அறிந்த அவர் உடனடியாக பொலிஸாரிற்கு அழைப்பு விடுத்து குறித்த விடயத்தினை தெரிவித்துள்ளார். 

இதனையடுத்து அவ்விடத்திற்கு வருகை தந்த பொலிஸார், குறித்த நபர்களை கைது செய்துள்ளனர். 

இதன்போது அவர்களிடம் இருந்து வெடிபொருள் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். 

குறித்த நபர்கள் இனங்களுக்கு இடையிலான முறுகலை ஏற்படுத்தவதற்காக குறித்த முஸ்லிம் நபரின் வீட்டிற்கு முன்னாள் வெடிபொருளை மறைத்து வைப்பதற்காக வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

(அத தெரண)


ஷங்கிரி-லா தற்கொலை குண்டுதாரியின் மூத்த சகோதரர் தெமடகொட பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 

மொஹமட் இப்ராஹீம் இப்திகார் எனும் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த நபரிடம் இருந்து இரண்டு வாள்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


வெடிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் நாவலபிட்டிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

மொஹமட் சாதிக் அப்துல் ஹக் மற்றும் மொஹமட் சாஹித் அப்துல் ஹக் என்பவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்ட இருவரும் கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

குண்டுவெடிப்பினை மேற்கொண்டு தலைமறைவாகியிருந்த இரண்டு பிரதான சந்தேக நபர்கள் உட்பட சந்தேக நபர்கள் பயணித்த வேன் வண்டியும் வேன் வண்டியினை செலுத்திய சாரதியோடு மூன்று பேர் நாவலபிட்டி பொலிஸாரினால் கைது செய்யபட்டுள்ளதாக நாவலபிட்டி பொலிஸார் தெரிவித்தனர். 

இன்று அதிகாலை இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரன சூழ்நிலை குறித்து நாவலபிட்டி நகரில் உள்ள பள்ளிவாசல் அராபி முஸ்லிம் பாடசாலை போன்ற சந்தேகமான இடங்களை நேற்று (27) நாவலபிட்டி பொலிஸார் இராணுவத்தினர் விஷேட அதிரடி படையினர் ஆகியோர் இணைந்து மேற்கொள்ளபட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகமான முறையில் வேன் வண்டி ஒன்று மீட்கபட்டுள்ளதோடுஇ வேன் வண்டியின் சாரதியையும் நாவலபிட்டி பொலிஸார் கைது செய்தனர். 

கைது செய்யபட்ட வேன் சாரதியிடம் விசாரனைகளை ஆரம்பித்த பொலிஸார்இ குறித்த வேன் யாருடையது இந்த வேனில் பயனித்தவர்கள் யார் என விசாரனைகைள மேற்கொண்ட போதே கொழும்பில் மேற்கொள்ளபட்ட பிரதான குண்டுதாரிகள் இருவர் கம்பளை பகுதியில் உள்ள பாதணி விற்பனை செய்யும் வர்த்தக நிலையத்தில் தலைமறைவாகிள்ளதாகவும் குறித்த இரண்டு சந்தேக நபர்களையும் நான் தான் குறித்த வேன் வண்டியில் ஏற்றிவந்ததாகவும் இவர்கள் இரண்டு பேரும் சகோதரர்கள் என பொலிஸாருக்கு குறித்த வேன்சாரதி வாக்குமூலம் வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் 

சாரதியினால் வழங்கபட்ட வாக்குமுலத்தின் அடிப்படையில் கம்பளை பகுதியில் உள்ள பாதணி விற்பனை நிலையத்தினை நாவலபிட்டி பொலிஸார் சுற்றிவளைத்த போதும் குறித்த வர்த்தக நிலையம் மூடப்பட்டு இருந்தது. 

இதன் போது குறித்த வர்த்தக நிலையத்தில் போடப்பட்டிருநத பூட்டிளை உடைத்து பாதணி விற்பனை நிலையத்திற்குள் புகுந்த பொலிஸார் இரண்டு பிரதான சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளதாக நாவலபிட்டி பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. 


இஸ்லாமிய பெண்கள் அணிகின்ற உடம்பு முழுவதும் மறைகின்ற புர்கா ஆடையினை தடை செய்வதற்கு அமைச்சர்கள் சிலர் யோசனையொன்றை முன்வைத்த போது, அந்த யோசனைக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தார் என ஊடகங்களில் வெளியான செய்திகள் முழுமையாக உண்மைக்கு புறம்பானது என பிரதமர் அலுவலகம் அறிவித்துக் கொள்கின்றது.

மேற்கூறப்பட்ட செய்தியின் ஊடாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் புர்காவினை தடை செய்வதற்கான சட்டத்தினை இயற்றுவதற்கு எதிராக செயற்படுகின்றார் எனும் மாயையினை ஏற்படுத்துவதற்கு முயற்சி செய்யப்பட்டுள்ளது. 

உண்மையில், புர்கா பயன்பாட்டினை நிறுத்துவதற்காக முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையினால் யோசனையொன்று நிறைவேற்றப்பட்டுள்ளமையினால், நீதியமைச்சர் அந்த சபையுடன் இணைந்து கலந்துரையாடி சட்ட மூலம் ஒன்றை தயாரிக்குமாறே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் அதன் போது தெரிவித்துள்ளார்.  




2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ஆற்றிய விசேட உரை

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் ஒரு வாரத்தின் பின்னர் பேராயர் அவர்கள் நடாத்திய ஞாயிறு தெய்வ ஆராதனையிலும், அதே போன்று கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய தெய்வ ஆராதனைகளிலும் நான் கலந்து கொண்டேன். இந்த வாரத்தினுள் குறித்த தாக்குதல் தொடர்பில் பல தகவல்கள் கிடைத்துள்ளதுடன் தாக்குதலுடன் தொடர்பான பலர் இனங்காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜிஹாத் எனும் பெயரில் பயங்கரவாதிகள் மேற்கொண்டு வருகின்ற இத்தாக்குதல்கள் தொடர்பில், சந்தேக நபர்களை உடனடியாக இனங்கண்டு, அவ்வனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி, இதனை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டி உள்ளது. நாங்கள் அதற்காக உரிய தரப்பினருக்கு கட்டளையிட்டு இருக்கின்றோம். முழு அரசாங்கமும் அந்த கட்டளையினை விடுத்திருக்கின்றது. ஜனாதிபதி, நான் மற்றும் அமைச்சரவை இந்த கட்டளைகளை உரிய தரப்பினர்களுக்கு வழங்கி உள்ளது. மற்றுமொரு 30 வருட யுத்தம் ஏற்படுவதனை நாம் ஒரு போதும் எதிர்பார்க்கவில்லை.

இந்த பயங்கரவாத தாக்குதல்களுக்கு எதிரான தேடுதல் மற்றும் விசாரணை நடவடிக்கைகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை பகல் போதிலேயே ஆரம்பிக்கப்பட்டன. குறித்த சம்பவம் நிகழ்ந்து ஒரு சில மணித்தியாலங்களுக்குள்ளேயே தெமட்டகொட பகுதியில் தங்கியிருந்த சந்தேக நபர்கள் சிலரை கைது செய்வதற்கு முடிந்தது. அதன் போது காவல் துறையினை சேர்ந்த மூன்று அதிகாரிகள் தமது உயிரையும் தியாகம் செய்தனர். அதற்கு மேலாக பாதுகாப்பு தரப்பினை சேர்ந்த ஒரு உயிர் கூட இந்த தேடுதல் நடவடிக்கைகளின் போது இழக்கப்பட வில்லை என்பதை குறிப்பிட வேண்டும்.

கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் சம்மாந்துறை, நிந்தவூர், அட்டாளைச்சேனை மற்றும் சாய்ந்தமருது பிரதேசங்களில் உள்ள சில வீடுகளில் இருந்து பயங்கரவாதிகள் மற்றும் அவர்களின் ஆயுதங்களை கைப்பற்றுவதற்கு பாதுகாப்பு தரப்பினருக்கு முடிந்தது. இந்த நடவடிக்கைகளை வெற்றிகரமாக மேற்கொள்ள, அப்பிரதேசத்தில் வாழ்கின்ற முஸ்லிம் மக்கள் பெற்றுக் கொடுத்த உளவுத் தகவல்களே பெரும் உதவியாக அமைந்தது. குண்டுகள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படுகின்ற இரசாயன பதார்த்தங்கள் உட்பட மேலும் பல உபகரணங்கள் அந்த வீடுகளில் இருந்து மீட்கப்பட்டது. ஒரு வீட்டில் மறைந்திருந்த பயங்கரவாதிகள் அவர்களது குடும்பம் சகிதம் தற்கொலை செய்து கொண்டனர். அந்த சுற்றிவளைப்பின் போது 15 பேர் உயிரிழந்தமை தொடர்பில் நாம் அறிவோம். மற்றுமொரு தரப்பினர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அவர்களை இனங்காணும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. 

வனாத்தவில்லு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதங்களினுள் டி56 ரக துப்பாக்கிகளும் காணப்படுகின்றன. கம்பளையிலும் மிக முக்கியமான சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது பல சந்தேக நபர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதற்காக தொடர்ந்தும் பங்களிப்பு செய்து வருகின்ற தரப்பினர்களுக்கு நான் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்ள வேண்டியுள்ளது. 

எமக்கு ஏழு புலனாய்வுப் பிரிவுகள் உள்ளன. அவர்கள் கடந்த மூன்று, நான்கு வருடங்களினுள் வெளிநாட்டு புலனாய்வு சேவைகளுடன் மிகக் கிட்டிய தொடர்புகளை ஏற்படுத்தி தமது பணிகளை மேற்கொண்டு செல்கின்றனர். தற்போது அதை விடவும் நெருக்கமான தொடர்பினை ஏற்படுத்தி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். மேலும், குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இந்த சம்பவம் தொடர்பில் பரிசீலனைகள் மேற்கொண்டு கடந்த வாரத்தில் பல சந்தேக நபர்களை இனங்கண்டு கொண்டனர். நாங்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினை பலப்படுத்தி உள்ளோம். மேலும், காவல் துறையினர், முப்படையினர் துரிதமாக செயற்பட்டு சந்தேக நபர்களை கைது செய்வதற்கு நடவடிக்கைகளை எடுத்தனர். இவ்வனைத்து தரப்பினருக்கும் நாட்டு மக்களின் நன்றிகள் உரித்தாக வேண்டும். 

இந்த தாக்குதல்களை மேற்கொண்டிருப்பது முறையாக கட்டமைக்கப்பட்ட ஒரு சிறு குழுவினர் என்பதை நான் இங்கு குறிப்பிட வேண்டும். அவர்கள் சாதாரண முஸ்லிம் இனத்தவர்கள் இல்லை. வழிக்கெட்டு சென்ற தீவிரவாத கருத்துக்கள் கொண்ட சிலர் என்பதை குறிப்பிட வேண்டியுள்ளது. மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் அதிகாரிகள் இருவரை கொலை செய்ததன் ஊடாக அவர்கள் இந்த குற்றங்களை செய்வதற்கு ஆரம்பித்துள்ளனர். கடந்த வருடம் நவம்பர் மாதம் 30ம் திகதி அவர்கள் இந்த தாக்குதல்களை மேற்கொண்டனர். அதன் பின்னர் மாவனல்லை புத்தர் சிலையினை உடைத்து, அமைச்சர் கபீர் ஹாஷம் அவர்களின் பிரத்தியேக செயலாளரை சுட்டனர். வனாத்தவில்லு அவர்களது பயிற்சி முகாமாக இருந்தது. இந்த அழிவுகளை அவர்கள் அதன் பின்னரே மேற்கொண்டனர். இந்த செயற்பாட்டாளர்களுக்கு எதிராக நாம் தற்போது நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

இந்நாட்டில் பல்வேறு கல்வி நிறுவனங்களில் வீசா இன்றி பணிபுரிகின்ற ஆசிரியர்கள் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் அனைவரையும் நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கு முஸ்லிம் சமய விவகார அமைச்சும், உள்நாட்டு அலுவல்கள் அமைச்சும் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. அத்துடன் முஸ்லிம் சமூகத்துடன் உரிய அமைச்சுக்கள் கலந்துரையாடி, பல்வேறு சட்டங்கள் மற்றும் எடுக்க நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானித்து, அரசாங்கத்திடம் முன்வைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 

முஸ்லிம் மக்கள் வழங்குகின்ற ஒத்துழைப்புகளை பாராட்ட வேண்டும். அவர்களுக்கு எவ்வித இடையூறுகளையும் விளைவிக்க வேண்டாம் என நான் கேட்டுக் கொள்கின்றேன். நாங்கள் அனைவரும் இலங்கையர்கள் எனும் ரீதியில் ஜிஹாத் பயங்கரவாதிகளை இல்லாதொழிப்பதற்கு ஒன்றாக செயற்படுவோம். உள்நாட்டலுவல்கள் அமைச்சரும், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரும் இணைந்து இந்நாட்டு எல்லையினுள் பிரவேசித்தல், வெளிச் செல்லல், பொருட்கள் தொடர்பில் நாம் ஏற்றுக் கொண்டுள்ள சட்ட திட்டங்களின் அடிப்படையில் செயற்பட்டு வருகின்றனர். அதனுடன் தொடர்பான அனைத்து திணைக்களங்களும் அவற்றுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றன. இன்டர்போல் நிறுவனத்துடன் இணைந்து தகவல்களை பரிமாறிக் கொள்ளும் வேலைத்திட்டத்தினையும் முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம். தற்போது அதன் முன்னேற்றம் தொடர்பில் அறிக்கை ஒன்றை பெற்று உள்ளோம். அடுத்த முன்னேற்ற வேலைத்திட்டங்களை துரித கதியில் நிறைவேற்றுவதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம்.

உரிய பயங்கரவாத அமைப்பினை தடை செய்வதற்காக நாங்கள் தற்போது அவசர கால சட்டத்தின் ஊடாக செயற்பட்டு வருகின்றோம். இலங்கைக்கு வெளியில் இடம்பெறும் பயங்கரவாத செயல்களுக்கு, வேறு நாட்டு பயங்கரவாத குழுக்களில் தொடர்புபடுகின்ற இலங்கையர்கள் தொடர்பில் செயற்படுவது சம்பந்தமான சட்டங்கள் எமது சட்டத்தில் இல்லை. குற்றவியல் சட்டங்கள் எமது நாட்டு எல்லையினுள் மேற்கொள்ளப்படுகின்ற குற்றங்களுக்கு மாத்திரமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. 1979ம் ஆண்டு பயங்கரவாத தடுப்பு சட்டம் இந்த நாட்டில் மேற்கொள்ளப்படுகின்ற பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு மாத்திரமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தென் இந்திய முகாம்களில் உள்ள நபர்களும் பின்னர் அந்த சட்டத்தினுள் உள்வாங்கப்பட்டுள்ளனர். அதன் இரண்டாம், மூன்றாம் உறுப்புரைகளில் அது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

1974ம் ஆண்டில் இங்கிலாந்து சட்டத்தின் படி நாம் இங்கு செயற்பட்டிருக்கின்றோம். அன்று அந்த சட்டமும் வடக்கு அயர்லாந்து பயங்கரவாதிகளுக்கு மாத்திரமே செயற்படுத்தப்பட்டது.

இந்த இடைவெளியினை நிரப்புவதற்காக வேண்டி நாங்கள் மீள் பயங்கரவாத தடுப்பு சட்ட மூலத்தில் நாம் பல அம்சங்களை உள்ளடக்கி உள்ளோம். அந்த சட்ட மூலத்தின் மூன்றாவது உறுப்புரையில் பின்வருமாறு குறிப்பிடப்படுகின்றது. 'நபர் ஒருவர், ஏதேனுமொரு இனக்குழுவினரை அச்சுறுத்துவாரெனின், இலங்கையில் அல்லது வெளிநாட்டு அரசாங்கத்திற்கு சட்ட விரோதமான முறையில் தாக்கம் செலுத்துவாரெனின், அந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளை நிறுத்துவாரெனின், ஏதேனுமொரு நாட்டின் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தலாக இருப்பாரெனின் அவர் இலங்கையிலும் குற்றம் புரிந்தவர் ஆவார்' என அங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. 

புதிய சட்டத்தினை நிறைவேற்றிக் கொள்வதற்கு முடியாமல் போனமையே, இலங்கையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்துக்குரிய சந்தேகநபர்களை, இந்த குற்றங்களை மேற்கொள்வதற்கு முன்னர், அவர்களுக்கு எதிராக சட்டத்தினை நிலைநிறுத்தவதற்கு தடையாக அமைந்தது. இந்த சட்டமூலத்தினை நாம் 2018ம் ஆண்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தோம். தற்போது இந்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் உரிய குழுவில் சிக்கி இருக்கின்றது. இந்த குழுவில் இருந்து கொண்டு 'தேங்காய் துறுவாமல்' உடனடியாக இந்த சட்டமூலத்தை பாராளுமன்றத்திற்கு கொண்டு வருமாறு இங்கு நான் கேட்டுக் கொள்கின்றேன். அதனை தாமதப்படுத்தியதன் மூலம் எமக்கு இந்த பயங்கரவாதிகளை சட்டத்தின் முன் கொண்டு வருவதற்கான சந்தர்ப்பம் இல்லாமல் போனது. தற்போதாவது நாங்கள் அந்த பணியினை துரித கதியில் மேற்கொள்ள வேண்டும்.

அதேபோன்று நாங்கள் இன்னும் பல சட்டங்களை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றோம். இந்த ஜிஹாத் பயங்கரவாதத்தினை உடனடியாக அழித்து விட வேண்டும். இந்த பயங்கரவாதிகள் கிறிஸ்தவர்களுக்கு மாத்திரமல்ல முஸ்லிம்களுக்கும் பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகின்றனர். புத்தர் சிலைகளை உடைக்க ஆரம்பித்தனர். இந்து கோயில்களில் பிரச்சினைகளை ஏற்படுத்தினர். 

அவர்கள் தீவிரவாத குழுவினர் என்பதை தெளிவாக கூற வேண்டும். அவர்கள் எவ்வித மதத்தினையும் சார்ந்தவர்கள் அல்லர். அப்படியெனின் இந்த தீவிரவாதத்தினை ஒழித்து, இவ்வாறான கொள்கைகள் பரப்பப்படுவதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளை நாம் எடுக்க வேண்டும். தற்போது அவர்களில் பெருல்பாலானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலர் உயிரிழந்துள்ளனர். தற்போது எமக்கு வழமையான நிலைக்கு திரும்பக் கூடிய சந்தர்ப்பம் இருக்கின்றது. முப்படையினரும், காவல் துறையினரும் பொதுமக்களுக்கு அது தொடர்பில் அறிவிப்பார்கள். ஆகவே, நாம் சாதாரண வாழ்க்கையினை இயல்பான நிலைக்கு மாற்றுவதற்கு ஒத்துழைப்பு நல்குவோம்.            

இயக்கவாதமும் தீவிரவாதமும்
=====================
வை எல் எஸ் ஹமீட்

இந்நாட்டில் முஸ்லிம்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக எல்லா சமூகங்களுடனும் இணைந்து வாழ்கிறார்கள். எப்போதும் அமைதியை விரும்புகின்ற ஒரு சமூகமாகவே முஸ்லிம்கள் அடையாளம் காணப்பட்டு வந்திருக்கிறார்கள்.

அன்று காத்தான்குடிப் பள்ளிவாசல், சதாம் ஹசைன் கிராமம், அழிஞ்சப்பொத்தானை, கல்முனை, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, அக்கரைப்பற்று,  மூதூர், வட புல வெளியேற்றம்; என்று முஸ்லிம்கள் வடக்கு, கிழக்கு பூராகவும் துவம்சம் செய்யப்பட்டபோது அவர்கள் ஆயுதம் தூக்கவில்லை.

வட கிழக்கிற்கு வெளியே மாவனல்லையில், அளுத்கமையில், கின்தோட்டையில், திகனயில் என்றெல்லாம் இனவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டபோதும் ஆயுதம் தூக்கவில்லை. இவ்வாறு அமைதியான சமூகம் என்று ஆயிரம் வருடங்களுக்குமேலாக பெயரெடுத்த ஒரு சமூகம் ஒரே நாளில் ஒரு பயங்கரவாவாத சமூகமாக பார்க்கப்படுகின்ற நிலை ஏற்பட்டுவிட்டது.

இந்த தீவிரவாத குழு தொடர்பாக இஸ்லாமிய அமைப்புக்கள் மற்றும் பிரமுகர்கள்  ஏற்கனவே அரசுக்கு தகவல் வழங்கியும், தாக்குதலுக்கு முன்பதாக இந்தியா இது தொடர்பாக எச்சரித்திருந்தும் அதிகாரிகள் அசமந்தமாக இருந்ததாக குற்றம் சாட்டப்படுகிறது.  சிலவேளை முஸ்லிம்கள் மீது வைத்த அபரிமித நம்பிக்கை அந்த அசமந்தத்திற்கு காரணமாக அமைந்திருக்கலாம்.

இந்தப் பயங்கரவாதம் துடைத்தெறிப்பட வேண்டும். இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும். முஸ்லிம்களைப் பொறுத்தவரை தாக்குதல் நடந்த கணத்திலிருந்து இப்பயங்கரவாதிகளுக்கெதிராக குமுறிக் கொண்டிருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமது ஒருமைப்பாட்டை முழுமையாக தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

எங்கிருந்து வந்தது தீவிரவாதம்?
——————————————
இவ்வாறு அமைதியை விரும்புகின்ற ஒரு சமூகத்திற்குள் எங்கிருந்து இத்தீவிரவாதம் வந்திருக்கலாம்? ஒரு சிறு எண்ணிக்கையானவர்களாக அவர்கள் இருந்தபோதும்! அதைத் துடைத் தெறிவது எப்படி? என்பதை ஒரு சமூகம் என்ற ரீதியில் சிந்திக்க வேண்டியது, நமது கடமையாகும். தவறின், இதனால் பாதிக்கப்படப்போவது நாம்தான்.

இந்தத் தாக்குதலின் பின்னணி தொடர்பாக பல பல ஊகங்கள் வெளியிடப்படுகின்றன. அரசியலுக்காக உள்நாட்டு சக்திகள் என்றும் தமது பிராந்திய கேந்திர நலனுக்காக, இலங்கையில் காலூன்றுவதற்காக வெளிநாட்டு சக்திகள் செயற்பட்டன என்றும் ISIS என்றும் பல அபிப்பிராயங்கள் முன்வைக்கப்படுகின்றன.

இங்கு நாம் சிந்திக்க வேண்டியது பின்னாலிருந்து இயக்கிய சக்திகள் எதுவாக இருந்தபோதும் செயற்பட்டவர்கள் நமது சமூகத்தைச் சேர்ந்தவர்களே, என்பதாகும். அதனால்தான்  இது குறித்து நாம் ஆவேசப்படுகின்றோம், வேதனை அடைகின்றோம்.

நோக்கமென்ன?
———————-
இயக்கியவர்களின் நோக்கம் எதுவாக இருந்தபோதும் இயங்கியவர்களின் நோக்கமென்ன? இது ஒரு சாதாரண தாக்குதல் அல்ல. இது ஒரு தற்கொலைத் தாக்குதல். இதில் ஈடுபட்டவர்கள் பணத்தாசையில் செய்திருக்க முடியாது. ஏனெனில் அவ்வாறாயின் அந்தப் பணத்தை அவர்கள் அனுபவிக்க உயிர்வாழ வேண்டுமென்றே விரும்புவார்கள். மட்டுமல்ல, இதில் ஈடுபட்டவர்கள் நன்கு படித்தவர்களும் பணக்காரக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் என்று கூறப்படுகின்றது.

பணம் காரணமில்லையெனில் ஏதாவது ஒரு பாரிய இலட்சியம் இருந்திருக்க வேண்டும். விடுதலைப் புலிகள் தற்கொலைதாரியாகி உயிர்நீத்ததற்குப் பின்னால் தமது சந்ததியினருக்கென்று ஒரு நாடு என்கின்ற இலட்சியம் அவர்களுக்கிருந்தது. அந்த இலட்சியத்திற்கு முன்னால் அந்த உயிர் அவர்களுக்கு ஒரு தூசாகப்பட்டது. முஸ்லிம்களுக்கு அவ்வாறு ஒரு இலக்கு, இலட்சியம் இருக்கின்றதா? நிச்சயமாக இல்லை. இருப்பது சாத்தியமுமில்லை. அவ்வாறாயின் அவர்களை இந்த நிலைமைக்கு கொண்டுசென்றது எது?

யுத்தம் நிறைவுபெற்றதும் பேரினவாதம் துரதிஷ்டவசமாக முஸ்லிம்களை நோக்கித் திரும்பியது உண்மை. அது சில வாலிபர்களை விரக்தியின் விளிம்பிற்குத் தள்ளியிருக்கலாம். அப்பொழுது அமைதியாக இருந்துவிட்டு இப்பொழுது இத்தற்கொலைத் தாக்குதலை நடாத்தி அடையமுற்பட்டதென்ன? குறிப்பாக கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் என்றுமே இலங்கையில் இனமுரண்பாடு இருந்ததில்லை அந்நிலையில் இத்தாக்குதல் ஏன்? இதைப் பற்றி சிந்திப்பது நமது கடமையில்லையா?

இங்கு ஒன்று புரிகிறது. அவர்கள் உள்ளத்தில் விரக்தி இருந்திருக்கலாம். அது முஸ்லிம்களுக்கெதிரான இலங்கை நிகழ்வுகள் மாத்திரமல்ல; சர்வதேச நிகழ்வுகளாகவும் இருக்கலாம். ஆனாலும் அவர்களின் உயிர்களை இழந்து அடையமுற்பட்டது பணமுமல்ல; தனி நாடுமல்ல; என்றால் அவர்களது இலக்கு “ மறுமை விமோசனமாகத்தான் இருக்கமுடியும். எனவே, அவர்கள் மறுமையின் ஆசையினை ஊட்டி “ மூளைச் சலவை” செய்ப்பட்டிருக்கிறார்கள்; என்பது தெளிவாகின்றது. இதற்காக மார்க்கம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

சாய்ந்தமருதில் உயிரிழந்த தற்கொலைதாரிகளும் அவர்கள் வெளியிட்ட வீடியோவில் மறுமையைப் பற்றியும் சுவர்க்கத்தைப்பற்றியுமே பேசுகிறார்கள். தனது மனைவி, பிள்ளைகளையும் கூடவே அழைத்துவந்து உயிர்ப்பலி கொடுத்தால் அவர்களுக்கும் சுவர்க்கம் கிடைக்கும் என்று நம்புகின்ற அளவு மூளைச்சலவை நடைபெற்றிருக்கிறது.

 வெறுமனே ஒருவனைக் கூட்டிவந்து, முஸ்லிம்களுக்கு அநியாயம் நடக்கிறது; நீ தற்கொலைதாரியாக மாறி இவர்களைக் கொல்லு, உனக்கு சுவர்க்கம் இலகுவாக கிடைக்கும்; என்றால் அவ்வளவு இலகுவாக அவன் தன் உயிரைத் தியாகம் செய்ய முன்வந்துவிடுவானா? நிச்சயமாக இல்லை.

முதலாவது, அவனிடத்திலும் ஏதோ ஒருவகை தீவிர சிந்தனை இருக்கவேண்டும். அந்த சிந்தனை வெறும் உலகத்தோடு தொடர்புடையதாக இருந்தால் அவன் உலக இலட்சியத்தின் மூலம்தான் மூளைச் சலவை செய்யப்பட்டு தற்கொலைதாரியாக மாற்றப்படலாம். இங்கு அடைவதற்கு விடுதலைப்புலிகளைப்போல் உலக இலட்சியம் இல்லாதபோது அது மறுமை இலட்சியமாகத்தான் இருக்கவேண்டும்; அதற்கு மார்க்கம் அடிப்படையாக இருக்கவேண்டும்; என்றால் அவனிடம் மார்க்க விடயத்தில் தீவிர சிந்தனை இருக்கவேண்டும்.

மார்க்க விடயத்தில் தீவிர சிந்தனை உள்ளவனை மறுமையின் ஆசையைக்காட்டி மூளைச்சலவை செய்வது இலகுவாக இருக்கும். ஏனெனில் ஏற்கனவே அவனது மார்க்கரீதியான தீவிர சிந்தனை என்பது பாதி மூளைச் சலவையாகும். அந்த பாதி மூளைச்சலவையில் இருப்பவனை தீயசக்திகள் சில சுயநல முஸ்லிம்கள் மூலமாக ஆயுத கலாச்சாரத்தை நோக்கித் திருப்புவதற்கு  மிகுதிப் பாதி மூளைச் சலவையை செய்வதற்கு மறுமையின் ஆசையை ஊட்டலாம்.

இங்கு இருக்கின்ற அடிப்படை விடயம் என்னவென்றால் அவன் தெளிவாக சிந்திக்க முடியாதவன் என்ற அவனது பலயீனம்தான் அவனை ஏற்கனவே மார்க்கரீதியான தீவிர சிந்தனையை நோக்கி அவனை பாதி மூளைச்சலவைக்குட்பட  உதவியது.

அவ்வாறு ஏற்கனவே பாதி மூளைச்சலவையில் இருப்பவர்களுள்  சிந்தனைப் பலவீனத்தின் உச்சத்தில் இருப்பவர்கள் சிலரை அதே மார்கத்தையும் மறுமையுயும் சொல்லி பயங்கரவாதியாக மாற்றப்படுகிறது. அடுத்தவர்களைக் கொலைசெய்து தானும் தற்கொலை செய்தால் தனக்கு எவ்வாறு சுவர்க்கம் கிடைக்கும்; என்றெல்லாம் அவன் அமைதியாக உட்கார்ந்து சிந்திக்குமளவுக்கோ அல்லது மார்க்க அறிஞர்களிடம் வினவுவதற்கோ முடியாத அளவு ஒரு வகைச் சிந்தனை போதை அவனுக்கு ஏற்றப்படுகின்றது.

எனவே, சுருக்கம் என்னவென்றால் பயங்கரவாத நோக்கமோ, ஆயுதம் தூக்கும் நோக்கமோ இல்லாமல் வேறு வேறு காரணங்களுக்காக மார்க்கத்தில் கடும்போக்குவாத சிந்தனையை நோக்கி பாதி மூளைச்சலவை செய்யப்பட்ட சிந்தனைப் பலம் குறைந்தவர்களுக்குள்ளிருந்துதான் இவ்வாறான பயங்கரவாதிகள் உருவாக்கப்பட முடியும். அதன் விளைவை மொத்த சமூகமும் முகம் கொடுக்க வேண்டி வருகின்றது.

இந்தப்பின்னணியில்தான் ஆயுத நோக்கமற்ற முன்பாதி மூளைச்சலவை எவ்வாறு நம் சமூகத்தில் இடம்பெறுகிறது; என்பதை மிகவும் நுணுக்கமாக நாம் ஆராயவேண்டும். இந்த முன்பாதி மூளைச்சலவை தடுக்கப்படமுடியுமானால் பின்பாதிக்கான மூளைச் சலவைக்கான சாத்தியம் மிகவும் அபூர்வமாகவிடும்.

இந்த விடயத்தில் நாம் உணர்ச்சிகளை ஒரு புறம் ஒதுக்கி வைத்துவிட்டு, இயக்கக் கண்ணாடிபோடாமல் நடுநிலையாக சமூக கோணத்தில் இருந்து பார்த்தால் மட்டும்தான் உண்மை புரியும். இந்த முதல்பாதி மூளைச் சலவைதான் இயக்கவாதத்துடன் தொடர்புபட்டது. எனவே, இயக்கவாதம் தொடர்பாக சற்று ஆழமாக ஆராயவேண்டும்.

இயக்கவாதம்
——————
இஸ்லாம் 1400 வருடங்களுக்குமுன் தோன்றி இந்த உலகமெலாம் வியாபித்திருக்கின்றது. இஸ்லாம் இவ்வாறு வளர்ந்தது இயக்கங்கள் மூலமா? என்பதை நாம் சிந்திக்க வேண்டும். இயக்கங்கள் தோன்றியது பிந்திய காலத்திலாகும். இயக்கங்கள் என்று தோன்ற ஆரம்பித்ததோ அன்று முஸ்லிம்களுக்கு மத்தியில் பிளவுகளும் ஆரம்பித்தது; என்பது வரலாற்று உண்மையா? இஸ்லாம் வளர்ந்தென்பது வரலாற்று உண்மையா? என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்.

காலம் செல்லச்செல்ல இயக்கங்கள் அதிகரித்து இன்று எத்தனை இயக்கங்கள் நமது இந்த சிறிய நாட்டிலேயே இருக்கின்றன; என்று நமக்கே தெரியாத அளவு அதிகரித்திருக்கிறது.

சிந்தனைக்கு வேலை
——————————
இஸ்லாம் அல்லாஹ்வின் தூதர் ( ஸல்) என்ற ஒருவர் ஊடாக வந்து உலகெலாம் வியாபிக்க ஆரம்பித்தது. ஆனாலும் ஒரே இஸ்லாமாகத்தான் இருந்தது. காலங்களில் சிறந்த காலமாக மூன்று காலங்களைப் குறிப்பிட்டார்கள் (ஸல் ) அவர்கள். அந்தக்காலத்தில்தான் மத்ஹபுடைய இமாம்கள் தோன்றினார்கள்.

ஹதீஸ்களின்படி காலஞ்செல்லச் செல்ல இஸ்லாத்தில் குழப்பங்கள் கூடவே வாய்ப்பிருக்கின்றது. சுருங்கக்கூறின் இன்றைவிட நேற்று சிறந்ததாகும். நாளையைவிட இன்று சிறந்ததாகும். இதுதான் யதார்த்தம்.

புதிதாக தோன்றிய இயக்கங்கள்
——————————————
புதிதாக தோன்றிய இயக்கங்கள் என்ன கூறின? அதுவரை ஒரே இஸ்லாமாக நடைமுறைப்படுத்தப்பட்டவற்றில் பல பிழைகளைக் கண்டு,  தாமே சரி என்றார்கள். அதாவது தங்களது காலத்தைவிட சிறந்த காலத்தில் வாழ்ந்தவர்கள் பிழையான பாதையில் இருந்ததாகவும் தாமே சரியான பாதையில் இருப்பதாகவும் கூறினார்கள்.

அதன்பின்னால் வந்த இயக்கம் என்ன கூறினார்கள்? முன்னால் வந்தவர்கள், முந்திய இயக்கம் உட்பட அனைத்தும் பிழை, நாமே சரியான பாதை என்றார்கள். முந்திய இயக்கம் நாமே சரி என்றது. பிந்திய இயக்கம் இல்லை, நாமே சரியென்றது. அதேநேரம் (ஸல்) அவர்களில் இருந்து புறப்பட்ட ஒரிஜினல் இஸ்லாம் எந்த இயக்கமுமில்லாமல் அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டுசெல்லப்பட்டுக்கொண்டே வந்தது.

தற்போது நமது நாட்டில் வரலாற்றில் இல்லாத அளவு நாளுக்கு நாள் இயக்கங்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன.

இந்த இயக்கங்களுக்கும் ஒரிஜினல் இஸ்லாத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன?
——————————————————
இஸ்லாம் என்பது குர்ஆனும் ஹதீஸும்தான் என்பதில் கருத்து வேறுபாடு இல்லை. குர்ஆனை பலரும் புரியக்கூடியதாக இலகுவாக இறக்கியிருக்கின்றோம்; என்கின்ற இறைவன்தான் முழுக்கடலும் மையாக மாறினாலும் பொருளை எழுதி முடியாது, என்றும் கூறியிருக்கின்றான்.

குர்ஆன், ஹதீஸை ஒவ்வொரு தனிமனிதனும் சுயமாகப் புரிந்து இஸ்லாத்தைக் கடைப்பிடிக்க முடியாது; என்பதனால்தான் உலமாக்களை நபிமாரின் வாரிசுகள்; என்றார்கள் ( ஸல் ) அவர்கள்.

இதன்பொருள் பாமரராகிய நமக்கு குர்ஆன், ஹதீஸுக்கு வியாக்கானம் தேவை.  இந்த வியாக்கானத்தை உலமாக்கள்தான் தரவேண்டும். ஆனால் ஒவ்வொரு உலமாவும் சொந்தமாகத் தரமுடியுமா? குர்ஆன், ஹதீஸுக்கு காலத்திற்கு காலம், அல்லது இயக்கத்திற்கு இயக்கம், அல்லது மௌலவிக்கு மௌலவி வியாக்கியானம் வேறுபட முடியாது. கால ஓட்டத்திற்கு ஏற்ப சில புதிய சூழ்நிலைகளுக்கும் பொருந்தக்கூடிய விதத்தில் சில வியாக்கியானங்கள் தேவைப்படுவது வேறு. ஆனால் அடிப்படை வியாக்கினங்கள் வேறுபட முடியாது. அன்றிருந்து இன்றுவரை ஒரே வியாக்கியான அடிப்படைதான் இருக்கமுடியும்.

இந்த வியாக்கானங்களின் அடிப்படையில்தான் அந்த சிறப்பான காலத்தில் மத்ஹபுடைய இமாம்கள் உருவானார்கள். பெரும் குத்புமார்கள், புகஹாக்கள் எல்லாம் தோன்றினார்கள்.அவர்கள் தொகுத்த சட்டங்கள், வியாக்கியானங்களை அதன்பின்னால் பல நூறு ஆண்டுகளாக வந்த உலமாக்கள் பிழைகாணவில்லை. புகாரீ இமாம்கூட ஒரு மத்ஹபைத்தான் பின்பற்றினார்கள். தன்னை அந்தளவு அறிவாளியக அவர்கள் கருதவில்லை. பின் தோன்றிய இயக்கங்கள்தான் பிழைகண்டன.

இன்று இருக்கின்ற இயக்கங்கள் நேற்றுவரை இருந்த இயக்கங்கள் எல்லாம் பிழை என்க, நாளை தோன்றுகின்ற இயக்கங்கள் இன்றைய இயக்கங்களும் பிழை என்பார்கள். ஒரு பிழைக்கு இன்னொரு பிழை, பிழையாகத் தெரிவதில் வியப்பில்லை. அதேநேரம் ஒரிஜினல் இஸ்லாம் 1400 ஆண்டுகளாக மாற்றமின்றி தொடர்கின்றது.

இயக்கங்களின் பிரச்சினை வியாக்கியானமே
———————————————————-
இந்த இயக்கங்களில் அதிகமானவை முன்வைக்கும் வாதம், மத்ஹபுக்களை அல்லது இமாம்களைப் பின்பற்றவேண்டும்; என்று எங்கே கூறப்பட்டுள்ளது? குர்ஆன், ஹதீஸைத்தான் பின்பற்றச் சொல்லப்பட்டிருக்கின்றது. குர்ஆன் இப்படித்தான் சொல்கிறது. ஹதீஸ் இப்படித்தான் சொல்கிறது; என்கிறார்கள்.

 சிந்தனைப் பலம் குறைந்த, தெளிவு குறைந்தவர்கள் இவர்களது இந்தத் தந்திரக் கூற்றை சரிகாண்கிறார்கள். அங்குதான் வழிகேடு ஆரம்பிக்கின்றது. மார்க்கத் தீவிரவாதத்திற்கான வித்து நடப்படுகின்றது.

குர்ஆன், ஹதீஸைத்தீன் பின்பற்றவேண்டும். மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் குர்ஆனும் ஹதீஸும் இன்று தமிழில், ஆங்கிலத்தில் என்று புரியக்கூடிய மொழிகளிலெல்லாம் இருக்கின்றது. இடையில் இவர்கள் ஏன் வியாக்கியானம் செய்யவேண்டும்? ஏனெனில் வியாக்கியானம் இல்லாமல் பாமரனால் புரிந்துகொள்ள முடியாது. அதனால்தான் உலமாக்கள் நபிமாரின் வாரிசுகளானார்கள்.

இங்கு எழுகின்ற பிரச்சினை  என்னவென்றால் இமாம்கள், முன் சென்ற பெரும் உலமாக்கள் சொன்ன அல்லது ஏற்றுக்கொண்ட வியாக்கியானங்களை ஏற்றுக்கொள்ள வேண்டாம்; எனக்கூறிவிட்டு தமது சொந்த வியாக்கியானத்தை சந்தைப் படுத்த முனைவதுதான்.

நமக்குத் தெரியும். பி ஜே செயினுலாப்தீன் மத்ஹப்புக்கள், இமாம்களை நிராகரிக்கின்ற ஒருவர். குர்ஆன், ஹதீஸை மட்டும் பின்பற்றச் சொல்பவர். அவர் இஸ்லாம் தொடர்பாக நூற்றுக்கணக்கான புத்தகங்களை எழுதியிருப்பதாக அவரது ஆதரவாளர்கள் பெருமையாக கூறுவார்கள். சம காலத்தில் அவரைவிட இஸ்லாமிய ஆய்வாளர் இல்லை; என்றும் கூறுவார்கள்.

பல நூறு ஆண்டுகளாக பின்னால் வந்த உலமாக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இமாம்களின் ஆய்வுகளை, வியாக்கியானங்களை, சட்டத்தொகுப்புகளை ஏற்கக்கூடாது; என்பவர் நூற்றுக்கணக்கான புத்தகங்களை ஏன் எழுதவேண்டும்? மக்கள் ஏன் இவரது ஆய்வுகளை, வியாக்கியானங்களை வாசிக்க வேண்டும்; ஏற்கவேண்டும்; என இவரது ஆதரவாளர்கள் எப்போதாவது கேள்வி எழுப்பியிருக்கிறார்களா? இல்லை. ஏன்? இவருடைய புத்தங்கள் குர்ஆன், ஹதீஸா?

அது அவர்களின் சிந்தனைப் பலயீனம் இல்லையா? அதைப்பயன்படுத்தி அவர் இவர்களை மூளைச்சலவை செய்ததனால் அவர் என்ன வியாக்கானம் செய்தாலும், எந்த ஹதீஸ் மறுப்பைச் சொன்னாலும் அதை கண்ணை மூடிக்கொண்டு இவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லையா?

இந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் அல்லது அவர்களது கிளையிலுள்ளவர்களது பேச்சில் ஒரு மூர்க்கத்தனம் இல்லையா?

ஒரு உதாரணம், தொழுகையில் சுஜூதுபோன்ற இடங்களில் துஆ கேட்க்க அனுமதியுண்டு. ஆனால் தொழுகையில் அரபியல்லாத மொழி பாவிக்கப்பட்டால் தொழுகை முறிந்துவிடும்; என்பது காலங்காலமாக வந்த உலமாக்களின் ஏகோபித்த அபிப்பிராயம். இவரதும் இன்னும் சிலரதும் வியாக்கியானம் வேறு மொழியில் துஆக் கேட்கலாம்; என்பது.

நாம் பாமரர்கள். நாம் சிந்தனைத் தெளிவுள்ளவர்களானால் பல நூறாண்டுகளாக உலமாக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலைப்பாட்டை ஏற்போமா? இவர்களது நிலைப்பாட்டை ஏற்போமா?

இவர்களுக்கு முன்னால் வந்த உலமாக்கள் அறிவு குறைந்தவர்கள், இவர்கள்தான் அறிவுகூடியவர்களா? அன்றைய உலமாக்களின் தனிப்பட்ட நடத்தை, ஒழுக்கம், பேணுதல் எவ்வாறு இருந்தது. இவர்களுடைய நடத்தைகள் எவ்வாறு இருக்கின்றது. தன்னுடைய இயக்கத்தைவிட்டு ஒருவர் விலகிவிட்டால் அவரை முகநூலில் நாறடித்து அவருக்கு அந்தப்பெண்ணுடன் தொடர்பு, இந்தப் பெண்ணுடன் தொடர்பு என்று எப்படி நாறடிக்கிறார்கள்.

இவர்களால் மூளைச் சலவை செய்யப்பட்டு ஒரு கூட்டம் இமாம்களை மறுத்து, முன்னோர் வியாக்கினங்களை மறுத்து இவர்களை நம்புகிறார்களே! இது வழிகேடு இல்லையா? இந்த வழிகேட்டை நியாயப்படுத்துவதில் இவர்களிடம் ஒரு மூர்க்கத்தனம் இல்லையா?
இவ்வாறு வழிகேடுகளை சரியானது; என நம்பும்போது இவ்வாறானவர்களை சுவர்க்கத்திற்கு ஆசைகாட்டி பயங்கரவாதியாக மாற்றுவது கடினமா?

நன்கு சிந்தியுங்கள், ஒரே குர்ஆன், ஒரே திருத்தூதர் ( ஸல்) அவர்களூடாக வந்த ஹதீஸ்கள். அவற்றிற்கெப்படி காலத்திற்கு காலம் வியாக்கியானம் மாறமுடியும்? அவற்றின் அடிப்படையில் தொகுக்கப்பட்ட சட்டங்கள் எவ்வாறு மாறமுடியும்?

இங்கு எழுகின்ற ஒரேயொரு கேள்வி, இந்த இரண்டு வியாக்கியானங்களில் எது சரி? அல்லது இவ்வியாக்கியானங்களின் அடிப்படையிலான யாருடைய சட்டம் சரி என்பதாகும். காலங்களில் சிறந்த காலத்தில் செய்யப்பட்ட, பல நூறு ஆண்டுகள் வந்த உலமாக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட, பல தலைமுறைகளால் பின்பற்றப்பட்ட வியாக்கியானங்கள், சட்டங்கள், சரியாக இருக்குமா? அல்லது இவர்கள் புதிதாக முளைத்த இவர்களது புதிய வியாக்கியானங்கள், சட்டங்கள் சரியாக இருக்குமா? என்று சிந்திக்கின்றார்களா?

ஒரு மௌலவி ஒரு நாள் கூறுகிறார், அவர் ஜனாசா தொழுவிக்க ஒரு நாள் சென்றபோது ஏதோ ஒரு சந்தேகம் வந்துவிட்டதாம். உடனே Laptopஇல் உரிய தலைப்பை அடித்ததும் ஹதீஸ்கள் வந்ததாம். அவர் சந்தேகத்திற்கு விடை கண்டுவிட்டாராம்.

இவர் மறைமுகமாக சொல்ல வருவது எந்த கிதாபும் தேவையில்லை. யாருடைய வியாக்கியானமும் தேவையில்லை. எல்லாம் அவரே! அப்படியானால் குர்ஆன், ஹதீசைத் தவிர அனைத்துக் கிதாபுகளையும் எரித்துவிடலாமே! உலமாக்களே தேவையில்லையே! நீங்கள் குர்ஆன், ஹதீஸ் அல்லவே. நீங்கள் மனிதர்கள். ஒவ்வொருவரும் குர்ஆன், ஹதீஸை சொந்தமாக விளங்கிக்கொண்டு வாழட்டும்; என்று ஒதுங்கி இருங்களேன்.

உங்களுக்கு, எதற்கு Laptop உம் பயானும். முன்னைய காலத்தில் உலமாக்களில் உள்ளத்தில் இருந்தது; மார்க்கம். இப்பொழுது Laptop இல் தான் இருக்கிறது. இதுதான் இன்றைய நிலை.

ஒரு மௌலவியின் பக்தர் எழுதுகிறார், ‘ அந்த மௌலவி ஆரம்பத்தில் அந்த ஊரில் பயான்கள் செய்தபோது யாரும் அவரை ஏற்றுக்கொள்ளவில்லையாம்; இப்பொழுது நிறையப்பேர் ஏற்றுக்கொள்கிறார்களாம். அப்படியானால் அந்த ஊரில் அவர் ஏதோ புதிதாக சொல்ல வந்ததனால்தானே அவரை ஆரம்பத்தில் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. அதுவரை அவ்வூரில் இருந்த உலமாக்கள் மக்களை பிழையாகவா வழிநடாத்தினார்கள்?  அல்லது இவர் வழிக்கெடுக்கின்றாரா? இதனைப் புரிந்துகொள்ள முடியாதா?

இவர்தான் கடந்த வருடம் நோன்புப் பெருநாள் தொழுகையில் பெரும் குழப்பம் செய்த ஒருவர். ஒற்றுமையெனும் கயிற்றைப் பற்றிப்பிடிப்கச் சொன்ன மார்க்கத்தைக் கற்ற மௌலவி என்பவர் நாடுபூராகவும் ஏற்றுக்கொண்ட பிறையை மறுத்து குழப்பம் செய்து சமூகத்தைக் கூறுபோடுகிறார். இதற்குப் பின்னாலும் ஒரு சிலர் செல்கிறார்கள்; என்றால் இது அவர்களின் சிந்தனைப் பலவீனம் இல்லையா? இவர்களைப் போன்றவர்களைத் தீவிரவாதிகளாக மாற்றுவது கடினமா?

முகவர் மௌலவிகள்
—————————
அண்மையில் மியன்மார் முஸ்லிம்கள் துவம்சம் செய்யப்பட்டு பங்காளதேசில் அடைக்கலம் புகுந்த சந்தர்ப்பத்தில் துருக்கிய ஜனாதிபதி எர்துக்கான் ஆவேசமாக குரல்கொடுத்ததும் அவரது மனைவி பங்காளதேசிற்கு வந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறியதையும் நாம் அறிவோம்.

அச்சந்தர்ப்பத்தில் சமூக வலைத்தளங்களில் எல்லோரும் எர்துகானைப் பாராட்டி பதிவுகளை இட்டுக்கொண்டிருந்தார்கள். அதேநேரம் சவூதி அரேபியா மியன்மார் முஸ்லிம்கள் விடயத்தில் மௌனம் சாதித்ததையும் அறிவோம்.

Laptop உடன் திரிகின்ற ஒரு மௌலவிக்கு இதனை ஜீரணிக்க முடியவில்லை. உடனே, சவூதி எத்தனையோ லட்சம் ரோகியங்கியர்களுக்கு அடைக்கலம் வழங்கியிருக்கின்றதாம்; துருக்கியைவிட சவூதிதானாம் உலக முஸ்லிம்கள்மீது அக்கறைகொண்ட நாடாம்; என்று ஒரு நீண்ட பதிவை அம்மௌலவி போடுகிறார்.

இங்கு நாம் சிந்திக்க வேண்டியது, எர்துகானை மக்கள் பாராட்டினால் உங்களால் ஏன் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவ்வாறாயின் நீங்கள் யார்? சவூதியும் ஒரு முஸ்லிம் நாடு. துருக்கியும் ஒரு முஸ்லிம்நாடு. துருக்கி ஜனாதிபதி குரல் கொடுக்கின்றார். பாராட்டப்படுகின்றார். சரி, அவரும் ஒரு முஸ்லிம்தானே! அவர் பாராட்டுப்படட்டுமே! உங்களால் ஏன் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவ்வாறாயின் இவர் ஒரு சவூதியின் முகவராகத்தானே இருக்கவேண்டும்? இதற்காக இவர் பெறுவது என்ன?

எனவே, இவ்வாறு சில மௌலவி என்பவர்கள் சில நாடுகளின் அல்லது சில அமைப்புகளின் முகவர்களாக இருக்கின்றார்கள். அவர்களின் கொள்கைகள் என்னவோ அவற்றை இங்கு பரப்புகிறார்கள். இவற்றிற்குப் பின்னாலும் மக்கள் செல்கிறார்கள். இதற்குப் பாவிக்கின்ற பதம் “ குர்ஆன், ஹதீஸ் என்பதாகும்.

இவ்வாறான அடுத்தவர்களின் தரகர்களாக இருந்துகொண்டு சமூகத்தை வழிகெடுக்கும் இவர்களில் ஒரு சிலர் இவ்வாறான பயங்கரவாத சக்திகளின் கைக்கூலிகளாக மாறும்போது மிகுதி மூளைச்சலவையை பயங்கரவாதத்தை நோக்கிச் செய்கிறார்கள். இதை நம்பி வழிதவறுகின்றவர்கள்தான் இவ்வாறு தற்கொலைப்படையாக மாறுகின்றார்கள். இறுதியில் சமூகம் விலை கொடுக்கின்றது.

தீர்வு என்ன?
——————
ஒரு புறம் ஏற்கனவே மூளைச்சலவை செய்யப்பப்பட்டு பயங்கரவாதிகளாக மாறியவர்களை அரசாங்கம் களையெடுப்பதைத்தவிர வேறு வழியில்லை. அதேநேரம் தற்போது ஒரு சிலர்தான் பயங்கரவாதத்தைநோக்கித் திசைதிருப்பப்பட்டிருக்கிறார்கள். ஏனையவர்களைப் பாதுகாக்க வேண்டும்.

ஏற்கனவே, குறிப்பிட்டதுபோல் இஸ்லாம் வளர்க்க இயக்கங்கள் தேவையில்லை. இயக்கங்களால் இஸ்லாம் வளர்க்கப்படவுமில்லை. இயக்கங்களால் குழப்பங்கள் உருவாகி சமூகத்தான் பிரிந்திருக்கின்றது.

யாராவது மௌலவி என்று கூறிக்கொண்டுவந்து குர்ஆன், ஹதீசை வாசித்து அதற்கு ஏதாவது வியாக்கியானம் சொல்லமுற்பட்டால், அல்லது அதிலிருந்து சட்டங்கள் சொல்ல முற்பட்டால் இதற்கு முன்வந்த எந்த இமாம், எந்த உலமா இதே கருத்தைக் கூறியிருக்கின்றார்கள்; என்று கேளுங்கள். அவ்வாறு சொல்லிவிட்டால் அல்லது அவர்களின் கருத்துக்கள் பிழையென்று சொன்னால் அவர்களுடைய கருத்தை பல நூறு ஆண்டுகளாக வந்த உலமாக்களும் முஸ்லீம்களும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். நாங்களும் அதையே ஏற்றுக்கொள்கின்றோம்; என்று திருப்பி அனுப்பிவிடுங்கள்.

நாம் எமது மூதாதையர் வணங்கியதையே வணங்குவோம். உமது புதிய மார்க்கத்தை ஏற்றுக்கொள்ள மாட்டோம்; என்று அன்றைய குறைஷிகள் சொன்னதற்கெதிராக வந்த ஆயத்தைக் கூறினால் கூறுங்கள். அன்று அவர்கள் சொன்ன மூதாதையர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளாத நாளுக்கொரு தெய்வத்தை வணங்கியவர்கள். இஸ்லாத்தில்வந்த இமாம்களை அவர்களுடன் நீங்கள் ஒப்பிடுவதே நீங்கள் கெட்டவர்கள் என்பதற்கு அடையாளம்; என்று கூறுங்கள்.

அவர்களை ஏன் பின்பற்றவேண்டும்? குர்ஆன், ஹதீசைத்தானே பின்பற்ற வேண்டும்; என்று அவர்கள் சொன்னால் அன்றைய இமாம்கள் வியாக்கியானம் சொன்னது குர்ஆன், ஹதீசிற்கா அல்லது கதைப்புத்தகங்களுக்கா? என்று கேளுங்கள். அத்தோடு குர்ஆன், ஹதீசைத்தான் பின்பற்றவேண்டும்; எனவே இடையில் நீங்களும் உங்கள் வியாக்கியானமும் எதற்கு என்று கேளுங்கள். நீங்கள் கேள்விகேட்ட ஆரம்பித்தால் அவர்கள் சாயம் வெளுத்துவிடும்; என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

ஒரு ஊரில் ஐம்பது வருடம், நூறு வருடம் பழமைவாய்ந்த பள்ளிவாசல் இருக்கும். அதைப் புனரமைக்க நிதியுதவிதேடி கொழும்பு பள்ளிவாசல்களில் ஜும்ஆவின்பின் தட்டுக்கள் ஏந்துவார்கள். ஆனால் இயக்கங்கள் என்ற பெயரில் ஒரு ஊரில் இருக்கும் பள்ளிக்கு அருகில் ஒரு குட்டிப் பள்ளிவாசல் கட்டுவார்கள் ஊரைப்பிரிப்பதற்கு.

அதன்பின் அங்கு கைகலப்புகள் இடம்பெறும். சில நாட்கள் முகநூல் கலகலக்கும். அந்தப்பணத்தை அந்தப் புராதன பள்ளியை புனரமைக்கப் பாவிக்கமுடியாதா? செய்யமாட்டார்கள். ஏனெனில் அவர்கள் தொழுவதற்குப் பள்ளிகட்டுவதில்லையே! கொள்கை வளர்க்கவே கட்டுகிறார்கள்.

அதேநேரம் தங்களது பக்கம் மக்களைக்கவர நல்ல சமூக சேவையில் ஈடுபடுவார்கள். தமிழ்நாட்டில் பாரிய  வெள்ளம் வந்தபோது மிகவும் சிறப்பாக செயற்பட்டது தமிழ்நாடு தௌஹீத் இயக்கம். இது அவர்களது மிகப்பெரிய தந்திரம். சமூகசேவை செய்யவேண்டுமானால் சமூகசேவை இயக்கமென்று பெயரை வைத்து இயங்கலாமே! மார்க்கத்தை பிழையாகச் சொல்லி மக்களை ஏன் வழிகெடுக்கவேண்டும்.

இலங்கையில் ஒரு தௌஹீத் ஜமாஅத் வெளியிட்ட அறிக்கையில் தாங்கள் தேசிய தௌஹீத் ஜமாஅத்துடன் தொடர்பில்லை. இலங்கையில் பல தௌஹீத் ஜமாஅத்கள் இருக்கின்றன. அவர்களின் Ideologies வேறு, எங்களின் Ideology வேறு, என்று தெரிவித்திருக்கின்றார்கள்.

ஒரே இஸ்லாத்தில் பல ideologies இருக்கமுடியுமா? அதிலும் அவர்களுடையதுவேறு, எங்களுடையது வேறு என்றால் எல்லோரும் எங்களுடைய ideology தான் சரியென்றால் யாரை ஏற்றுக்கொள்வது? இதுவே போதாதா இவர்கள் வழிகெட்டவர்கள் என்பதற்கு.

எனவே, இந்த இயக்கங்கள் அரசு தடைசெய்யமுதல் தாமாகவே கலைந்து மொத்த முஸ்லிம்களும் ஒரே உம்மத்தாக  இயங்க முன்வரவேண்டும். ஊருக்கு ஊர் கட்டப்பட்ட குட்டிப்பள்ளிவாசல்கள் அவ்வூர் பெரிய பள்ளிவாசலிடம் அல்லது முஸ்லிம் கலாச்சார அமைச்சிடம் கையளிக்கப்பட வேண்டும்.

அரபிக்கல்லூரிகள்
————————
இன்று முஸ்லிம் சமூகத்தை வழிகெடுக்கும் வழிகாட்ட மௌலவிக்களைத் தயாரிப்பது புதிய புதிய கொள்கைகளை அடிப்படையாகக்கொண்டு புற்றீசல்போல் முளைத்திருக்கும் அரபிக்கல்லூரிகளாகும். ஒன்றில் இவ்வாறு கொள்கைப்பிறள்வுள்ள அரபிக்கல்லூரிகள் மூடப்படவேண்டும்; அல்லது இலங்கை, இந்தியாவில் உள்ள சிறந்த உலமாக்களைக்கொண்டு பல நூறுஆண்டுகளாக இருந்துவருகின்ற அஃலுஸ்ஸுன்னது வல் ஜமாஆ கொள்கையை அடிப்படையாகக்கொண்ட ஒரு பொதுவான பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு அது அனைத்து அரபிக்கல்லூரிகளிலும் கற்பிக்கப்படவேண்டும்.

இதற்கு உடன்படாத கல்லூரிகள் மூடப்படவேண்டும்.

இவ்வாறு வேற்றுமைகள் களையப்பட்டு இந்நாட்டு முஸ்லிம்கள் ஒரே கொடியின் கொண்டுவரத்தவறின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறலாம். தமிழருக்கு தமிழ்நாடு இருந்தது. ரோகியங்கியருக்கு பங்களாதேஷ் இருந்தது. நமக்கு எதுவுமில்லை. அல்லாஹ்வின் பாதுகாப்புமட்டும்தான். நாம் ஒற்றுமைப்படாமல், நமது தலைவிதியை நாமே மாற்றாமல் இறைவன் மாற்றுவானென எதிர்பார்க்க முடியாது.

கம்பஹா கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்குப் பாதுகாப்பு 

( மினுவாங்கொடை நிருபர் )

   கம்பஹா மாவட்டத்தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பாதுகாப்பது சம்பந்தமான விசேட கூட்டம், கம்பஹா மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலாளர் சுனில் ஜயலத் தலைமையில்  இடம்பெற்றது. 

   இவ்விசேட கூட்டத்தில், மாவட்டத்திலுள்ள அனைத்து மொழிப் பாடசாலைகள், மதஸ்தலங்கள், அரசாங்க திணைக்களங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், மாவட்ட மக்களுக்கு குடிநீர் வழங்கும் தாங்கிகள், குடிநீரைப் பெற்றுக்கொள்ளும் மாவட்டத்திலுள்ள நீர் நிலைகள் ஆகியவற்றின் பாதுகாப்பு தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட்டு ஆராயப்பட்டது. 

   இவ்விசேட கூட்டத்தில் கலந்துகொண்ட கம்பஹா மாவட்ட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள், இராணுவ அதிகாரிகள் மற்றும் மாவட்டப் பாதுகாப்பாளர்கள் மத்தியில் பாதுகாப்பு வழங்குவதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது. 

( ஐ. ஏ. காதிர் கான் )



நேற்று நிந்தவூரில் வெடிபொருட்களும், குண்டு தயாரிக்கும் உபகரணங்களும் பொலிசாரினால் கைப்பேற்றபட்டிருந்தது. அந்த இடத்துக்கு அடிக்கடி வந்துசென்ற வாகனம் ஒன்று அடையாளம் காணப்பட்டு பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டது.

குறித்த வாகனத்தினை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் மும்முரமாக ஈடுபட்டனர். இது சாய்ந்தமருது கரைவாகு பிரதேசத்தில் உள்ள சுனாமி குடியேற்றத்தில் உள்ள பள்ளிவாசலுக்கும் தெரிவிக்கப்பட்டது.

அதேநேரம் குறித்த பள்ளிவாசலக்கு அண்மித்த பகுதியில் உள்ள வீடு ஒன்றில் சந்தேகத்துக்கிடமான நபர்கள் ஒரு வாரமாக வாடகைக்கு குடியிருக்கும் விடயம் தெரியவந்தது.

பின்பு அதன் உண்மையை கண்டறிவதற்காக சிலர் சந்தேகத்துக்கிடமான குறிப்பிட்ட வீட்டுக்கு சென்றபோது, அங்கு ஆயுதத்துடன் சிலர் இருந்ததனை கண்டதும் சென்றவர்கள் பயத்தில் பின்வாங்கியதுடன் அது படையினர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து அந்த இடத்தில் பதட்டம் ஏற்பட்டு அப்பிரதேச மக்கள் ஒன்றுகூட தொடங்கினார்கள். அதன்பின்பு மக்களை கலைப்பதற்காக எடுத்த எந்த முயற்சியும் கைகூடாத நிலையிலும், அங்கிருந்து தங்களது வாகனத்தில் தப்பிச்செல்ல முடியாத நிலையும் ஆயுததாரிகளுக்கு ஏற்பட்டது. 

பின்பு “அல்லாஹ் அக்பர், அல்லாஹ் அக்பர்” என்று கூறிக்கொண்டு வானத்தை நோக்கி ஆயுததாரிகள் துப்பாக்கி பிரயோகம் செய்தார்கள். துப்பாக்கி சத்தத்தினால் ஊர்முழுவதும் என்ன நடக்கிறது என்று தெரியாமல் மக்கள் குழம்பிய நிலையில் பதட்டத்துடனும், அச்சத்துடனும் காணப்பட்டார்கள். 

அதேநேரம் இராணுவத்தினர்கள் வருகைதந்ததுடன், கரைவாகு பிரதேசத்தை சுற்றிவளைத்தார்கள். அப்போது ஏற்பட்ட பதட்ட நிலை காரணமாக அப்பிரதேசத்தில் உள்ள மக்கள் அங்குமிங்குமாக தப்பி ஓடத்தொடங்கினார்கள்.

அப்போது ஓர் முச்சக்கர வண்டியில் சாய்ந்தமருதை சேர்ந்த ஓர் குடும்பத்தினர் அவ்விடத்திலிருந்து பதட்டத்துடன் வெளியேற முற்பட்டபோது இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகளுக்கு இலக்காகி மனைவி இறந்ததுடன், முச்சக்கர வண்டி செலுத்தி வந்த கணவர் படுகாயத்துடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நேரத்தில் ஆயுததாரிகள் தங்கியிருந்த வீட்டுக்குள் குண்டு ஒன்று வெடித்தது. பின்பு சிறுது நேரத்தில் இன்னுமொரு குண்டு வெடித்தது.

இந்த சந்தர்ப்பத்தில் பரஸ்பரம் துப்பாக்கி பிரயோகம் நடாத்தப்பட்டது. இது பல மணி நேரமாக நீடித்தது. இராணுவத்தினர்களால் தாங்கள் சுற்றி வளைக்கப்பட்டுள்ளோம் என்பதனை அறிந்ததும் வீட்டுக்குள் இருந்த ஆயுததாரிகள் முகநூல் மூலமாக நேரடி ஒளிபரப்பு செய்தவாறு தங்களை காபீர்கள் சுற்றி வளைத்துள்ளார்கள் என்று கூறிக்கொண்டு தக்பீர் முழக்கத்துடன் குண்டை வெடிக்கவைத்து தற்கொலை செய்துகொண்டதாக அறியப்படுகின்றது. 

ஆயுததாரிகளிடம் இராணுவத்தினரை எதிர்த்து சண்டை செய்வதற்காக ஒரே ஒரு T56 ரக துப்பாக்கி மட்டுமே இருந்துள்ளதாகவும், மற்றவைகள் குண்டுகளும், அதனை தயாரிக்கும் உபகரங்களும் என்றே அறிய முடிகின்றது.

இந்த தற்கொலை குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஆயுததாரிகளை சேர்ந்த 13 பேர்கள் கொல்லப்பட்டார்கள். அதில் அவர்களது குழந்தைகளும், பெண்களும் அடங்கும்.

இராணுவத்தினர்களை எதிர்த்து சண்டைசெய்த ஆயுததாரிகளில் ஒருவர் துப்பாக்கியுடன் இறந்து கிடந்தார். இவர் தற்கொலை செய்ததாக தெரியவில்லை. இவரின் தலையில் துப்பாக்கி குண்டுகள் துளைத்த நிலையில் அவரது உடல் காணப்பட்டது. வீட்டுக்குள் தற்கொலை செய்து கொண்டவர்களின் உடல்கள் சிதைந்த நிலையில் கிடந்தது. 

வீட்டுக்குள் எத்தனை பேர்கள் உள்ளார்கள், என்ன நிலையில் உள்ளார்கள் என்று தெரியாத நிலையில் இராணுவத்தினர்கள் முன்னெச்சரிக்கையுடன் மிகவும் தாமதித்தே அவ்வீட்டுக்குள் பிரவேசித்தார்கள். அதுவரைக்கும் துப்பாக்கிபிரயோகம் மேற்கொண்டபடியே முன்னேறினார்கள்.

துப்பாக்கிதாரிகள் தப்பிக்க நினைத்தால் மக்களை கொலை செய்துவிட்டு தப்பித்திருக்கலாம். ஆனால் மக்களுக்கு எதுவும் செய்யாது தற்கொலை செய்துகொண்டார்கள் என்று சம்பவத்தை நேரில் கண்ட அப்பிரதேசவாசி தெரிவித்தார்.

இந்த சம்பவத்தில் பொதுமக்கள் சிலரும் காயமடைந்து அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது


கல்முனை சாய்ந்தமருது பிரதேசத்தில் நேற்றிரவு இடபெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தையடுத்து அப்பகுதியிலிருந்த வீடொன்றிலிருந்து 15 பேரின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
கல்முனை போக்குவரத்துப் பிரிவில் சேவை புரியும் பொலிஸ் உத்தியோகத்தருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலொன்றின் பேரில் மேற்கொண்ட சோதனையின் பேரிலேலே இந்த வெடிபொருட்கள் நேற்று கண்டுபிடிக்கப்பட்டன.
இதன்போதுதான் பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது இராணுவமும் சேர்ந்த நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
குறித்த வீட்டிற்குள் 3 ஆண்களும், 3 பெண்களும், குழுந்தைகள் ஆறுபேருடைய சடலங்களும் காணப்படுவதாகவும், வீட்டிற்கு வெளியே தற்கொலை குண்டுதாரி எனச் சந்தேகிக்கப்படும் 4 ஆண்களுடைய சடலங்களும் காணப்படுவதாகவும் அவர் கூறினார்.
பொலிஸாரும் படையினரும் அவ்வீட்டுக்குள் செல்கையில் படுகாயமடைந்த நிலையில் சிறு பிள்ளையொன்றும் பெண் ஒருவரும் காணப்பட்டதாகவும் பொலிஸ் பேச்சாளர்  குறிப்பிட்டார்.
சோதனை நடவடிக்கைகள் கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் இடம்பெற்று வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். 
(Daily Ceylon)


பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ம் திகதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை,

உயிர்த்த ஞாயிறன்று நாங்கள் முகங்கொடுத்த பயங்கரவாத தாக்குதலின் தாக்கம் இன்னும் குறைவடையவில்லை. எமது நாட்டினை இரத்த ஆறாக மாற்ற வேண்டும் என்பதே இக்கொடூர தாக்குதலினை திட்டமிட்டவர்களின் நோக்கமாக அமைந்திருந்தது. எனினும் எமது மக்கள் பிரிவுகளுக்கு இடையில் பிரச்சினைகள் ஏற்படுவதற்கு வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்காது சட்டத்தினையும் ஒழுங்கினையும் பாதுகாப்பதற்கு நாம் அனைவரும் முன்னின்று செயற்பட்டோம்.

எமது பேராயர் அவர்கள் உட்பட கிறிஸ்தவ மத தலைவர்கள், மகா நாயக்க தேரர்கள் உட்பட மகா சங்கத்தினர், இஸ்லாம் மற்றும் இந்து மதத் தலைவர்கள், சிவில் அமைப்புகள், கிராமிய தலைவர்கள் என அனைவரும் இணைந்து முழு இலங்கையிலும் சமாதானத்தினையும், நல்லிணக்கத்தினையும் ஏற்படுத்துவதற்கு அர்ப்பணித்தனர். முஸ்லிம் மக்கள் சமாதானத்தினை ஏற்படுத்துவதற்காக நடவடிக்கைகளை எடுத்தனர். காவல் துறையினர் உட்பட பாதுகாப்பு தரப்பினருக்கு பொதுமக்கள் தமது பூரண ஒத்துழைப்பினை வழங்கினர்.

முதலில் இவ்வனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

எமது சகோதர சகோதரிகள், பிள்ளைகள் என பலர் இந்த தாக்குதலில் உயிரிழந்தனர். வெளிநாட்டவர்கள் பலரும் உயிரிழந்தனர். இதில் சில வெளிநாட்டவர்கள் எமது நாட்டுக்கு உதவி ஒத்தாசைகளை வழங்குவதற்கு வருகை தந்தவர்களாவர். இன்னும் சிலர் எமது நாட்டின் இயற்கை அழகை கண்டுகளிப்பதற்கு வந்தவர்களாவர். தற்போது பதிவாகியுள்ள உயிரிழப்புகள் தொடர்பில் கணக்கிடப்பட்டு வருகின்றது. உயிரிழந்த அனைவருக்காகவும் முழு இலங்கையர்களும் கவலைப்படுகின்றனர். அதிர்ச்சியடைகின்றனர். தற்போது 149 பேர் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் நாம் பூரண சுகமடைய பிரார்த்தனை செய்கின்றோம்.

இறுதிச்சடங்குகளுக்காகவும், உயிரிழப்புகளுக்காகவும் ஆரம்பத்தில் ஒரு இலட்சம் ரூபாவினையும், பின்னர் நட்டஈடாக மேலும் ஒன்பது இலட்சம் ரூபாய்களையும் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நாம், இழந்த உயிர்களை பணத்தினால் மதிப்பிட்டுவிட முடியாது. எனினும் இந்த சந்தர்ப்பத்தில் ஏதேனுமொரு ஒத்துழைப்பாகவும் சலுகையாகவுமே இந்த பணத்தினை நாங்கள் பெற்றுக் கொடுக்கின்றோம்.

பாதிப்புக்குள்ளான தேவாலயங்கள் மூன்றினையும் மீண்டும் புனர்நிர்மாணம் செய்வதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். அதே போன்று மீண்டும் வழமை போலவே தேவாலயங்களில் கிரியைகளை மேற்கொள்வது தொடர்பில் மதிப்பிற்குரிய பேராயர் கார்டினல் மெல்கம் ரன்ஜித் ஆண்டகையுடன் நானும், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரும், பாதுகாப்பு தரப்பு உயர் அதிகாரிகளும் கலந்துரையாடினோம். தேவைப்படுகின்ற அனைத்து வகையான பாதுகாப்பினையும் வழங்கி அனைத்து சமய நடவடிக்கைகளையும் வழமை போல மேற்கொள்வதற்கு அவசியமான பின்னணியினை நாம் ஏற்படுத்தி வருகின்றோம்.

தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு குறுகிய கால இடைவெளியினுள் சந்தேகத்துக்கு இடமான பலரை எமது பாதுகாப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். விசாரணையின் முன்னேற்றம் குறித்து எமக்கு தற்போது திருப்தியடைந்து கொள்ள முடியும். இந்த தாக்குதல் மிக நீண்ட காலமாக திட்டமிடப்பட்ட ஒன்று என்பதை மாத்திரமே தற்போதைக்கு வெளிப்படுத்த முடியும். மிகவும் நுட்பமாக திட்டமிடப்பட்ட ஒரு தாக்குதல். இவ்வாறான செயல்களை செய்வதற்கு கட்டாயமாக வெளிநாட்டவர்களின் ஒத்துழைப்பும் அறிவும் தேவைப்படுகின்றது. இத்தாக்குதல்களுடன் தொடர்பான ஒரு சிலர் வெளிநாடுகளுக்கு சென்று பயிற்சிகளை பெற்றுள்ளனர் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன. இவ்வாறான பின்னணியில் நாங்கள் இதனை முறியடிப்பதற்கு வெளிநாட்டவர்களின் ஒத்துழைப்பினையும் ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளது.

இந்த குழு தமது தாக்குதல்களை மாவனல்லை சிலையினை சேதமாக்கிய சம்பவத்துடன் ஆரம்பித்துள்ளனர். அடுத்ததாக அவர்களின் உளவுத் தகவல்களை வழங்கினார் என்பதால் எமது அமைச்சர் ஒருவரின் செயலாளரரினை சுட்டனர். அந்த செயலாளர் ஓர் முஸ்லிம் இனத்தவர். இன்று அவர்கள் கிறிஸ்தவர்களை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். 

இப்பயங்கரவாத தாக்குதல்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் மிகவும் சிறு குழுவினரே. அவர்களில் அதிகமானோரும், அதிக தொகையான வெடிப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இன்னும் சிறு தொகையினரையே சட்டத்தின் முன் நிறுத்த வேண்டியுள்ளது. அதனால் ஆபத்தானது இன்னும் முழுமையாக குறையவில்லை. அதனால் நாங்கள் மிகவும் பொறுப்புடன் செயற்படுவதற்கு கடமைப்பட்டுள்ளோம். பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு காவல் துறையினருக்கும் பாதுகாப்பு தரப்பினருக்கும் நாம் நமது பங்களிப்பினை வழங்க வேண்டும். 

தற்போது நான் மற்றுமொரு முக்கியமான விடயம் குறித்து உங்களது கவனத்தினை திருப்ப விரும்புகின்றேன்.

இத்தாக்குதல்களுடன் தொடர்பான நபர்கள் தொடர்பில் புலனாய்வு பிரிவினருக்கு பல தடவைகள் தகவல்கள் கிடைத்தன. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலும் வெளிநாட்டு புலனாய்வு பிரிவினர் தகவல்களை வழங்கி இருந்தனர்.

நான் நாட்டின் பிரதமர் எனும் அடிப்படையில் இதற்கான கூட்டுப் பொறுப்பினை ஏற்றுக் கொள்கின்றேன். அரசாங்கம் எனும் ரீதியில் இக்குறைபாடு தொடர்பில் நான் உண்மையாகவே எமது மக்களிடத்தில் எனது வருத்தத்தினை தெரிவித்துக் கொள்கின்றேன்.

எனினும் வருத்தத்தினை வெளிப்படுத்துவதுடன் மாத்திரம் எமக்கு நின்று விட முடியாது. நாங்கள் இவ்வாறான குறைபாடுகள் எதிர்காலத்தில் ஏற்படாதிருப்பதற்கான நடவடிக்கைகளை துரித கதியில் எடுக்க வேண்டும். பொதுமக்களின் உயிரினை பாதுகாப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.

நான் அதற்கான பொறுப்பினை ஏற்கின்றேன். அர்ப்பணிக்கின்றேன்.

இந்த பயங்கரவாத தாக்குதலுடன் சர்வதேசமும் தொடர்புபடுகின்றது. அது சாதாரணமான பயங்கரவாதமொன்றல்ல. உலகின் பல நாடுகளில் காணப்படுகின்ற பயங்கரவாத கருத்துக்களை கொண்ட ISIS பயங்கரவாத அமைப்புடன் இந்த தாக்குதல் சம்பந்தப்பட்டுள்ளதாக எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

இது வரை இச்சர்வதேச பயங்கரவாதமானது இந்தியா, பங்களாதேசம், பாகிஸ்தான், மாலைதீவு போன்ற அண்டைய நாடுகளிலும் பல்வேறு மட்டத்திலான தாக்குதல் சம்பவங்களை மேற்கொண்டுள்ளது. 

அதனால் அந்த சர்வதேச பயங்கரவாதத்தினை தேசிய மட்டத்தில் மாத்திரம் முறியடித்துவிட முடியாது. குண்டுகள் இலங்கையில் வெடித்தாலும், அதன் இயக்கி வேறு நாடுகளில் இருக்கலாம். திட்டங்கள் வேறு நாடுகளில் போடப்பட்டிருக்கலாம். பயிற்சிகள் கூட வேறு நாடுகளில் வழங்கப்பட்டிருக்கலாம். வேறு நாடுகளில் பயங்கரவாதிகளின் மூளைகள் சலவை செய்யப்பட்டிருக்கலாம். அதனால் அவ்வனைத்து தரப்பினரையும் அழிக்காமல் சர்வதேச பயங்கரவாதத்தினை அடியோடு அழித்து விட முடியாது. 

அதனால், போலி பிரச்சாரங்களுக்கும், வாய்ப்பேச்சுகளுக்கும் குழப்பம் கொள்ளாமல் பொறுமையாக நடவடிக்கைகளை மேற்கொள்வது இந்த சந்தர்ப்பத்தில் மிகவும் முக்கியமாக கருதப்படுகின்றது. 

இவ்வாறான சம்பவங்களுக்கு முகங்கொடுத்த நாடுகள் தமது உள்ளக சட்டக் கட்டமைப்பில் மாற்றங்களை கொண்டு வந்தனர். சர்வதேச பயங்கரவாதத்திற்கு முகங்கொடுப்பதற்கு அவசியமான சட்டங்களை அறிமுகம் செய்தனர். எனினும் அவ்வாறான சம்பவங்கள் பதிவாகாத நாடுகள் அது தொடர்பில் கவனம் செலுத்தவில்லை.

பயங்கரவாதத்திற்கு கட்டளையிடுபவர்கள் தொடர்பில் எமது நாட்டில் மிகவும் குறுகிய வட்டத்திலான சட்டமே காணப்படுகின்றது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் மிகவும் கடுமையாக நடந்து கொள்ளும் அளவிற்கு அவ்வாறான சட்டங்கள் பலமாக இல்லை. நாம் அந்த சொற்றொடர்களை சர்வதேச பயங்கரவாதத்துக்கு முகங்கொடுப்பதற்கு ஏற்றாற் போல் மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும். கட்டளையிடுபவர்களை கைது செய்வதற்கு ஏற்றாற் போல் மாத்திரமல்லாமல் அவர்களின் சொத்துக்கள் அனைத்தையும் அரசமயமாக்குவது தொடர்பாகவும் சட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டியுள்ளது. அதே போன்று தீவிரவாத மதக் கல்வி தொடர்பிலும் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. அவ்வாறான கல்வி நிறுவனங்களை கட்டுப்படுத்துவதற்கும் சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.

சர்வதேச பயங்கரவாதத்துக்கு முகங்கொடுப்பதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தான உறுப்புரைகளை நாம் பயங்கரவாத தடுப்பு சட்ட மூலத்தில் இணைத்திருந்தோம். மேலும் பல உறுப்புரைகளை திருத்தம் மேற்கொள்ளும் சந்தர்ப்பத்தில் முன்வைப்பதற்கும் எதிர்பார்த்திருந்தோம். எனினும் இப்புதிய சட்டமானது இன்னும் நிறைவேற்றப்படவில்லை. 

அது மாத்திரமல்லாமல் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நேரடியாக சம்பந்தப்படாத, எனினும் அவ்வாறான கருத்துக்கள் கொண்டவர்களை புனருத்தாபனம் செய்யும் வேலைத்திட்டமொன்றை தயாரிக்க வேண்டும். எவ்வித ஆயதங்களையும் பயன்படுத்தாமல் வாகனங்களை மாத்திரம் பயன்படுத்தி பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடும் சந்தர்ப்பங்களை நாம் இங்கிலாந்தில் அறிய முடிகிறது. அவ்வாறான அனுபவங்கள் கொண்ட நாடுகளின் ஒத்துழைப்புகளும் எமக்கு அதனாலேயே தேவைப்படுகின்றது.

இது மிகவும் கடினமான சவாலாகும். எனினும் சமாதானத்தினை விரும்புகின்ற எமது மக்களினதும், உலகத்தின் அனைத்து அரசாங்கங்களினதும் பூரண ஒத்துழைப்பினை பெற்று இப்பயங்கரவாதத்தினை முழுமையாக அழிப்பதற்கு நாம் நடவடிக்கை எடுப்போம் என நான் உங்களுக்கு உறுதியளிக்கின்றேன். தற்போதும் உலகின் பல நாடுகளின் தலைவர்கள் எமக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு தயார் என அறிவித்துள்ளனர்.

இவ்வாரம் முழுவதும் நாட்டின் பாதுகாப்பு தொடர்பிலேயே எமது கவனம் செலுத்தப்பட்டது. பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கும், பயங்கரவாத செயல்களுடன் தொடர்புபட்ட நபர்களை சட்டத்தின் முன் கொண்டு வருவதற்குமான அடித்தளத்தினை இடுவதற்குமே அரசாங்கம் தமது முழு பலத்தினையும் பிரயோகித்தது. 

அடுத்த வாரத்தில் இருந்து நாட்டின் பொருளாதாரத்தினை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டி உள்ளது. 

இந்த பயங்கரவாத தாக்குதலானது எமது நாட்டின் பொருளாதாரத்திற்கு பாரியதொரு தாக்கமாகும். அதிஷ;ட சீட்டு வியாபாரி முதல் பாரியளவிலான மொத்த வியாபாரி வரை அனைவரும் பாரியளவிலான பின்னடைவினை எதிர்நோக்கியுள்ளனர். தற்போது அண்ணளவாக நாட்டுக்கு ஆயிரம் டொலர் மில்லியன்கள் வரை நட்டம் ஏற்பட்டுள்ளது. சில நேரம் அதற்கு அதிகமாகவும் காணப்படலாம். அது மோசமான நிலைமையாகும். ஆகவே, பொருளாதாரத்தினை மீண்டும் கட்டியெழுப்பும் நடவடிக்கையிலும் நாம் வெற்றி பெற வேண்டும். 

நாங்கள் கைச்சாத்திட்ட ஐக்கிய அமெரிக்க குடியரசின் மிலேனியம் சேலர்ன்ச் கோபரேஷன் அபிவிருத்தி ஒப்பந்தத்தின் மூலம் இவ் அபிவிருத்திச் சவாலினை வெற்றிக் கொள்வதற்கு சலுகைகள் கிடைக்கின்றன. அதன் மூலம் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நன்கொடையாக கிடைக்க உள்ளது.  

நாம் வௌ;வேறு பல மொழிகளை பேசுபவர்களாக இருக்க முடியும். வௌ;வேறு மதங்களை பின்பற்றுபவர்களாக இருக்க முடியும். வௌ;வேறு இனங்களை பிரதிநிதித்துவப்படுத்த முடியும். எனினும் நாம் அனைவரும் இலங்கை தாயின் பிள்ளைகளே. ஆகவே, ஒரு தாய் பிள்ளைகளாக இச்சந்தர்ப்பத்தில் ஒன்றாக இணைந்து செயற்படுவதற்கு உறுதி பூணுவோம். புத்தரின் அன்பு, கருணை மற்றும் தயாளம்  போன்ற  குணப்பண்புகளை மக்கள் மத்தியில் பரப்புவோம்.

அப்போது தான் இந்த கடினமான சந்தர்ப்பத்தில் நாட்டினை கட்டியெழுப்பு முன்னோக்கிச் செல்ல முடியும். மற்றுமொரு கடினமான சந்தர்ப்பத்தினை முகங்கொடுத்துக் கொண்டிருக்கும் நாங்களும், எமது நாடும், எமது பிள்ளைகளது எதிர்காலத்தினை பாதுகாப்பதற்கு பொறுமையாகவும், ஒத்துழைப்புடனும் செயற்படுவோம்.

உங்கள் அனைவருக்கும் நன்றிகள்.  

              


இலங்கையில் சமூக ஊடகங்கள் மீது அண்மையில் தற்காலிகமாக விதிக்கப்பட்ட தடையால், பலர் ‘VPN’ செயலியை பயன்படுத்தத் தொடங்கினர்.
தடையைக் கடந்து, வேறு சேர்வர்கள் மூலம் தடைசெய்யப்பட்ட இணையம் சார்ந்த சேவைகளை பயன்படுத்த மேற்படி VPN சேவைகள்  வழியமைத்துக்கொடுத்தன.
Android மற்றும் IOS பாவனையாளர்கள் இலவச மற்றும் கட்டணம் செலுத்தும் VPN அப்ளிக்கேசன்களை தரவிறக்கம் செய்து தடைசெய்யப்பட்ட பேஸ்புக், வட்ஸெப் மற்றும் வைபர் போன்றவற்றை உபயோகித்த இலங்கையர்களின் எண்ணிக்கை சுமார் எட்டு லட்சத்து எண்பதாயிரம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், குறித்த சமூகவலையமைப்புகள் மீதான தடையை அரசாங்கம் நீக்கியுள்ள நிலையில் VPN மூலம் அவற்றை உபயோகித்த பாவனையாளர்கள் பெரும் ஆபத்தில் இருப்பதான விம்பமொன்று சில ஊடகங்களால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
VPN அப்ளிகேசனை பாவித்தவர்கள் தமது முக்கிய தகவல்களை பறிகொடுக்கும் ஆபத்து நிலவுவதாக அச்செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்துறையில் நிபுணர் எனக்கூறப்படும் ஒருவரை மேற்கோள்காட்டியே இச்செய்தி இணையத்தில் வலம் வருகின்றது.
அசேல வைத்தியலங்கார, என்றழைக்கப்படும் நிபுணரை நாம் தொடர்பு கொண்ட வேளை இது தொடர்பில் சரியாக விளக்கமளிக்க அவர் தடுமாறியிருந்தமையை நாம் அவதானிக்கக்கூடியதாக இருந்தது.
இது தொடர்பில் நாம் ஆராய்ந்த போது:
VPN என்றால் என்ன?
பாதுகாப்பாக மற்றும் கட்டுப்பாடுகளை மீறி இணையத்தை பயன்படுத்த வழியமைக்கும் ஒரு வசதியாக இதனை இலகுவாக விபரிக்கலாம்.
பெரும்பாலும் பாரிய நிறுவனங்கள் தமது தகவல் பரிமாற்றல் செயற்பாடுகளை பாதுகாப்பாக மேற்கொள்ள இவற்றை பயன்படுத்தி வந்தன.
VPN என்றால் என்ன, இது எவ்வாறு பயன்படுகின்றது, இதனை எதற்காக பயன்படுத்தலாம் போன்ற அடிப்படையான பல்வேறு கேள்விகளுக்கு விளக்கமளிக்கின்றது இக்காணொளி.
இதன் குறிப்பிடத்தக்க நன்மைகள்:
• மேம்பட்ட பாதுகாப்பு
• பிறிதொரு இடத்திலிருந்து பாவிக்க முடிகின்றமை: குறிப்பாக நீங்கள் உங்கள் நிறுவனத் தரவுகளுக்குள் வேறொரு தூர இடத்தில் இருந்து நுழைய விரும்பினால் , இதற்கான வசதியை VPN அளிக்கின்றது.
• பாவனையாளரின் இரகசியத்தன்மையை பேணமுடிதல்
• தடைசெய்யப்பட்ட தளங்களை பார்வையிட முடிதல் மற்றும் பிள்டர்களை தவிர்த்தல்
• IP முகவரியை மாற்றிக்கொள்ள முடிகின்றமை
VPN பாவித்த ஒருவர் ஊடாக பேஸ்புக்கிற்குள் இலகுவில் நுழைய முடியும் என்றால், பேஸ்புக் அவ்வளவு பாதுகாப்பு குறைபாடுள்ள நிறுவனமா?
வங்கிக் கணக்குகளுக்குள் நுழைய முடியும் என்றால், SSL சான்றிதழ் பெற்ற இணையத்தளங்கள் எதற்காக இயங்குகின்றன.
மொபைல் பாவனையாளர்கள் அறிந்துகொள்ள வேண்டியவை:
ஸ்மார்ட் போன் பாவனையாளர்களுக்கென VPN வசதியை வழங்கும் பல அப்ளிகேசன்கள் உள்ளன.
குறிப்பாக Android இயங்குதள பாவனையாளர்கள் Google Play Store லும், அப்பிள் பாவனையாளர்கள் அப்பிள் பிளேஸ்டோரிலும்  (IOS) இதனை தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.
மேலே விபரிக்கப்பட்டதைப் போல பல நன்மைகளை இவ் அப்ளிகேசன்கள் கொண்டுள்ளன.
சிலநாடுகளில் தடைசெய்யப்பட்ட முக்கிய இணையங்கள் மற்றும் சேவைகளை உபயோகிக்க VPN பெரிதும் உதவுகின்றது.
இதுதவிர மேலும் பல நன்மைகளை VPN அப்ளிகேசன்கள் மொபைல் பாவனையாளர்களுக்கு வழங்குகின்றது.
பீதியை கிளப்பிய போலிச் செய்திகள்
கடந்த இரண்டு நாட்களில் வௌிவந்த செய்திகளில் VPN பயன்படுத்தியோருக்கு பீதியைக் கிளப்பும் செய்திகள் வௌியிடப்பட்டிருந்தன.
குறியீட்டு தலைப்புகளாக
• 8 லட்சம் இலங்கையர் சிக்கலில்
• VPN  செயலியை பயன்படுத்திய 8 லட்சம் இலங்கையர்களுக்கு ஆபத்து
போன்ற தலைப்புகளின் கீழ் செய்திகளை வௌியிட்டிருந்தார்கள். இவை சோடிக்கப்பட்ட முட்டாள் தனமாக பொய்யான செய்திகளாகும்.
VPN தொடர்பில் அதிகளவில் 99% நன்மையே குறிப்பிடப்படுகின்ற போதிலும் ஆங்காங்கே சில எச்சரிக்கைகளும் இல்லாமல் இல்லை.
அதாவது எங்களது இணைய பாவனை விபரங்களை மூன்றாவது தரப்பு நிறுவனங்களுக்கு விற்பனை செய்தல், இணையத்தின் வேகத்தை குறைத்தல் மற்றும் தரவுக்கசிவு போன்ற சில விவகாரங்களாகும்.
எனினும் அவை சில செய்திச் சேவைகள் தெரிவிக்கும் வகையில் பீதியடைய வேண்டியவை அல்ல.
பொதுவாக நாம் உபயோகிக்கும் உலாவிகள் (Browsers), சமூகவலைதளங்களே எமது தரவுகளை அறுவடை ‘Data Harvest’ செய்வதாக நீண்டகாலமாக குற்றச்சாட்டுக்கள் உள்ளன. இவை எமது பாவனை தொடர்பான தரவுகளை விளம்பர நிறுவனங்களுக்கு விற்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இத்தகைய நிலையில் VPN தொடர்பிலும் அத்தகைய குற்றச்சாட்டுக்களே உள்ளன.
மழுப்பலாக, போலி விளக்கம் கூறிய  ‘இலங்கை நிபுணர்’ ?
இந்த விவகாரம் தொடர்பில் ஊடகங்களால் பரவலாக மேற்கோள்காட்டப்பட்ட அசேலவிடம் இது தொடர்பில் எமது செய்திப்பிரிவு வினவியிருந்தது.
இதற்கு பதிலளித்த அவர் நாம் மேலே சுட்டிக்காட்டியிருந்த , ‘Data Harvesting’
தொடர்பிலேயே மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டியிருந்தார்.
மேலும் Google Play Store மற்றும் Apple Store ல் இருக்கும் அனைத்து சேவைகளையும் நம்ப முடியாது என்று கூறிய போதிலும் கட்டணம் செலுத்தும் அப்ளிக்கேசன்களை நம்ப முடியும் என்ற தொனியில் மழுப்பலாக பதிலளித்திருந்தார்.
இங்கு குறிப்பிடப்பட வேண்டிய விடயம், எமது தமிழ் நியூஸ் செய்தி சேவையின் தாய் நிறுவனமான RELIANCE NETWORKS முற்று முழுதான பாதுகாப்பு பொறிமுறை சம்பந்தமான சேவை வழங்கும் ஒரு முன்னணி நிறுவனமாகும்.
இலங்கையின் தரப்படுத்தலில் முதல் 100 ற்குள் அங்கம் வகிக்கும் பல்தேசிய நிறுவனங்களுக்கு பல பாதுகாப்பு சேவைத் திட்டங்களை வழங்கிய நிறுவனமும் ஆகும்.
மேற்குறிப்பிட்ட விடயம் சம்பந்தமாக அசேல என்பவரிடம் எமது நிறுவனம் தொடர்பு கொண்டு அவரது கூற்று தொடர்பான தௌிவாக்கலுக்காக மிகத் துல்லியமான, தொழினுட்ப ரீதியான கேள்விகளை கேட்டிருந்தது.
அவ்வேளை, எமது நிறுவன பாதுகாப்பு நிபுணர்களின் துல்லியமான கேள்விகளுக்கு சரியான விடை கொடுக்க முடியாமல் குறிப்பிட்ட நிபுணர் தடுமாறியதும் பின்னர் அர்த்தமற்ற, பிழையான விளக்கங்களை கொடுக்க முயன்றதும் இங்கே சுட்டிக்காட்டத்தக்கது. (பதிவு செய்யப்பட்ட குரல் பதிவு எம்மிடம் உண்டு)
ஆகவே இங்கே யாரோ ஒருவரை மேற்கோள்காட்டி முட்டாள்தனமாக ஒரு ஊடகம் வௌியிட்ட செய்தியை அப்படியே பிரதி செய்து அனைத்து ஊடகங்களும் வௌியிட்டது வெட்கக் கேடான செயல்.
குறிப்பிட்ட அந்த செய்தியை வௌியிட்டதன் ஊடாக மிகப் பெரிய தவறான ஒரு பொய்ச் செய்தியை முட்டாள் தனமான ஊடகங்கள் சமூகத்திற்கு திணிக்க முனைந்தது கூனிக்குறுக வேண்டிய செயற்பாடு.
எமது வாசகர்கள் கூகுள் தேடு தளத்தில் பல்வேறுபட்ட தேடு சொற்களைக் கொண்டு VPN ஆபத்தா இல்லையா என்பதை தேடிப்பார்த்தால், ஆபத்து இல்லை என்பதை துல்லியமாக அறிந்து கொள்ளலாம்.
இந்த அடிப்படை அறிவேனும் குறித்த கணினி நிபுணருக்கோ அல்லது அந்த செய்தியை பிரசுரித்த ஊடக நிறுவனங்களுக்கோ செய்தி ஆசிரியர்களுக்கோ தெரியாமல் போனது ஏன்?
அதிகமாக இலவச அப்ளிகேசன்களை வழங்கும் நிறுவனங்களே, கட்டணம் செலுத்தப்பட்ட அப்ளிகேசன்களையும் சற்று மேம்பட்ட வசதிகளுடன் வழங்கி வரும் நிலையில், அவரின் கூற்றுக்கமைய பார்க்கும்போது கட்டணம் செலுத்தப்பட்டவையை மட்டும் நாம் எவ்வாறு நம்பலாம் என்ற கேள்வி எழுகின்றமையை மறுக்கமுடியாது.
எனவே இது ஒரு சில ஊடகங்களால் ஊதிப்பெரிதாக்கப்பட்ட ஒரு செய்தியாகவே தெரியவருகின்றது.
VPN களால் 99% மும் நன்மைகளே உள்ளது. ஆகையால் பொய்ச் செய்திகளை நம்பி பயத்தில் உறைந்து அதிரடியாக செயலில் இறங்கவேண்டிய எவ்வித அவசியமும் இல்லை.
அத்துடன் உலகளாவிய ரீதியில் உள்ள இணைய வல்லுனர்களின் அறிவுரைக்கேற்ப உங்கள் கடவுச் சொற்களை காலத்திற்கு காலம் மாற்றியமைத்தாலே போதுமானது.n
எனவே இத்தகைய செய்திகள் தொடர்பில் ஒரு தடவைக்கு பல தடவைகள் தேடிப்பார்ப்பதே சாலச்சிறந்தது.
இந்த உண்மைச் செய்தி உங்கள் நண்பர்களுக்கும் சென்றடைய செய்யுங்கள்.
(SLTnews.com)
Blogger இயக்குவது.