கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை முறையான பெறுபேறுகளை வெளிக்காட்டுவார்கள் எனின், அதற்கு ஏற்றாற் போல் இன்னும் அதிகமாக நிதிகளை ஓதுக்க முடியும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தெரிவித்தார்.
மொரடுவை, டி சொய்சா விளையாட்டு மைதானத்தில் 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 07ம் திகதி இடம்பெற்ற 'My Dad My Superstar' கிரிக்கெட் போட்டித்தொடரின் இறுதிப்போட்டியின் பரிசளிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர்,
'My Dad My Superstar' கிரிக்கெட் போட்டித்தொடரின் இறுதிநாள் இன்றாகும். இந்நாட்டில் கிரிக்கெட் விளையாட்டினை விருத்தி செய்வதற்கும் முன்னோக்கிச் கொண்டு செல்வதற்கும் பங்களிப்பினை வழங்;கிய பலர் இன்று இந்த போட்டித் தொடரில் இணைந்து கொண்டுள்ளனர். அவர்களை மிண்டும் கிரிக்கெட் விளையாட்டினுள் உள்வாங்கிக் கொள்வதே இதன் எதிர்பார்ப்பாகும்.
எமது நாட்டின் கிரிக்கெட் விளையாட்டினை நாம் முன்னோக்கிச் கொண்டு செல்ல வேண்டும். ஒரு காலத்தில் எமது கிரிக்கெட்டானது உலகத்தின் விசேடமான இடமொன்றினை பிடித்திருந்தது. அதனால் நாம் மீண்டும் அந்த நிலையினை அடைய வேண்டும். கிரிக்கெட் விளையாட்டானது பாராளுமன்றத்தினை போன்று பிரச்சினைகள் நிறைந்த இடமாக இருக்கக் கூடாது. பாராளுமன்றத்தில் பிரச்சினைகள் ஏற்பட்டாலும், கிரிக்கெட் விளையாட்டில் அவ்வாறான பிரச்சினைகள் ஏற்படக் கூடாது.
பாராளுமன்றத்தில் ஏற்படுகின்ற பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு சபாநாயகர் இருக்கின்றார். எனினும் இன்று கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அவ்வாறான நபர் ஒருவர் கிரிக்கெட்டினுள் இல்லை. அதனால் நாட்டில் கிரிக்கெட் விளையாட்டினை விருத்தி செய்வதற்காக நாங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கிரிக்கெட் உட்பட நாட்டின் ஏனைய விளையாட்டுக்களையும் விருத்தி செய்வதற்கு எமது அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. அதற்கு அவசியமான விளையாட்டு மைதானங்கள், நிதி வசதிகள் என்பவற்றை நாம் பெற்றுக் கொடுக்கின்றோம்.
அதேபோன்று கட்டுப்பாட்டு சபைகளும் பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டியுள்ளது. கட்டுப்பாட்டு சபைகள் முறையான பெறுபேறுகளை வெளிக்காட்டுவார்கள் எனின், அதற்கு ஏற்றாற் போல் இன்னும் அதிகமாக நிதிகளை ஓதுக்க முடியும். கட்டுப்பாட்டு சபைகளில் பிரச்சினைகள் இருக்கும் எனின் அந்த சபைகளுக்கு நிதி வசதிகளை செய்து கொடுப்பதற்கு பதிலாக கிராமங்களை அபிவிருத்தி செய்வதற்கு அதனை பயன்படுத்துவது மேலாகும். விளையாட்டுக்களுக்கு நிதியினை செலவழிப்பது நாட்டுக்கு புகழினை ஏற்படுத்திக் கொடுப்பதற்கே ஒழிய அந்த நிதியினை களியாட்ட நிலையங்களில் பயன்படுத்துவதற்கு அல்ல.
அதனால் கட்டுப்பாட்டு சபைகள் சிறந்த பெறுபேறுகளை வெளிக்காட்டுவார்கள் எனின், நாம் மென்மேலும் நிதியினை ஒதுக்கிக் கொடுப்போம். பாடசாலைகளில் கிரிக்கெட் உட்பட ஏனைய விளையாட்டுக்களை விருத்தி செய்து கொள்வதற்காக விசேட வேலைத்திட்டமொன்றை தயாரிப்பதாக கல்வி அமைச்சர் என்னிடம் கூறினார். அதனூடாக அனைத்து விளையாட்டுத்துறைகளையும் விருத்தி செய்து இலங்கைக்கு சர்வதேச மட்டத்தில் புகழினை ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதற்காக தேசிய ஒலிம்பிக் சங்கம், ஏனைய விளையாட்டு கட்டுப்பாட்டு சபைகள் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட வேண்டும். விளையாட்டின் ஊடாக சிறந்த பெறுபேறுகளை வெளிக்காட்டுவார்கள் எனின் நாட்டின் நிதியினை அந்த விளையாட்டுக்களுக்கு ஒதுக்குவது தொடர்பில் நாட்டின் பொதுமக்கள் எதிர்க்க மாட்டார்கள் என்பது எமது நம்பிக்கையாகும் என நான் இறுதியாக கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.
இந்த நிகழ்விற்கு போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுண ரணதுங்க, பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்க, முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் தலைவர் மைக்கல் திசேரா, அரசியல்வாதிகள் உட்பட விளையாட்டு வீரர்கள் மற்றும் விசேட அதிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
கருத்துரையிடுக