விமர்சனங்களுக்கும் ஏளனங்களுக்கும் அஞ்சிக்கொண்டு சமூகத்தின் பிரச்சினைகளை தட்டிக்கேட்காமல் இருக்க போவதில்லை என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுத்தீன் தெரிவித்தார்.

திருகோணமலை ஷாபி நகரையும் மஜீத் நகரையும் இணைக்கும் வேதத்தீவு பாலத்திற்கான அடிக்கல் நடும் விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில்,

உரிமை என்று பேசும் போது அதற்கான அர்த்தத்தையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். அரசியலமைப்பில் சொல்லப்பட்ட அனைத்து உரிமைகளும் எல்லா சமூகத்துக்கும் பொதுவானதே. அந்த வகையில் மத உரிமை, வாழ்வுரிமை எல்லோருக்கும் சமத்துவமானதும் சமமானதும் ஆகும்.

பெரும்பான்மை தலைவர்கள் செய்த தவறான காரியங்களும் அவர்களின் பிழையான அணுகு முறைகளுமே தமிழ் இளைஞர்களை ஆயுதம் ஏந்த வைத்தது. நாட்டின் பொருளாதாரம் சரிந்தது, அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் இன்னொரு சமூகத்தையும் சீண்டுகிறார்கள், குறிவைத்து தாக்குகிறார்கள், அபாண்டங்களை சுமத்துகிறார்கள் ஹலாலின் அர்த்தம் புரியாது அதன் மகிமை தெரியாமல் எங்களை அவமானப்படுத்துகிறார்கள்.

இஸ்லாமியர்களின் உள்ளங்களை உடைக்கிறார்கள். ஹலாலில் ஆரம்பித்த சமூகம் மீதான எதிர் கருத்துக்கள் இப்போது பல்வேறு விடயங்களில் பரவியுள்ளது. நமது சமூகத்தை இல்லாதொழிக்கும் வகையில் திட்டமிட்டு செயல்படுகின்றனர். புல்மோட்டை தொடக்கம் பொத்துவில் வரை நமது சமூகத்துக்கு உரித்தான காணிகளை வன வளத்துக்கு சொந்தமாக்கியுள்ளார்கள். காலப்போக்கில் இங்கிருக்கும் காணிகளையும் பிடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

நாங்கள் அடங்கி போனால் எதுவும் நடக்கலாம். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இவ்வாறான விடயங்களில் இருந்து சமூகத்தை பாதுகாக்க தூர நோக்குடன் செயல்படுகின்றது. எங்களை வீழ்த்தி விடுவதன் மூலம் சமூகத்துக்கான குரலை நசுக்க முடியும் என்று கனவு காண்போருக்கு காலம் பதில் சொல்லும் என்று தெரிவித்தார். இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி, பிரதி அமைச்சர் அப்துல்லாஹ் மஃரூப், கட்சியின் செயலாளர் சுபைர்தீன் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.