பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெண்கள் பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 8 வயது மாணவியை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியரின் விளக்கமறியலை வரும் ஜூலை 2ஆம் திகதிவரை நீடித்து பருத்தித்துறை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது. 

பருத்தித்துறை வியாபாரி மூலையைச் சேர்ந்த 46 வயதுடைய ஆசிரியர் ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

பருத்தித்துறை பெண்கள் பாடசாலையில் தரம் 3இல் கல்வி பயிலும் 8 வயது மாணவியை மலசல கூடத்துக்குள் வைத்து பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆசிரியர் உள்படுத்தினார் என்று பொலிஸாரால் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சம்பவம் மே மாதம் 27ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. 

எனினும் மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்ததையடுத்தே பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டது. 

அதனடிப்படையில் மாணவியிடம் வாக்குமூலம் பெற்ற பொலிஸார், அவரை மந்திகை வைத்தியசாலையில் பரிசோதனைக்காகச் சேர்த்தனர். அத்துடன், மாணவியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் வியாபாரி மூலையைச் சேர்ந்த 46 வயதுடைய ஆசிரியர் கைது செய்யப்பட்டு பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தினர். அவர் நேற்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.இந்த நிலையில் சந்தேகநபர் நேற்று பருத்தித்துறை நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டார். எனினும் சந்தேகநபர் விசாரணைகளில் தலையீடு செய்யலாம் என்றும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு அவரால் அச்சுறுத்தல் உண்டும் எனவும் பொலிஸாரால் மன்றுரைக்கப்பட்டது. 

அதனால் சந்தேகநபரின் விளக்கமறியலை வரும் ஜூலை 2 ஆம் திகதிவரை நீடித்து நீதிவான் உத்தரவிட்டார். 

இதேவேளை, மாணவி பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்படுத்தப்பட்டுள்ளார் என்று சட்ட மருத்துவப் பரிசோதனையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

(AdaDerana)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.