இன்று 07/06/2019 பிற்பகல் 6:15, பதியதவாவ ஜூம்ஆ பள்ளிவாயல் முன் வாகனம் நிறுத்தப்படுகின்றது மஃரிப், இஷா மற்றும் சிறு ஓய்வும் சிற்றூண்டிக்காவும்.

பள்ளி முன்றலில் ஒரு இளம் பொலீஸ் உத்தியோகத்தரும் ஊர்காவல் படை வீரரும் பாதுகாப்புக் கடமையில் நிற்கின்றனர். இருவரும் சிங்கள மொழி பேசும் பெரும்பான்மையினர்.

பள்ளிவாசலின் வாயற்கதவு ஒருவர் சென்று வரும் அளவிற்கு மாத்திரம் திறந்துள்ளது.

நானும் என்னுடன் பயணத்தில் இணைந்திருந்த சகோதரரும் உள்ளே நுழையும் போது போலீஸ் உத்தியோகத்தருடன் சுகம் விசாரித்துக் கொண்டு செல்கின்றேன்.

முதலில் சிறுநீர் கழிவறை பக்கம் செல்லும் போது இருள் சூழ்ந்திருக்கின்றது, அங்கிருந்த மின்ஆழிகள் இயங்கவில்லை.

சிறுநீர் கழித்துவிட்டு வெளியே வந்து படிகளில் ஏறி பள்ளி நோக்கி செல்கையில் அந்த இளம் போலீஸ் அதிகாரி அவரின் கையில் இருந்த பிளாஸ்டிக் போத்தலில் தண்ணீர் நிரப்பிக் கொண்டிருக்கிறார்.

சிரித்துக் கொண்டு என்னைப் பார்த்தவரிடம் சிங்களத்திலே உரையாடலை ஆரம்பித்தேன்.

‘இப்போது தொழுவதற்கு யாரும் பள்ளிக்கு வரவில்லையா’ இது நான்.
‘இல்லை, நான் இங்கு வந்த போது எவருமே இங்கு இருக்கவில்லை’ போலீஸ் உத்தியோகத்தர்.

‘நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்’ அவர்.
‘நான் அட்டாளைச்சேனையில் இருந்து வருகின்றேன், கண்டிக்கு செல்ல வேண்டும்’ நான்.
‘தொழுதுவிட்டு வருகின்றேன்’ நான்.
‘நல்லம் அதனை செய்யுங்கள்’ அவர்.

வூழுச் செய்து விட்டு பள்ளியின் கதவை திறக்கும் போது மிம்பர் பின்னால் 6:24நிமிடம் என்று டிஜிட்டல் நேரம் தெரிகின்றது. மஃரிப் தொழுகைக்கான அதான் ஒலிக்கவே இல்லை.
பள்ளிவாசல் இருளினால் இறுகப் போர்த்திக் கிடக்கின்றது.

மனதில் ஒரு வகை அச்சம். நாம் வருவதற்கு முன் ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்து பள்ளி போட்டப்பட்டு உள்ளதா? நாம் விடயம் தெரியாமல் நுழைந்திட்டோமா? என சிந்தனை குடைவு ஏற்பட, பின் ஆழிகளை அழுத்தி லைட் வெளிச்சத்தினை ஏற்றினேன்.

மனது நிறைந்த வலிகள்.
இருளில் மூழ்கிக் கிடந்தது சுஜூது செய்த நிலம். வுழுச் சத்தமும் தொழும் மௌனமான சத்தமுமின்றி ஏங்கிக் கிடந்தது பள்ளியின் சூழல்.
அய்யகோ, மனது வலிகளின் நெருக்கத்தினை உணரத் தொடங்கிற்று.

தனித்தே சேர்த்து சுருக்கி தொழுதுவிட்டு வெளியேற நாமென்ன வரண்டு போய் கிடக்கிறோமா? எங்கே நமது மிகுந்த பண்பட்ட ஆன்மீக உலகு.

இறைவா!
நீண்ட நாட்களின் பின், காதை இரு கைகளாலும் மறைத்துக் கொண்டு பத்தியதலாவையில் மஃரிப் தொழுகைக்கான அதான் ஒலிக்காமல் மூடிக்கிடந்த வரலாற்றுப் பள்ளியில் என்மீது இன்று சுமத்தப்பட்ட கடமையை நிறைவேற்றினேன்.

நான் பாங்கு சொல்லும் போது என்னுடன் கூட வந்திருந்த சகோதரருடன் சிங்களத்தில் யாரோ கதைப்பது கேட்கின்றது.
‘கையாலல் சலாஹ்/ தொழுகைக்கு விரைந்து வாருங்கள்’ என்று பாங்கு சொன்ன போது கண்ணீரும் சேர்ந்தே வந்திட்டு.

இறைவா என்னை மன்னித்துவிடு. இது உன்னை ஆண்டாண்டு காலமாக ஒரு நாளில் ஆக்க குறைந்தது 18மணித்தியாலங்கள் தொடர் தொழுகைகள் நடந்து கொண்டிருந்த பூமியன்றோ.. யார் இப்படியான அச்சத்தினை கவிழச் செய்தனர்.

யாருமற்று உனை அழைக்க எவருமில்லையோ இம்மண்ணில். என்ன நடந்து விட்டது எங்களுக்கு. ஒரு படுபாவியின் வழிகெட்ட சிந்தனையை கையாளக் தெரியாது ஊரெல்லாம் பிளவுகளை ஏற்படுத்திய போது அறிவை பயன்படுத்தாத விளைவை இன்று நாங்கள் சந்திக்கின்றோம்.

தொழுது விட்டு இந்தப் பள்ளியின் இருப்புக்காய் பிரார்த்தனை செய்வதைத் விடுத்து வோறொன்றும் இன்று எனக்கு கடமையாய் தெரியவில்லை.

வெளியேறி பள்ளியின் வெளிப்புற மின்விளக்குகளை மின்னேற்றம் செய்தேன். பாதுகாப்பிற்காய் இருந்த இளம் போலீஸ் உத்தியோகத்தர் வெளியே என்னை காத்துக் கொண்டிருக்கும் முறை ஏதோ அவரிடம் கேள்விகள் இருப்பதாய் தோன்றியது.

‘காதை மூடிக் கொண்டு ஒரு பாடல் பாடினீர்களே அது என்ன’ அவர்.
‘எங்கள் மார்க்க கடமையான தொழுகைக்கு ஆட்களை அழைக்கும் முறை அது’ நான்
‘இங்கு யாரும் இல்லையே, பிறகேன் அழைத்தீர்கள்’ அவர்.
‘இது கடமையான ஒன்று.

ஆட்கள் இல்லாவிட்டாலும் இறைவனின் பெயரை யும் அவனின் பண்பையும் கூறி அவனை வணங்குவதே தலையாயது என்பதே இதன் பொருள்’ நான்.
‘அப்படியாயின் ஏன் அதனை தமிழில் / சிங்களத்தில் கூறினால் தானே மக்களுக்கு விளங்கும்.

நீங்கள் வேறு ஏதோ மொழியில் சில வேளை அது அறாபியா. அதிலா கூறினீர்கள்? அவர்.
‘ஆம், அது அறாபி மொழிதான். அதன். அர்த்தம் முஸ்லீம்களுக்கு தெரியும். அன்பு என்பது ஒரு மொழி. அனைத்து முஸ்லீம்களும் அதனை வாசிக்கவும் பெரும் பாலானோர் அர்த்தமும் அறிவார்கள்’ நான்.

‘நீங்கள் பாடிய பாடல் எனக்கு எதற்கென்று தெரியாது. அதுதான் கேட்டேன்’ அவர்.
‘எங்களின் சமய செயற்பாடுகளை மற்றவர்கள் அறியாதது தான் இன்றைய சிக்கலின் பிரதான காரணம்’ நான்.
‘நிச்சயமாக’ அவர்.

‘நான் சென்று வருகின்றேன், யாரும் இன்று வராத பள்ளிவாசலை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு இறைவன் உதவட்டும்’ நான்.
‘இது எங்கள் அரச கடமை. நீங்கள் பத்திரமாக செல்லுங்கள். கடவுள் உங்களை பாதுகாக்கட்டும்’ அவர்.

வெளியிறங்கி பள்ளியியை திரும்பிப் பார்க்க சக்தியற்று வாகனத்தை ஆயத்தமாக்கிக் கொண்டு வெளியிறங்கும் போது யூனியன் ஹாட்வெயார் மட்டும் திறந்துள்ளது. வேறு எந்த முஸ்லீம் நடமாற்றமும் இன்றி கண்ணீர் தொடு தரையில் பதியதலாவ பள்ளிவாசல் மூழ்கிக் கிடந்தது.

இது யார் செய்த பாவம்.
வரண்ட சிந்தனையை கவனமெடுக்காமல் வளர்த்த நம் சமூகத்தின் அறிவற்ற அவலத்தின் அருவடைகளை நினையாப் புறங்களில் இருந்து கண்டு கொள்கின்றோம். இறைவன் நம்மைப் பாதுகாப்பானாக.

Thanks :- Farzan AR,
Addalaichenai...
07.06.2019

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.