முஸ்லிம்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பில் நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டுமென நாங்கள் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ, இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிடுவார் என ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷவை இன்று (08) முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து கலந்துரையாடிய பின்னர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது,

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷவை சந்தித்து, தாங்கள் இராஜினாமா செய்த பின்புலம் பற்றி விளக்கமாக எடுத்துக்கூறினோம்.

எங்களின் நடவடிக்கைகள் ஊடாக இனங்களுக்கிடையில் மோசமானதொரு துருவப்படுத்தல் ஏற்பட்டுவிடக்கூடாது என்று அவர் எங்களிடம் தெரிவித்தார்.

நாங்கள் அதை ஏற்றுக் கொள்கிறோம். அவ்வாறானதொரு நிலைமை ஏற்படுவதற்கு நாங்கள் இடமளிக்கப்போவதில்லை என்பதையும் அவரிடம் சொல்லியிருக்கிறோம்.

அதேநேரம், ஏன் இந்த தீர்மானத்தை எடுக்கவேண்டியேற்பட்டது என்பது குறித்தும் அவருக்கு சகல விளக்கத்தையும் வழங்கியிருக்கின்றோம்.

தற்போது முஸ்லிம் சமூகம் எதிர்நோக்குகின்ற நெருக்கடிகளில் அவர் முன்னின்று சில விடயங்களை நாட்டு மக்களுக்கு பேசவேண்டும். அதனூடாக பதற்றத்தை தனிப்பதற்கு அவரும் பங்களிப்புச் செய்யவேண்டும் என்று வேண்டிக்கொண்டோம்.

இன்று நாங்கள் அவரிடம் பேசிய விடயங்களை வைத்து அவர் அறிக்கையொன்றை விடுப்பதற்கு தயாராக இருப்பதாக இதன்போது எங்களிடம் தெரிவித்தார் என்றார்.

இச்சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எச்.எம். பௌசி, ரிஷாத் பதியுதீன், அலிசாஹிர் மௌலானா, எச்.எம்.எம். ஹரீஸ், அமீர் அலி, அப்துல்லாஹ் மஃறூப், இஷ்ஹாக் ரஹ்மான், ஏ.எல்.எம். நசீர், வீ.சி. எஸ்.எம்.எம். இஸ்மாயில் மற்றும் எதிர்க் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான பந்துல குணவர்தன¸ கெஹலிய ரபுக்வெல்ல ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.