கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தும் போராட்டம்
==========================
வை எல் எஸ் ஹமீட்

கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கோரி கடந்த நான்கு நாட்களாக உண்ணாவிரதம் நடைபெற்றுவருவது நாம் அறிந்ததே! இந்தக் கோரிக்கையை நியாயப்படுத்துவதற்காக கூறப்படுகின்ற பிரதான காரணங்கள், இவ்வுப செயலகம் கடந்த முப்பது ஆண்டுகளாக இயங்கி வருகின்றது; அதைத் தரமுயர்த்திக் கேட்பதில் என்ன தவறு என்பதும் காலப்போக்கில் நிர்வாகங்கள் பரவலாக்கப்படுவது இயல்பானதே! என்பதுமாகும்.

இங்கு அவர்களால் எழுப்பப்படுகின்ற கேள்வி இந்த நியாயமான கோரிக்கையை முஸ்லிம்கள் ஏன் எதிர்க்க வேண்டும்; என்பதாகும். இதே கருத்தை அமைச்சர் மனோ கணேசன் உட்பட பலர் தெரிவிக்கின்றனர். இங்குதான் அமைச்சர் மனோ உட்பட பலரும் பிரச்சினையை புரிந்துகொள்ளாமல் கருத்துத் தெரிவிக்கின்றார்கள்.

தமிழர்கட்கு ஒரு பிரதேச செயலகமல்ல, ஓராயிரம் செயலகம் வழங்கினாலும் முஸ்லிம்கள் எதிர்க்கப் போவதில்லை. அன்று நிந்தவூரில் இருந்து இனவாத ரீதியில் காரைதீவு பிரிந்தபோது அதற்குள் சுமார் நாற்பது வீதம் முஸ்லிம்களைக்கொண்ட மாளிகைக்காடு, மாவடிப்பள்ளி முஸ்லிம் கிராமங்களை முஸ்லிம்களைக் கேட்காமல் வரதராஜபெருமாள் காலத்தில் இணைத்தபோதும்
முஸ்லிம்கள் இன்றுவரை ஆட்சேபணை தெரிவிக்கவில்லை.

அக்கரைப்பற்றில் இருந்து ஆலையடிவேம்பை அன்று ரங்கநாயகி பத்மநாதன் பிரித்தபோதும் யாரும் ஆட்சேபணை தெரிவிக்கவில்லை.

அண்மையில் நாற்பது வீதத்திற்குமேலான முஸ்லிம்களையும் இணைத்து சம்மாந்துறையில் இருந்து நாவிதன்வெளியைப் பிரித்து தனி செயலகம் அமைத்தபோதும் யாரும் எதிர்க்கவில்லை. ஏனெனில் முஸ்லிம்கள் தமிழர்களுடன் இணைந்து வாழவே கூடாது; என ஒருபோதும் நினைக்கவில்லை. அப்படிப்பட்ட முஸ்லிம்கள் கல்முனைப் பிரிப்பை மட்டும் ஏன் எதிர்க்கின்றார்கள்.

அமைச்சர் மனோ போன்றவர்கள் சற்று ஆழமாக சிந்தித்தால் இவ்வாறெல்லாம் தமிழர்களுடன் விட்டுக்கொடுப்புகளைச்செய்து இணைந்துவாழ விரும்பும் முஸ்லிம்கள் கல்முனையில் எதிர்க்கின்றார்கள்; என்றால் அதற்குள் ஓர் ஆழமான காரணம் இருக்கும்; அது நிச்சயமாக இனவாதமாக இருக்க முடியாது; மாறாக நியாமானதாகவே இருக்கும்; என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

அவ்வாறு சிந்தித்திருந்தால் இவ்வாறு அவசரப்பட்டு அறிக்கைகளை விடமுன் அந்த நியாயமான, வலுவான காரணங்களை தேடியிருக்கலாம்.

என்ன அந்தக்காரணம்
—————————-
இலங்கையின் அனைத்து பிரதான நகரங்களிலும் முஸ்லிம்கள் வர்த்தகம் செய்கிறார்கள்; ஆனாலும் அவைகள் முஸ்லிம்களின் நகரம் என்று சொல்லமுடியாது; ஏனெனில் அவர்கள் அங்கெல்லாம் பெரும்பான்மை இல்லை. இதற்கு விதிவிலக்காக இருப்பது கல்முனை நகரம் மாத்திரம்தான். இங்கு 90% வர்த்தக நிலையங்கள் முஸ்லிம்களுக்குரியதாகும்.

இது மிக நீண்டகால வரலாற்றைக்கொண்ட ஒரு நகரமாகும். ஒரு காலத்தில் வட கிழக்கிலேயே அதிகூடிய வருவானமாத்தைப்பெற்ற உள்ளூராட்சி சபையாக கல்முனைப் பட்டினசபை இருந்ததாக கூறப்படுகிறது. இன்றும் நகை வியாபாரத்தில் கொழும்பு செட்டிதெருவுக்கு அடுத்ததாக இருப்பது கல்முனை என்றும் கூறப்படுகிறது. கல்முனைப் பொதுச்சந்தை அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களுக்கான உணவுப்பொருள் விநியோகத்தின் பிரதான மையமாக அமைந்திருக்கின்றது.

இவ்வளவு முக்கியத்துவத்தையும் கொண்ட இப்பழமைவாய்ந்த பெருநகரத்தின் பெரும்பான்மைதான் முஸ்லிம்களாகும். இது வெள்ளையர் ஆட்சிலேயே முஸ்லிம்களின் வர்த்தக ஆதிக்கத்தின்கீழ் இருந்த ஒரு வரலாற்றுத்தடமாகும். இதனால்தான்  முஸ்லிம்களின் மானசீகத் தலைநகராக இது போற்றப்படுகின்றது.

இந்தக் கல்முனையின் முக்கியத்துவத்தை இங்கு குறிப்பிடுவதற்குக் காரணம் இந்தக் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலக கோரிக்கையின் ஆள்புல எல்லைக்குள் இந்தக் கல்முனை நகரமும் உள்வாங்கபடவேண்டுமென்ற தமிழரின் கோரிக்கையாகும். அதுதான் இவ்வுப பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுவதில் முஸ்லிம்களுக்கு இருக்கின்ற பிரச்சினையாகும்.

இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படின் முஸ்லிம்களின் இப்பெரும் வர்த்தக மையம் மட்டுமல்ல, இன்று இருக்கின்ற பிரதான செயலகமும் கல்முனை மாநகரசபைக் கட்டிடமும்கூட அவர்களது ஆள்புல எல்லைக்குள்ளேயே வரும்.

அவ்வாறு வந்தால் இலங்கையிலேயே ஒரு பிரதேச செயலகத்தின் ஆள்புல எல்லைக்குள் இருந்து இன்னுமொரு ஆள்புல எல்லையை நிர்வகிக்கின்ற முதலாவது பிரதேச செயலகமாக தற்போதைய இந்த பிரதான செயலகம் வரும். அல்லது தெற்குநோக்கி அப்பிரதேச செயலகத்தை எங்காவது ஒரு இடத்திற்கு நகர்த்தவேண்டி வரும். இதற்கு எந்த சமூகமாவது உடன்படுமா? என்று வினவ விரும்புகின்றோம்.

உதாரணமாக, நுவரெலியவாவில் தமிழர்களின் பெரும்பான்மையான வர்த்தக நிலையங்களைக்கொண்ட ஒரு நகரத்தை இன்னுமொரு சமூகத்தின் நிர்வாக ஆள்புல எல்லைக்குள் வழங்குவதற்கு அமைச்சர் மனோகணேசன் சம்மதிப்பாரா?

தமிழர்களின் இந்தக்கோரிக்கையை நியாயப்படுத்துவதற்காக மூன்று குறிச்சிக்குள்கூட உள்ளடக்க போதாத சனத்தொகைக்கு பதினொரு குறிச்சிகளை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். எவ்வாறு இவ்வுப பிரதேச செயலகம் முப்பது வருடங்களுக்குமுன் ஆயுதமுனையில் உருவாக்கப்பட்டதோ, அதே அடிப்படையிலேயே இப்பெரும் எண்ணிக்கையான குறிச்சிகளும் உருவாக்கப்பட்டன.

எனவே, தமிழருக்கென்று ஒரு தனியான பிரதேச செயலகம் வழங்குவதில் முஸ்லிம்களுக்கு எதுவித பிரச்சினையுமில்லை. ஆனால் அப்பிரதேச எல்லைக்குள் கல்முனை நகரம், அந்த வர்த்தக மையம் உள்வாங்கப்பட வேண்டுமென்ற தமிழரின் கோரிக்கைதான் பிரச்சினையாகும்.

சுருங்கக்கூறின் இன்று கல்முனையில் நடைபெறுகின்ற உண்ணாவிரதம் தமிழருக்கென ஒரு தனியான பிரதேச செயலகத்தைப் பெற்றுக்கொள்வதற்கானது; என்பது ஒரு பிழையான, வஞ்சகத்தனமான பிரச்சாரமாகும். ஏனெனில் செயலகம்தான் அவர்களது கோரிக்கையாயின் நாளையே அதனைப் பெற்றுக்கொள்ளலாம், கல்முனை நகரைவிடுத்து ஏனைய அவர்கள் வாழும் பகுதிகளை உள்ளடக்கியதாக.

இவர்களது இந்த வஞ்சகத்தனமான பிரச்சாரத்தின் வலையில் சிக்கியவர்களுள் ஒருவர்தான் அமைச்சர் மனோ கணேசன் அவர்களும்.

மேற்கூறப்பட்ட பெருமைகளைக்கொண்ட கல்முனை நகரத்தை அவர்களுக்குத் தாரைவார்க்கவேண்டுமென இவர்கள் எதிர்பார்க்கின்றார்களா? அவர்களின் அவ்வாறான ஒரு நகரத்தை அவர்கள் தாரை வார்ப்பார்களா?

எனவே, பிரதேச செயலகம் என்பது இவர்களது கோரிக்கையின் வெளித்தோற்றப்பாடு மாத்திரம்தான். இவர்களது உள்நோக்கம் முஸ்லிம்களின் பிரதான வர்த்தக மையத்தை தன் நிர்வாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதாகும். இதில் அவர்கள் வெற்றிபெற்றால் இதே ஆள்புல எல்லைக்கு உள்ளூராட்சி சபை கேட்பார்கள். அதன்பின் அவர்கள் கொடுக்கும் நெருக்குதலில் முஸ்லிம் வர்த்தகர்கள் ஒவ்வொருவராக அங்கிருந்து வெளியேறவேண்டிவரும்.

IPKF காலத்து அனுபவம்
——————————-
கல்முனை வர்த்தக நகரை கையகப்படுத்தும் அவர்களது திட்டம் இன்று நேற்று ஆரம்பித்ததல்ல. எண்பதுகளின் பிற்பகுதியில் இந்திய அமைதிப்படை ( IPKF) வட கிழக்கை ஆட்கொண்டபோது கல்முனைப் பிராந்தியத்திற்குப் பொறுப்பாக ஒரு தமிழ் பிரிகேடியர் நியமிக்கப்பட்டிருந்தார்.

அவருடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக்கொண்ட கல்முனையின் சில தமிழ்ப் பிரமுகர்கள் முஸ்லிம்களைப் பற்றிய தப்பெண்ணெத்தை அவரிடம் விதைத்தார்கள். கல்முனை வர்த்தக நகரம் தமிழருக்குரியதென்றும் அதனை முஸ்லிம்கள் அடாத்தாக பிடித்துக்கொண்டதாகவும் அவரிடமும் பொய்களையும் புனை கதைகளையும் கூறியிருந்தார்கள். அந்தக் காலப்பகுதியில் அவ்வமைதிப்படை முஸ்லிம்கள்மீது விரோதமாகவே நடந்துகொண்டார்கள்.

1989ம் ஆண்டு மறைந்த தலைவர் பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து தலைவரின் முயற்சியினால் தமிழ்- முஸ்லிம் பிரஜைகள் குழு அமைக்கப்பட்டது. தமிழ்த்தரப்பின் அவ்வாறு முஸ்லிம்களைப் போட்டுக்கொடுத்தவர்களே உள்வாங்கப்பட்டனர்.

முஸ்லிம் தரப்பின் தலைவராக மறைந்த சேகு இப்றாஹீம் மௌலவி அவர்களும் செயலாளராக நானும் நியமிக்கபட்டோம். அவ்வாறு போட்டுக்கொடுத்தவர்கள் முன்னாலேயே கல்முனையில் உள்ள கடைகள் அனைத்தும் முஸ்லிம்களின் சட்டபூர்வ சொத்துக்கள்; எவையும் அடாத்தாக பிடிக்கப்பட்டதல்ல; என்பதை ஆணித்தரமாக நிறுவுகின்ற பாக்கியத்தை இறைவன் தந்தான். அவர்களால் எங்களை மறுத்துப்பேச முடியவில்லை. அவ்வேளையில் தமிழ் பிரிகேடியர் நாடு செல்ல, வட நாட்டைச் சேர்ந்த துக்கால் என்பவர் பிரிகேடியராக வந்தார். அவருக்கும் தெளிவுபடுத்தினோம். அதன்பின் IPKF முஸ்லிம்களுடன் மிகவும் அந்நியோன்யமாக பழகத்தொடங்கியது.

அதனைத் தொடர்ந்து ஆயுத இயக்கங்கள் கல்முனை வர்த்தகர்களுக்கு பல தொல்லைகளை கொடுத்தார்கள். IPKF பாதுகாப்பிற்கு மத்தியிலும் கொள்ளைகளும் கப்பம் பறித்தல் போன்றவையும் இடம்பெற்றன. அச்சூழலில் IPKF ஐ மாறுவேடத்தில் கடைகளில் கொண்டுவந்து வைத்து கல்முனை பசாரைப் பாதுகாத்தோம்; அல்ஹம்துலில்லாஹ்.

இவ்வாறு கல்முனை வர்த்தகர்களை கல்முனையில் இருந்து துரத்தி கையகப்படுத்தும் முயற்சி என்றோ ஆரம்பித்துவிட்டது. அவை வெற்றயளிக்காத நிலையில்தான் நிர்வாக ரீதியில் கல்முனையை தன் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்து தங்கள் இலக்கை அடைய ஆசைப்படுகிறார்கள்.


நேரடியான, மறைமுகமான தொல்லைகளைக் கொடுத்தால் முஸ்லிம்கள் அரைகுறை விலைகளுக்கு தங்கள் கடைகளை விற்றுவிட்டு சென்றுவிடுவார்கள்; என நினைக்கிறார்கள்.

யுத்தகாலத்தில் தோற்றுவிக்கப்பட்ட பல இனக்கலவரங்கள் மற்றும் அசாதாரண சூழ்நிலை காரணமாக Round about இற்கு வடக்குப் பக்கம் பல சொத்துக்களை ஏற்கனவே முஸ்லிம்கள் தமிழருக்கு விற்றுவிட்டார்கள். இவ்வாறு நீண்டதொரு திட்டம் இதுவாகும். இதன் மையப்புள்ளி முஸ்லிம்களின் பொருளாதாரமாகும்.

வட கிழக்கில் அனைத்தும் அவர்களது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். அவர்கள் 1/3 பங்கு இருந்தாலும் அவர்கள் ஆளும் இனமாக இருப்பதற்கு வட கிழக்கு இணைக்கப்பட வேண்டும். ஆனால் முஸ்லிம்களின் நிர்வாகத்தின்கீழ் ஒரு பிரதான நகர்கூட இருக்கக்கூடாது.

வட கிழக்கைத் தமிழ் ஆளவேண்டும், ஆளுபவன் ஒரு தமிழனாக இருக்கும்வரை. ஆளுபவன் தமிழ்பேசும் முஸ்லிமாக இருந்துவிடக்கூடாது. அதைவிட ஒரு சிங்களவர் ஆள்வதுமேல். இது அவர்களது
கொள்கை.

அதனால்தான் கிழக்கில் தமிழ்பேசும் முஸ்லிம் ஆளுநராக வந்தால் ஏதாவது சாக்குப்போக்கு காரணங்களைச் சொல்லி அதனை எதிர்க்கின்றார்கள். ஹிஸ்புல்லா இல்லாமல் வேறு ஒரு முஸ்லிம் நியமிக்கப்பட்டிருந்தால் அவரை எதிர்ப்பதற்கும் ஒரு காரணம் கண்டுபிடித்திருப்பார்கள். ஆனால் பெரும்பான்மையைச் சேர்ந்த ஒருவரை ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் அவர்கள் தமிழுக்காகவும் தமிழ்பேசும் சமூகத்திற்காகவும் போராடுபவர்கள்!

அதேபோல் அம்பாறையில் தமிழ்பேசும் மக்களுக்காக ஒரு கரையோர மாவட்டத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்; ஏனெனில் ஒரு முஸ்லிம் அரச அதிபராக வந்துவிடக்கூடாது. அதைவிட அம்பாறையில் ஒரு பெரும்பான்மை அரச அதிபரை ஏற்றுக்கொள்வார்கள். சிங்களத்தையும் ஏற்றுக்கொள்வார்கள்.

கல்முனை உப பிரதேச செயலகத்திற்கான கணக்காளர் இதுவரை கல்முனை பிரதான அலுவலகத்தில்தான் இருந்தார். அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. அம்பாறையில் ஒருவரை வைத்து 15 மைல்கள் தூரம் சென்று காரியம் முடிப்பார்கள். ஆனாலும் அவர்கள் தமிழுக்காகப் போராடுகிறார்கள். வட கிழக்கு இணைப்பிற்கு முஸ்லிம்கள் இணங்க வேண்டும்.

இந்தப் பின்னணியில், தெற்கில் முஸ்லிம்களின் பொருளாதாரம் இலக்கு வைக்கப்பட்டு மதவாதம் முஸ்லிம்களை கசக்கிப் பிழிந்துகொண்டிருக்கும்போது அதே மதவாதத்திற்குள் தஞ்சம் புகுந்து கல்முனையில் சிற்றினவாதத்தால் முஸ்லிம்கள் இலக்கு வைக்கப்படுகின்றார்கள்.

எனவே, இன்றைய அவர்களது உண்ணாவிரதப்போராட்டம் என்பது முஸ்லிம்களின் மானசீகத் தலைநகரை நிர்வாக ரீதியாக தன் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கான ஒரு போராட்டமே தவிர பிரதேச செயலகத்திற்கான போராட்டமல்ல. அதற்காக போராடவேண்டிய அவசியமே இல்லை. நாளையே அதனைப் பெற்றுக்கொள்ளலாம்.

இதனை வஞ்சகத்தனமான மறைப்பதற்காக இந்த நகரின் பின்புறம் வாழுகின்ற மூன்று குறிச்சிக்குரிய தமிழர்களுக்காக 11 குறிச்சிகளை அன்று ஆயுதபலத்தில் உருவாக்கி இந்தப்பிரச்சாரத்தைச் செய்கிறார்கள்.

இந்த இனவாத உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் தமிழ்தலைவர்களே! நீங்கள் ஒரு தீர்மானத்தை எடுங்கள். மூன்று குறிச்சிக்குரிய தமிழர்கள் வாழ்கின்றார்கள் என்பதற்காக ஒரு மாநகரையே உங்களுக்கு விட்டுத்தரவேண்டுமானால் வட கிழக்கிலுள்ள அனைத்து பிரதேச செயலக எல்லைகள், உள்ளூராட்சி எல்லைகளுக்குள் வாழுகின்ற முஸ்லிம்களுக்கும் தனியான செயலகம், சபை என்பன வழங்குவதற்கு தீர்மானமெடுங்கள், காரைதீவு, நாவிதனவெளி உட்பட.

தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் நிரந்தர எல்லைக்கோட்டைப் போட்டுவிடுங்கள். You can’t have the cake and eat the cake. நீங்கள் கேக்கை சாப்பிடவும் வேண்டும்; வைத்திருக்கவும் வேண்டும்; என்றால் முடியாது. ஒன்றில் சாப்பிடுங்கள் அல்லது வைத்திருங்கள்.

முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட எந்தவொரு நிர்வாகத்தினுள்ளும் தமிழர்கள் இருக்கக்கூடாது; அவர்களுக்கு தனிநிர்வாகம் வேண்டும்; ஆனால் தமிழர் பெரும்பான்மை நிர்வாகங்களுக்குள் முஸ்லிம்கள் இருக்கலாம் என்பது எந்த அடிப்படையில் நியாயம்.

இவ்வாறு நியாயத்தை அநியாயமாகவும் அநியாயத்தை நியாயமாகவும் பேசும் நீங்கள் தானா பேரினவாத அநியாயங்களுக்காக போராடுகிறீர்கள்? இன்று இந்த நியாயமான போராட்டத்திற்கு பேரினவாதம் உங்களுக்கு ஆதரவு தருகின்றதே! ஏன் என சிந்தித்தீர்களா?

சுதந்திரத்தின்பின் இப்பேரினவாதம் உங்களை அரவணைத்திருந்தால் நீங்கள் ஆயுதம் தூக்கியிருப்பீர்களா? இத்தனை உயிர்களை இழந்திருப்பீர்களா? இன்றும் இதே பேரினவாதம் உங்கள் காணிகளைப் பிடிக்கிறது. உங்கள் கோயில் எல்லைகளுக்குள் சிலை வைக்கிறார்கள்.

அவ்வாறு உங்களைக் கபளீகரம் செய்யத்துடிக்கும் பேரினவாதம் கல்முனையில் உங்களை அரவணைக்கத் துடிக்கின்றது; என்றால் உங்கள் போராட்டத்திற்கு அவர்களே தலைமை தாங்குகிறார்கள்; என்றால் இதனைக்கூட புரிந்துகொள்ள முடியாத சிறு குழந்தைகளா நீங்கள்?

ஒரு புறம் பேரினவாதத்துடன் போராடிக்கொண்டு மறுபுறம் முஸ்லிம்களைச் சிதைக்கும் விடயங்களில் அதே பேரினவாதத்துடன் கை கோர்ப்பீர்களா? இதுதானா உங்கள் நியாயம்?

எனவே, அன்பின் தமிழ்த் தலைவர்களே! நாடு சுதந்திரமடைந்ததிலிரிந்து உங்களை நசுக்கிவந்த பேரினவாதம் இன்று முஸ்லிம்களை நோக்கித் திரும்பியிருக்கின்ற வேளையில் அவர்களின் சதிவலைக்குள் வீழ்ந்துவிடாதீர்கள். தமிழ்பேசும் இரு சகோதர சமூகங்களையும் ஒற்றுமையாக வாழவிடுங்கள். பிரச்சினைகளை பேசித்தீர்க்க முன்வாருங்கள்.

அடுத்தவருக்கு நியாயமானவர்களாக இருங்கள். உங்கள் போராட்டங்களுக்கும் வெற்றிகிடைக்கும்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.