ஆரோக்கியமான சூழ்நிலை  உருவாகுமாக இருந்தால், மீண்டும் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்பது தொடர்பாக பரிசீலிக்கப்படும்
 - ஸ்ரீல.மு.கா. தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவுஃப் ஹக்கீம் 

( ஐ. ஏ. காதிர் கான்  )

 ஆரோக்கியமான ஒரு சூழ்நிலை உருவாகுமாக இருந்தால், மீண்டும் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்பது தொடர்பாக பரிசீலிக்கப்படும் என்று, ஸ்ரீல.மு.கா. தலைவரும், முன்னாள் அமைச்சருமான ரவுஃப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
    "ஹிரு"  தொலைக்காட்சியில் நேற்று முன் தினம் (17) திங்கட்கிழமை இரவு 10.30 மணிக்கு  ஒளிபரப்பான "சலக்குன" (தடயம்)  நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத்  தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு  குறிப்பிட்டுள்ளார். 
   நாட்டில் ஒரு குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுவிடக்கூடாது என்றும், இளைஞர்கள் பிழையான திசையில் பயணித்துவிடக்கூடாது என்றும் கருதியே முஸ்லிம் உறுப்பினர்கள் ஒன்பது பேரும் அமைச்சுப் பொறுப்புக்களைத்  துறந்தனர். 
   தற்போது மீண்டும் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக் கொள்வதால், அவ்வாறானதொரு சூழ்நிலை மீண்டும் உருவாகாது என்று எங்களுக்கு நம்ப முடிந்தால், அது குறித்து எங்களுக்குள் கலந்துரையாடித்  தீர்மானம் எடுக்கப்படும் என்றும் இதன்போது அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.        அதேநேரம், ஐக்கிய தேசியக்  கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கபீர் ஹாஷிம் மற்றும் அப்துல் ஹலீம் ஆகியோர், தாங்கள் வகித்த அமைச்சுப் பொறுப்புக்களை மீள ஏற்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தமை குறித்தும் இந் நிகழ்ச்சியில் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. 
   இதற்கு பதில் வழங்கிய ஹக்கீம் எம்.பி.,  எங்களுடன் இணைந்து ஐக்கிய தேசியக்  கட்சியின் உறுப்பினர்களாக அவர்களும் பதவிகளைத்  துறந்தமையைப்  பெரிதும் மெச்சுவதாகக்  குறிப்பிட்டுள்ளார்.
   அத்துடன்,  அவர்கள் மீண்டும் பதவி ஏற்பார்களாக இருந்தால், அது அவர்களின் தனிப்பட்ட தீர்மானமாக அமையும் என்றும் கூறியுள்ளார். 
   இதேவேளை, சாதாரண முஸ்லிம்களை அடிப்படைவாதிகளாக மாற்றுவதற்கான முயற்சிகளை,  பிரயத்தனம் கொண்டு செய்கின்ற பாரிய சக்திகள் செயற்படுவதாகவும்  கூறியுள்ள அவர், அந்தச்  சக்தி என்னவென்று வெளிப்படையாகக் கூற முடியாது என்றும் இதன்போது ரவுஃப் ஹக்கீம் எம்.பி. சுட்டிக்காட்டியுள்ளார்.
 
( ஐ. ஏ. காதிர் கான் )

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.