முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் 
பெருநாளாக நோன்புப் பெருநாள் அமைய வேண்டும் 
================================== 
முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒருவகையான அச்சத்தில் மூழ்கி இருக்கும் இன்றைய சூழ்நிலையில் 
மலர்ந்திருக்கும் புனித நோன்புப் பெருநாள் இலங்கை முஸ்லிம்கள் அனைவருக்கும் முழுமையான  பாதுகாப்பையும் நிம்மதியையும் கொண்டு வரவேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அமைச்சர் பைஸல் காஸீம் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.அவர் அதில் மேலும் குறிப்பிடுகையில்;

ஏப்ரல் 21 குண்டு வெடிப்பைத் தொடர்ந்து இந்த நாட்டு முஸ்லிம்கள் பெரும் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.அவர்களின் சொத்துக்கள் எரிக்கப்பட்டு உயிர்கள் பறிக்கப்பட்டு கைது செய்யப்பட்டு  
பாதுகாப்பற்ற ஒரு சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

இந்த நாட்டை நேசிக்கும் -இந்த நாட்டுக்கு எதிராக ஒருபோதும் செயற்படாத முஸ்லிம்கள் இந்த அசாதாரண சூழலை விரும்பவில்லை.ஏனைய இன மக்களுடன் சேர்ந்து வாழவே விரும்புகின்றனர்.நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் பரந்து வாழுகின்ற முஸ்லிம்கள் வரலாற்று நெடுகேயும் ஏனைய இனங்களுடன் நல்லுறவைப் பேணியே வருகின்றனர்.

இருந்தாலும்,அரசியல் இலாபம் தேடும் சில தீய சக்திகள்  இனங்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி-முஸ்லிம்களை பலி கொடுத்து தங்களின் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு முயற்சி செய்து வருகின்றன.இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு நாம் அரசியல்ரீதியாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம்.சில விடயங்களில் நாம் வெற்றியும் கண்டுள்ளோம்.இருந்தாலும்,முஸ்லிம்கள் மனதில் ஒருவகையான அச்சம் குடிகொண்டிருப்பதை மறுக்க முடியாது.

குண்டு வெடிப்புடன் எந்த வகையிலும் சம்பந்தப்படாத அப்பாவி முஸ்லிம்கள் இவ்வாறு துன்பங்களை அனுபவிப்பதும் சிறைகளில் வாடுவதும் முடிவுக்கு வரவேண்டும்.மலர்ந்திருக்கும் இந்தப் பெருநாளில் அல்லாஹ் அந்த நிலையை ஏற்படுத்த வேண்டும்.

முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக போராடும் எம்போன்ற அரசியல் தலைவர்களின் போராட்டத்துக்கு அல்லாஹ் வெற்றியைத் தர வேண்டும் என்றும் அணைத்து முஸ்லிம்களின் வாழ்விலும் நிலையான சுபீட்சத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் நான் இந்தச் சந்தர்ப்பத்தில் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றேன்.-எனக் குறிப்பிட்டுள்ளார்.

[ ஊடகப் பிரிவு ]

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.