முஸ்லிம் பெண் ஒருவரின் முந்தானையால் அவரது கழுத்து கட்டப்பட்டு பாதையில் இழுத்துச் செல்லப்பட்ட அகோரம்
- மினுவாங்கொடையில் சம்பவம்

( மினுவாங்கொடை நிருபர் )

   முச்சக்கர வண்டியில் வந்த பேரினவாதிகள் இருவர், அப்பாதையால் நடந்து சென்ற முஸ்லிம் பெண்மணி ஒருவரின் கழுத்தில், அவருடைய  முந்தானையால் கட்டிப் பாதையில் இழுத்துச் சென்ற சம்பவம் ஒன்று, மினுவாங்கொடை பொலிஸ் பிரிவில் பதிவாகியுள்ளது.       இச்சம்பவம், கடந்த (24) திங்கட்கிழமை அதிகாலை ஐந்து மணியளவில், மினுவாங்கொடை - கல்லொழுவை கிழக்கு கிராம சேவகர் முஸ்லிம் பிரிவில் இடம்பெற்றுள்ளது.
   இச்சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது, 
   கொழும்பு -  அப்பல்வத்தையைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் பெண்மணி,  கல்லொழுவையில் வசிக்கும் அவரது மகள் வீட்டிலிருந்து (24) திங்கட்கிழமை  காலை 5 மணியளவில்,  கொழும்புக்குச்  செல்வதற்காக நடந்து சென்றுகொண்டிருந்த வேளை,  மினுவாங்கொடை கொழும்பு  வீதி திசையிலிருந்து திரும்பி  கல்லொழுவைச் சந்தியால் வந்த ஒரு முச்சக்கர வண்டி,  அப்பெண்மணி அருகிலே மிகவும் மெதுவாக நெருங்கிய மறு கணமே முன்னே சென்று மீண்டும் பின்னோக்கி வந்துள்ளது. அந்த முச்சக்கர வண்டியில்  இருந்து சிங்களக்  காடையர்கள் இருவர், அந்தப் பெண்ணுடைய   முந்தானையை இழுத்துப்பறித்து அந்தப் பெண்ணின்  கழுத்தி்ல் கட்டிவிட்டு அவரைக் கீழே தரையிலே தள்ளிப் போட்டு அப்படியே முச்சக்கர வண்டியை  ஓட்டிக் காெண்டு சற்றுத் தூரம் வரை அப்பெண் 
கதறிய நிலையில், அவரது 
உடல் தரையிலே உரசியபடி இழுத்துச் சென்றுள்ளனர். 
   அத்தோடு, அந்தப் பெண்  முந்தானையை இழுத்தெறிந்து,  எழுந்து நின்று கூக்குரலிடவே,  அந்தக் காடையர்கள் இருவரும், இவரை விட்டு விட்டு அங்கிருந்து  விரைவாகத் தப்பிச் சென்றுள்ளனர்.  
    அப்போது அவ்விடத்துக்கு வந்த இன்னுமோர் முச்சக்கர வண்டி  அவரருகே நிறுத்தப்பட்டு,  "என்ன நடந்தது" 
என்று வினவ, அப்பெண் நடந்தவற்றைச்  சொல்லி அழ, வந்தவர்கள் அவரை மீண்டும்  மகள் வீட்டில் கொண்டுபோய்ச் சேர்த்துள்ளனர். இப்பெண், தற்போது மினுவாங்கொடை வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
   இத்தாக்குதல் சம்பவம் தொடர்பில், மினுவாங்கொடை பொலிஸ் நிலையத்தில்  முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் இதனுடன் தொடர்புடையவர்களைத் தேடி வலை விரித்துள்ளனர்.
அத்துடன், இச்சம்பவம் இடம்பெற்ற பகுதியிலுள்ள சீ.சீ.ரி.வி. கமெராக்களின் பதிவுகளின் உதவியுடன் விசாரணை  நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்படுவதாகவும், இதன் மூலம் தாக்குதல் நடத்தியவர்களை விரைவில் அடையாளம் கண்டுகொள்ள  முடியும் என்றும், மினுவாங்கொடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சம்பத் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

( ஐ. ஏ. காதிர் கான் )

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.