( மினுவாங்கொடை நிருபர் )

   ரஸா மல்ஹருத்தீன் 
 ஆசிரியரின் முயற்சியில், தம்பதெனிய பிரதேசத்தின் வரலாற்றினை சுமந்த "வைரம்"  என்ற சஞ்சிகை வெளியிட்டு வைக்கப்பட்டது.

   இந்நிகழ்வு,  தம்பதெனிய அல் - ஹிஜ்ரா கல்லூரியின் ஆசிரியரும் நூல் ஆசிரியருமான ரஸா மல்ஹருத்தீன் 
 தலைமையில், கல்லூரியின்  கேட்போர் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை (14) இடம்பெற்றது.

   இந்நிகழ்வில்,  பாடசாலை அதிபர் எம்.எஸ். ஷிபானா, முன்னாள் அதிபர் கே.எம். நிஷான் மற்றும்  ஆசிரியர்கள், ஹைரிய்யா பள்ளிவாசல் நிர்வாகத்தினர்,  பெற்றோர்கள், நலன் விரும்பிகள், எனப் பலரும் கலந்து கொண்டனர்.

   தம்பதெனிய பிரதேசத்தின் வரலாறு, பாடசாலையின் வரலாறு, மாணவர்களின் ஆக்கங்கள், ஆசிரியர்களின் ஆக்கங்கள் உள்ளடங்கியவாறு பல்சுவை சஞ்சிகையாக,  "வைரம்"  சஞ்சிகை திகழ்கின்றது.

   இச் சஞ்சிகை வெளியீட்டில் உதவிய மாணவிகளுக்கும், நூலசிரியருக்கும், நினைவுச் சின்னங்களும்  வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

( ஐ. ஏ. காதிர் கான் )







ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையிலான முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று (22) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்த பின்னர், அடுத்த கட்டமாக உள்ளூராட்சி பிரிவுகள் சம்பந்தமான பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் நோக்கில் இன்றிரவு அமைச்சர் வஜிர அபேவர்த்தனவை சந்தித்து கலந்துரையாடுவதற்கு பிரதமர் ஏற்பாடு செய்துள்ளார்.

முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்திடம் முன்வைத்துள்ள கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை அமைச்சுப் பதவிகளை மீளப் பொறுப்பேற்பதில்லை என்று நேற்று (21) நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. இதுதொடர்பில் இன்று (22) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்திப்பதற்கும் இதன்போது இணக்கம் காணப்பட்டது.

இதன்பிரகாரம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் பராாளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று (22) பிற்பகல் 2 மணியளவில் ஏ.எச்.எம். பெளசியின் வீட்டில் ஒன்றுகூடினார்கள். பிரதமரிடம் பேசவேண்டிய விடயங்கள் குறித்து இதன்போது ஆராயப்பட்டன.

முஸ்லிம்களின் பாதுகாப்பு விடயங்கள், கைதுசெய்யப்பட்டுள்ள அப்பாவிகளில் மீதமுள்ளவர்களை விடுதலை செய்தல், கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம், வாழைச்சேனை பிரதேச சபை எல்லை விவகாரம், தோப்பூர் உப பிரதேச செயலக தரமுயர்த்தல் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டன. குறிப்பாக கல்முனை வடக்கு பிரதேச செயலகம் குறித்து இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.

இதன்பின்னர் பிற்பகல் 3:30 மணியளவில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அலரி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடினார்கள். ஏற்கனவே கலந்துரையாடப்பட்ட பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது பிரதமரிடம் எடுத்துக் கூறப்பட்டது. கல்முனை நிர்வாகப் பிரச்சினைக்கு உடனடி தீர்வு வழங்கப்பட வேண்டுமென ரவூப் ஹக்கீம் இதன்போது வலியுறுத்திக் கூறினார்.

முன்னாள் முஸ்லிம் அமைச்சர்கள் நாளை அமைச்சு பதவிகளை பொறுப்பேற்குமாறும், இன்னும் ஒரு வாரத்துக்குள் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதாகவும் பிரதமர் இதன்போது கூறினார். ஆனால், கூறப்படுவதுபோல பிரச்சினைகள் தீர்க்கப்படுவதில்லை என்றும், இதற்கு தீர்க்கமான முடிவுகளை எட்டும்வரை அமைச்சுகளை பொறுப்பேற்பதில்லை எனவும் முஸ்லிம் எம்.பி.க்கள் தங்களது நிலைப்பாட்டை பிரதமரிடம் தெரிவித்தனர்.

பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதில் ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் எம்.பி.க்கள் காட்டிய தீவிரத்தன்மையை புரிந்துகொண்ட பிரதமர், இன்றிரவே முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து தீர்க்கமானதொரு முடிவை எடுக்குமாறு உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபயவர்தனவுக்கு பணிப்புரை விடுத்தார். இன்றிரவு அலரி மாளிகையில் இச்சந்திப்பு நடைபெறவுள்ளது.

ஊடகப்பிரிவு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்



மிகப்பெரிய நெருக்கடி காலமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு மாறியிருக்கும்  இந்த நாட்களில் பல முக்கிய தீர்மானங்களுக்கு வரவேண்டிய சூழ்நிலை இருக்கும் இக்காலகட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தன்னுடைய உயர்பீட கூட்டத்தை இன்று கூட்டியது.

இன்று (21) காலை 10.30க்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இவ்வுயர்ப்பீட கூட்டம் மாலை 03.30 வரை மிக காரசாரமான பல விவாதங்களுடனும் வாத பிரதிவாதங்களுடனும் நடைபெற்றுள்ளது.

இங்கு பிரதானமாக கல்முனை உப பிரதேச செயலக விவகாரம், மீண்டும் அமைச்சு பொறுப்புக்களை ஏற்பது தொடர்பில் பிரதானமாக ஆராயப்பட்டுள்ளது. கல்முனை உப பிரதேச செயலக விவகாரம் கடுமையாக சூடுபிடித்துள்ளதால் இதனை உடனடியாக முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றகீப் இந்த பிரச்சினை சம்பந்தமான கதையை ஆரம்பித்தவுடன் சகல உயர்பீட உறுப்பினர்களும் இந்த விடயத்தை யாருக்கும், எச்சந்தர்ப்பத்திலும் விட்டுக்கொடுக்க முடியாது. எனவும் அரசுக்கு நிபந்தனைகளை விதித்து உடனடி தீர்வை பெற வேண்டும் என கூட்டாக குரல்கொடுத்துள்ளனர்.

பிரதமர் ரணிலின் கோரிக்கையான அமைச்சு பதவிகளை மீள பொறுப்பெடுப்பது தொடர்பில் அங்கு வாத பிரதிவாதங்கள் கடுமையாக இருந்துள்ளது. முஸ்லிங்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் எந்த முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சு பதவிகளை ஏற்க கூடாது. முக்கியமாக கல்முனை பிரச்சினை அடங்கலாக இப்போது மிக முக்கிய பிரச்சினைகளாக மக்களுக்கு மாறியிருக்கும் பிரச்சினைகளை முடிக்காமல் யாரும் பதவிகளை ஏற்க கூடாது என அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர்களான ஹரீஸும், பைசால் காசிமும் இன்னும் பலரும் வலியுறுத்தி பேசியுள்ளனர்.

இதனை அரசுக்கு நிபந்தனையாக வைத்து கல்முனை பிரச்சினை ஓரிரு வாரங்களில் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும், சகல பிரதேசங்களிலும் தமிழ் கூட்டமைப்பின் கோரிக்கைகளை நிறைவேற்றுகின்ற இந்த அரசு எமது தலைமைக்கும் முஸ்லிம் எம்.பிக்களுக்கு வாக்குறுதியை வழங்கிவிட்டு மறுகணமே தமிழ் கூட்டமைப்பின் கோரிக்கைகளை நிறைவேற்ற சில முன்னாயத்தங்களை செய்திருந்தது. இது முஸ்லிம் சமூகத்துக்கு அவமானமான செயல். இது முஸ்லிங்களின் முகத்தில் கரிபூசியதை போன்றது. என ஹரீஸ் எம்.பி அவர்கள் பேசியதை பெரும்பான்மை உறுப்பினர்களும் கட்சியின் தலைமைக்கு வலியுறுத்தி பேசியுள்ளனர்.

இங்கு பேசிய முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் எதிர்வரும் காலத்தில் ஜனாதிபதி தேர்தல் ஒன்றை பிரதமர் அவர்கள் எதிர்கொண்டுள்ள இச்சுழ்நிலையில் கல்முனை விவகாரம் சம்பந்தமாக பிரதமர் தனக்கு முன்னிலையில் முஸ்லிம் எம்.பிக்களிடம் தந்த வாக்குறுதியை குறிப்பாக கல்முனை கணக்காளர் விவகாரம் தொடர்பிலான உறுதிமொழியை மீறிவிட்டார். எந்த காரணத்தை கொண்டும் இழுத்தடிப்பு செய்ய முடியாது. இந்த விடயங்களுக்கு ஓரிரு நாளில் அரசு நிரந்தர தீர்வை தரவேண்டும். அரசு எந்த தீர்வையும் தராமல் யாரும் அமைச்சை பெறப்போவதில்லை என காட்டமாக பதிலளித்துள்ளார்.

கணக்காளர் விவகாரத்தில் பிரதமர் ரணில் வாக்குறுதியை மீறியதனால் அவரது தீர்மானத்தை அவர் வாபஸ் பெற வேண்டும் அதை அவர் செய்யாமல் விட்டால் நாங்கள் எதிர்க்கட்சி ஆசங்களுக்கு சென்று அமரபோகும் செய்தியை நாளை முஸ்லிம் எம்பிக்களுடன் சென்று அவரை அவசரமாக சந்தித்து கூறப்போவதாக சபைக்கு அறிவித்த போது தக்பீர் முழக்கத்துடன் சபை அதை ஏற்றுக்கொண்டுள்ளது.

இந்த அதிரடி முடிவு அரசுக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஒரு அக்னி பரீட்சையாக இருக்கும் என முஸ்லிம் காங்கிரஸ் நம்புகிறது. என நம்பத்தந்த தாருஸலாம் வட்டாரம் தெரிவித்தது.

- அபு ஹின்சா -



( மினுவாங்கொடை நிருபர் ) 

  இனவாதத்தைத்  தூண்டும் எத்தகைய  சக்திகளையும் ஆதரிக்க முடியாது.  நாட்டின் பாதுகாப்பு உத்தரவாதப் படுத்தப்பட வேண்டுமானால்,  இனங்களுக்கிடையில் சமாதானம், சகவாழ்வு மற்றும்  நல்லிணக்கம் கட்டியெ ழுப்பப்படல் வேண்டும் என, வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அமைச்சர் சஜித் பிரேமதாஸ  தெரிவித்தார்.
மினுவாங்கொடை ஜும்ஆப் பள்ளிவாசலில் இடம்பெற்ற முஸ்லிம்களுடனான சந்திப்பிலே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
   இனவாதத் தாக்குதல்களால் சேதமுற்ற மினுவாங்கொடை ஜும்ஆப் பள்ளிவாசலைப் புனரமைக்க, நிதியுதவி வழங்கிய அமைச்சர், அங்கு இடம்பெற்ற முஸ்லிம்களுடனான சந்திப்பில் உரையாற்றினார்.
   இந்நிகழ்வில்,  தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம், முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எச்.எம். பௌஸி,  பாராளுமன்ற உறுப்பினர்களான எட்வர்ட்  குணசேகர, ஹர்ஷன ராஜகருண,  முஜீபுர் ரஹ்மான், இம்ரான் மஹ்ரூப் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
   இந்நிகழ்வில்  அமைச்சர் சஜித் பிரேமதாஸ தொடர்ந்தும் உரையாற்றும்போது,    மினுவாங்கொடை பிரதேச முஸ்லிம்களைச்  சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
   எந்த மதங்களைச் சார்ந்தோரானாலும், இலங்கையின் மக்கள் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது. இனம், மதம், மொழி வேறுபாடுகளைப்  புறந்தள்ளிச் செயற்பட்டால், எத்தகைய  சவால்களையும் வெற்றி கொள்ள முடியும்.
   புத்த பெருமான் மனித குலத்தை நேசித்தவர். எந்த இனத்தவரையும் இனவாதக் கண்கொண்டு பார்க்க முடியாது. பௌத்தர்கள்,  இந்துக்கள், இஸ்லாமியர்கள்,  கிறிஸ்தவர்கள் என்று பிரித்துப் பார்ப்பதை பௌத்தம் ஒருபோதும்  ஆதரிக்கவில்லை என்றார்.


( ஐ. ஏ. காதிர் கான் )


முஸ்லிம்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டே ஜனாதிபதித் தேர்தலில் UPC தீர்மானம் மேற்கொள்ளப்படும்.

 இந்நாட்டிலே ஆயிரம் வருடங்களுக்கு மேலாய் ஏனைய சமய சகோதர இன மக்களுடன் ஒற்றுமையாகவும் நாட்டின் இறைமையை பாதுகாத்தும் வாழ்ந்து வருகின்ற முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பினை கருத்திற்கொண்டே இவ்வருட இறுதியில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் காங்கிரஸ் (UPC) தீர்மானம் மேற்கொள்ளப்படும் என UPC யின் பொதுச் செயலாளரும் கம்பஹா மாவட்ட சமாதான நீதவானும்  முன்னாள் அத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினருமான கமால் அப்துல் நாஸர் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் நாட்டிலே முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத குழுக்களினால் முன்னொருபோதும் நடைபெறாத  இனவாத நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். இவை அனைத்தும் பதவியில் உள்ளவர்கள் அவர்களது ஊழல் மோசடிகளை மறைக்கவும் பதவியை தக்க வைத்துக்கொள்வதற்காகவும் பதவியில் இல்லாதவர்கள் அவர்களால் முன்பு செய்யப்பட்ட ஊழல் மோசடிகளை மறைத்து மீண்டும் பதவியை பெற்றுக்கொள்வதற்காக தயாரிக்கப்பட்ட நாடகமே தற்போது அரங்கேறிக்கொண்டிருக்கிறன்றன.

 இவ்வாறான சூழ்நிலையில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதக் குழுக்களை கட்டுப்படுத்துவதற்கு அரசு அசமந்தமாகவே செயற்பட்டதையும் வன்மையாகவே கண்டிக்க வேண்டுமெனவும் மேலும் அவர் தெரிவித்தார்.


திருகோணமலை மாவட்டத்தில் அண்மைக்காலமாக இடம்பெறும்  கன்னியா வெந்நீரூற்றும் அதனைத்தொடர்ந்த கோயில் பிரச்சினைகளையும், யாவரும் அறிந்துள்ளோம், ஆனால் அந்த பிரச்சினையில் தமிழ் சகோதரர சமூகம்  மட்டுமல்ல,   இதில் முஸ்லிம்களுக்கும் தொடர்புண்டு, இதில் பாதிக்கப்படப்போவது முஸ்லிம் இருப்பும், வரலாறும் என்பதும் தவிர்க்க முடியாத உண்மை

#40 #முழ_சியாறம்,

கன்னியாவில் மிக நீண்டகாலமாக முஸ்லிம்களால் கண்ணியப்படுத்தப்பட்ட ஒரு சியாறம் உண்டு இது முஸ்லிம்களுக்கே தனித்துவமான 40 முழ மரபுக்குட்பட்டது, ஆனாலும் இது இராவணனின் தாயின் கல்லறை என இந்து மரபினர் நம்புகின்றனர் ஆனால் முஸ்லிம்களின் வாய்வழி, சமயத் தொன்மையில் இது முஸ்லிம்பண்பாட்டு மரபுக்குரியது என்ற ஆதாரம் உண்டு,

#சிறுபான்மை_ஒற்றுமை,

அண்மைக்காலமாக இடம்பெறும் சிங்கள தொல்பொருள் ஆக்கிரமிப்பாளர்களின் அடக்குமுறையில்  சிறுபான்மையினர் என்ற வகையில் பல இடங்களை இரு சமூகமும் இழந்து வருகின்றோம், அந்த வகையில், புராதனம், குறித்த தெளிவும், புரிந்துணர்வும், இரு சமூகங்களுக்கிடையே மிகவும்  அவசியமாகின்றது. அதற்கு நாங்கள்  அவசியம் தயாராக இருக்க  வேண்டும்,

#முஸ்லிம்_பிரச்சினைகள்

முஸ்லீம் பூர்வீக இருப்புக்கான ஆதாரங்களாக இலங்கையில் மீஷான்கள், பள்ளிவாசல்கள், மரபுசார் நிகழ்வுகள் என பல விடயங்கள் உள்ளன ஆனாலும் சியாறங்கள் என்பது இவற்றின் பௌதீக நில அடையாளமாக இன்றும் உள்ளது, இதனைப் பாதுகாப்பதில் ,பல சிக்கல்கள் உள்ளன, அந்தவகையில் தொல்பொருள் திணைக்களத்தின் ஆக்கிரமிப்பும் அதுசார் சட்டங்களுடன், ஏனைய இன ஆக்கிரமிப்பாளர்களின் சிக்கலையும் முஸ்லிம் வரலாறும், சமூகமும்  எதிர்கொள்கின்றது, இது நாட்டின் பல இடங்களில்  இது பிரச்சினையாக உள்ளது,
உதாரணமாக அம்பாரை மாவட்ட மாயக்கல்லி, வட்டமடு, தீகவாபி.

#அவசரத்தீர்வுகள்,

அண்மையில்  ஜனாதிபதியைச் சந்தித்த  அமைச்சர் மனோ கணேசன் அவர்கள் தொல்லியல் திணைக்களத்தின் ஆலோசனை சபையில் உள்ள 32 பேரும் சிங்கள புத்திஜீவிகள் எனவும் அதில் தமிழர்கள் 5 பேராவது இணைக்கப்பட வேண்டும்  என ஜனாதிபதியிடம்  அனுமதி பெற்று அதற்கான முயற்சியை ஆரம்பித்துள்ளார்,

 அதில் தமிழ் பேசுவோர் என்ற அடிப்படையில் குறைந்தது 2 முஸ்லிம் புத்திஜீவிகளாவது  இணக்கப்படுவார்களாயின் ,அமைச்சர் மனோவின்  இன நல்லுறவை பாராட்ட முடியும், அமைச்சர் செய்வாரா???

இன்றேல் முஸ்லிம் அரசியல்வாதிகள் அவசரமாக செயற்பட்டு எமது சமூகத்தைச் சேர்ந்த வரலாற்று, தொல்லியல்  ஆய்வில் நிபுணத்துவமிக்க புத்திஜீவிகளை இணைப்பதற்கான அவசர செயற்பாட்டில் ஈடுபட வேண்டும், அதற்கான அழுத்தத்தை ஒரு உணர்வுள்ள சமூகம் என்ற வகையில் முஸ்லிம்சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் மிக அவசரமாக மேற்கொள்ள முன்வர வேண்டும், ஏனெனில் குறித்த குழுவில் நமது பிரதிநிதிகளும் இணைவதன் மூலமே, எமது எதிர்கால பல பிரச்சினைகளை இலகுவாகத் தீர்க்க முடியும்,

எனவேதான் இந்த செய்தி உரிய இடத்தை அடையும்வரை முடியுமானவரை பகிர்ந்து கொள்ளுவோம்.

MUFIZAL ABOOBUCKER
DEPARTMENT OF PHILOSOPHY
UNIVERSITY OF PERADENIYA

19:07:2019







,


அண்மையில் மினுவாங்கொட, குருநாகல் பகுதிகளில் நடைபெற்ற  வன்முறைகளால் பாதிக்கப்பட்ட 21 பள்ளிவாயள்களுக்கான நஷ்டஈடுகளை ஐக்கிய தேசிய கட்சியின்  பிரதி தலைவரும் வீடமைப்பு,  நிர்மாணத்துறை மற்றும் கலாச்சார அமைச்சர் கௌரவ சஜித் பிரேமதாச இன்று வழங்கிவைத்தார்.

இந்நிகழ்வில் அமைச்சர் கௌரவ ஹலீம் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ பௌசி, கௌரவ முஜிபுர் ரஹ்மான், கௌரவ ஹர்ஷன ராஜகருணா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டும், மஹிந்த பிரதமராகவும் வரக்கூடாது என்ற கோசத்தில் ம.வி.மு. இனரால் அரசாங்கத்திற்கெதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரனை 11ஆம் திகதி தோல்வியில் முடிந்தது.

நாட்டில் ஆட்சியில் இருக்கும் ஐ.தே.க. முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகள் இனவாதிகளால் மேற்கொள்ளப்படும்போது தடுத்து நிறுத்த தவறியது. மஹிந்தவின் அழத்கமயும் ரனிலின் திகனயும் கடந்தகாலங்களில் எமக்கு கற்றுத்தந்த பாடங்கள்.

உரிமை அரசியல் அஷ்ரபுடன் மரணித்துவிட்டது இன்று நமது சமூகம் எதிர்பார்ப்பது அபிவிருத்தி அரசியலை மாத்திரமே. முஸ்லிம்களுக்கான தனியார் சட்டத்தை இல்லாமல் செய்வதற்குரிய அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. விவாக, விவாகரத்து சட்டத்தை மாற்றுவதற்குரிய முன்னெடுப்புக்கள் எடுக்கப்பட்டவேளையில் பல உலமாசபை, அரசியல் கட்சிகள் இன்னும் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் முன்மொழிவுகளை சமர்ப்பித்து தங்களால் முடிந்த பங்களிப்புகளை செய்திருந்தது. ஐரோப்பிய சங்கத்தினைடைய வரிச் சலுகைகளுக்குகூட இது மிகப்பெரும் பேசு பொருளாக மாறியிருந்தது . இறுதியில் அரசியல் இழுபறிகளால் இன்றுவரை கிடப்பில் உள்ள சட்டதிருத்தம் ஒட்டுமொத்தத்தில் “ஓர் இலங்கை ஓர் சட்டம்” என்ற தொணிப்மொருளில் முஸ்லிம்களுக்கான தனியார் சட்டங்கோவையே இல்லாமல் செய்யப்படுவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

நாட்டில் ஏற்பட்ட 21/4 சம்பவம் என்பது இத்தனைகாலமும் முஸ்லிம்களுக்கெதிராக புரையோடிப்போய்கிடந்த அத்தனை காழ்ப்புணர்வுகளையும் கட்சிதமாக அரங்கேற்றுவதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

தலைவர் அஷ்ரப் வரையிலான அரசியல் தலைமைகள் உரிமைக்காக போராடி வெற்றிகண்டபோதிலும் அவருக்கு பிந்திய காலத்தில் முஸ்லிம் மக்களின் பிரதான அரசியல் எதிர்பார்ப்பாக அபிவிருத்தியே முன்னிலைப்படுத்தப்பட்டது. றோட்டுப் போட்டால் வோட்டுப் போடுவொம் என்கின்ற கோசம் அதிகமான பிரதேசங்களில் உருப்பெற்றதால் அந்தந்த பிரதேச குறுநில மன்னர்கள் தமது ஆதிக்கத்தை பலப்படுத்திக்கொள்ள அபிவிருத்தி என்கின்ற மாயையை தமது அரசியல் மூலதனமாக பயன்படுத்த ஆரம்பித்தார்கள்.

அபிவிருத்திக்காகவும் தனிப்பட்ட சலுகைகளுக்காகவும் உரிமைகளை விட்டுக்கொடுக்கும் அரசியல் பெரும்பாண்மை சக்திகளின் நிகழ்ச்சிநிரல்களை நாடளாவியரீதியில் முஸ்லிம்களிற்கெதிராக கட்டவிழ்த்துவிடுவதற்கு வழிவகுத்தது.

இதனுடைய ஒட்டுமொத்த விழைவு இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கென்றிருந்த தனியார் சட்டம் முஸ்லிம்களுக்கான விசேட சலுகைகள் எல்லாம் இல்லாதொழிக்கப்படுகின்ற ஓர் நிலைக்கு முஷ்லிம் சமூகம் தள்ளப்பட்டுள்ளது.

கட்சி சார்ந்த அரசியலுக்கு முன்னுரிமை கொடுத்து  அல்லது அபிவிருத்திக்கு முன்னுரிமை கொடுத்து முன்னிலைப்படுத்தப்பட்ட தலைமகள் 21/4 சம்பவத்திற்குபிறகு சமூகம் சார்ந்து பேசவேண்டிய எத்தனையோ சந்தர்ப்பங்களில் தமக்கு எதிராக சுமத்தப்பட்டிருக்கின்ற ஆதாரப்பூர்வமான அல்லது ஆதாரபூர்வமற்ற குற்றச்சாட்டுக்களுக்கு பதில் சொல்வதிலேயே தமது காலத்தை கழிந்துகொண்டிருக்கின்றார்கள்.

தகுதியான தலைமைத்துவத்தின் வறுமைநிலையை எமது சமூகம் 21/4 இற்குபிறகு மிகவும் நன்றாகவே உணர்ந்துள்ளது அந்தவகையில் இலங்கையில் வாழ்கின்ற ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளுக்கு தன்னந்தனியாக நின்று நாட்டிற்குள்ளும் சர்வதேசத்திற்கும் முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்காக குரல்கொடுக்கின்ற ஓரே ஓர் தலைவராக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசியத்தலைவர் கௌரவ அல் ஹாஜ் றஊப் ஹக்கீம் திகழ்கின்றார் என்றார் அதை இலங்கை முஸ்லிம்கள் நிராகரிப்பதற்கு தனிப்பட்ட காரணத்தைதவிர வேறு எந்த நியாயமான காரணத்தையும் முன்வைக்க முடியாது.

புலிகளால் முஸ்லிம்களுக்கெதிராக இழைக்கப்பட்ட அநீதிகளை எமது சமூகம் ஆவணப்படுத்த தவறிவிட்டது என்கின்ற மிகப்பெரிய ஓர் குறை இன்றுவரை நீண்டுகொண்டுதான் இருக்கின்றது. அன்று குருக்கல்மட புதைகுழி தோண்டுகின்ற விடயத்திலும் பெரும்பாண்மை கட்சியின் உபதலைவராக இருந்த கருனாவைக்காப்பாற்றுவதற்காக தாம் கட்சி ரீதியாக பெற்றிருந்த பதவிகளுக்கு விஷ்வாவாசத்தை வெளிப்படுத்தி அப்புதைகுழியை தோண்டாமல் திட்டமிட்டு தடுத்து கருனாவை காப்பாற்றுவதாக நினைத்து முஸ்லிம் சமூகத்திற்கு புலிகளால் இழைக்கப்பட்ட இனப்படுகொலைகளை நாட்டிற்கும் சர்வதேசத்திற்கும் வெளிக்கொண்டுவராமல் செய்யப்பட்டது. இதுகூட நமது அரசியல் தோல்வியே நமது இருப்பைப்பற்றி பேசுக்கின்ற வரலாற்றுப்பக்கங்களில் இவைகள் இல்லாமலாக்கப்பட்டிருக்கின்றது.

இந்த நாட்டில் பெரும்பான்மை ஆட்சி அமைக்கின்ற சந்தர்ப்பங்களில் எல்லாம் அதனை எந்தக்கட்சியினர் அமைக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கின்ற சமூகமாக யுத்தகாலங்களில் பெரும்பாலும் அது முஸ்லிம் சமூகமாகவே இருந்துவந்துள்ளது. யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் இதனை தீர்மானிக்கும் விடயத்தில் பிரதான இரண்டு சிறுபான்மை சமூகங்களும் இருந்துவருகின்றது. இதனை எப்படி சிறுபான்மை சமூகங்கள் கையாழவேண்டும் என்பதுபற்றி ஆழமாக சிந்திக்க வேண்டிய சந்தர்ப்பத்தில் பெரும்பான்மையிடம் நாட்டை துண்டாடி தனிநாட்டிற்காக போராடிய சமூகம் இன்று சக சிறுபான்மை சமூகத்தோடு பிரதேச செயலக பிரிவிற்காக இனவாதம் பேசுவது ஆச்சரியமாகவுள்ளது.

பொறியியலாளர் ஷிப்லி பாரூக்
காத்தான்குடி நகர சபை உறுப்பினர் 

இரவு 10 மணிக்குப் பின்னர் மாணவர்கள் வீதியில் இருந்தால் அழைத்துச் செல்வோம்
_-பொலிஸ்_

💦மாணவர்கள் மற்றும் இளைஞர்களை போதைப் பொருள் பாவனையை விட்டும் காப்பாற்ற வேண்டியது அனைவரினதும் பொறுப்பாகும் எனவும் இரவு 10 மணிக்குப் பின்னர் வீதிகளில் கூடிக் கதைத்துக் கொண்டு இருக்கும் சிறுவர்களும், இளைஞர்களும் பொலிஸுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் எனவும் நிட்டம்புவ பொலிஸ் நிலையத்தில் புதிதாக பதவியேற்றுள்ள நிலையப் பொறுப்பதிகாரி அனுர குணவர்தன தெரிவித்தார்.

💦நிட்டம்புவ சமூக பொலிஸ் பிரிவினால் நேற்று (12) இரவு கஹட்டோவிட்ட மகளிர் கல்வி வட்ட கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்திருந்த ஊர் பிரமுகர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

💦பள்ளிவாயல்கள் மூலம் மாணவர்களுக்கு இந்த செய்தியை அறிவியுங்கள். மாணவர்கள் இரவில் வீதிகளில் கதைத்துக் கொண்டிருக்க வேண்டாம் என பாடசாலைகளில் மாணவர்களுக்கு தெரியப்படுத்துங்கள். பெற்றோர்கள் இந்த விடயத்தில் கருத்தில் கொள்ளுங்கள். நாம் அழைத்துச் சென்றதன் பின்னர் எமக்கு சட்டத்தை நிறைவேற்ற இடமளியுங்கள்.

💦முஸ்லிம் பிரதேசங்களிலுள்ள இளைஞர்களை போதையிலிருந்து விடுவிப்பதற்கான உதவிகளை பொலிஸாருக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். சட்ட முரணான செயற்பாடுகள் குறித்த தகவல்களை யாராவது அறிந்திருந்தால், அது தொடர்பில் பொலிஸாருக்கு உடன் வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

💦வெளிப் பிரதேசங்களிலிருந்து வந்து உங்களது ஊர்களில் குடியேறியுள்ளவர்கள் குறித்து மிகுந்த அவதானத்துடன் இருங்கள். அவர்கள் சிலபோது பாரிய குற்றச் செயல்களில் ஈடுபடலாம். அதனால், முழு கிராம மக்களும் துன்பத்தை அனுபவிக்க நேரிடும் எனவும் நிட்டம்புவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மேலும் கூறினார்.

💦புத்தளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய பொலிஸ் அத்தியட்சகர் அனுர குணவர்த, இடமாற்றம் பெற்று நிட்டம்புவ பொலிஸ் நிலையத்துக்கு வருகை தந்துள்ளார். இவருடைய வருகையின் பின்னர் கஹட்டோவிட்ட முஸ்லிம் மக்களுடன் நடாத்திய முதலாவது சந்திப்பு இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

(Rcd)



மேல்மாகாண பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கான தமிழ் மொழிமூல போட்டிப்பரீட்சைக்கு தோற்றிய சகல விண்ணப்பதாரிகளையும் நேர்முகப்பரீட்சைக்கு அழைப்பு விடுக்குமாறு மேல்மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் மேல்மாகாண அரச சேவை ஆணைக்குழுவுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். 

மேல் மாகாண கல்வி அமைச்சின் கீழ் உள்ள பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளும் போட்டிப் பரீட்சை கொழும்பு, களுத்துறை, கம்பஹா மாவட்டங்களிள் கடந்த ஜூன் 30ஆம் திகதி இடம்பெற்றது. 

இப்பரீட்சையில் தமிழ் மொழிமூல பரீட்சை வினாப்பத்திரத்தில் குளறுபடிகள் காணப்பட்டதாக வந்த முறைப்பாடுகள் தொடர்பில் ஆளுநரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதை அடுத்தே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, குறித்த நேர்முகப்பரீட்சைகளை எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் முதற்கட்டமாக சுமார் 250 பட்டதாரிகளை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மேல்மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தெரிவித்தார். 

(நுஸ்கி முக்தார்)  



குருநாகல் டாக்டர் ஷாபி ஷிஹாப்தீனை வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க குருநாகல் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சி ஐ டி அவரை இன்று குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தது.
அவரின் மூன்று மாத கால தடுப்புக் காவல் உத்தரவை சட்ட மா அதிபர் திணைக்களம் வாபஸ் பெற்றதாக மன்றில் தெரிவிக்கப்பட்டது.

டாக்டரை தடுத்துவைக்க போதியளவு காரணங்கள் இல்லையென பொலிஸ் தரப்பில் சொல்லப்பட்டது.

இன்றைய தினம் சிங்கள அமைப்புக்கள் நீதிமன்ற வளாகத்தில் கூடி டாக்டரின் விடுதலையை எதிர்த்தபடி கருத்துக்களை ஆங்காங்கே வெளியிட்டு வந்ததால் அங்கு ஒருவித பதற்ற நிலை இருந்தது.

(Tamilan)


குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் ஷாபிக்கு வழங்கப்பட்டிருந்த, 3 மாத கால தடுப்புக் காவல் உத்தரவு இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
இன்றைய தினம் (11) வைத்தியர் ஷாபி, குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன்போது, ஷாபிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பான  வழக்கு விசாரணைக்கு எடுத்து ​கொள்ளப்பட்ட போது, இவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தக் கூடிய சாட்சிகள் போதுமானதாக இல்லை எனத்  தெரிவித்து, நேற்றைய தினம் வழங்கப்பட்ட தடுப்பு காவல் உத்தரவையும் இரத்துச் செய்வதாக பிரதி சொலிஸிட்டர் நாயகம் துசின் முதலிகே அறிவித்துள்ளார்.
TM

நாட்டுக்கு பாரிய வெளிநாட்டு வருமானத்தை ஈட்டவும், கிராமிய மக்களின் பொருளாதாரத்தை தாமாக பலப்படுத்துவதற்கும் மாவட்ட மட்டத்தில் அலங்கார மீன் வளர்ப்பு மையங்கள், மீன் ஏற்றுமதி வலயங்களை அமைத்து உலகில் பரந்தளவில் கேள்வியுள்ள கடல் மீன்கள் மற்றும் கடல் தாவர (கடல் பாசி)  வளர்ப்பினை ஆரம்பிப்பதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் திலிப் வெத ஆரச்சி அவர்கள் தெரிவித்தார். 

இராஜாங்க அமைச்சர் தெரிவித்தது, அந்த வேலைத் திட்டத்திற்கு சமாந்தரமாக உலகில் அதிக கேள்வியும், பெறுமதியும் மிக்க மீன்களை இலங்கையில் வளர்க்க  கடல் கூண்டுகளில் (Sea Cages) மீன் வளர்ப்பின் முதல் கட்ட வேலைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

கொழும்பு 15, மட்டக்குளி, காக்கைதீவில் இருக்கும் தேசிய நீர்வள மேம்பாட்டு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஸ்தாபிக்கப்பட்ட மீன் வளர்ப்பு நிலையம் மற்றும் கடல் தாவர வளர்ப்பு நிலையம் ஆகியவற்றை திறந்து வைக்கும் நிகழ்விலேயே இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆரச்சி மேற்கண்டவாறு உரையாற்றினார்.

இந்நிகழ்வில் விவசாயம், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அபிவிருத்தி அமைச்சர் பி.ஹரிசன், அமைச்சின் செயலாளர் கே.டீ.எஸ்.ருவன்சந்த்ர NARA நிறுவனத்தின் தலைவர் ஏ.டீ.எதிரிசிங்க உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

ரிஹ்மி ஹக்கீம்,
விவசாயம், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அபிவிருத்தி அமைச்சு











மொரகஹகந்த களுகங்கை நீர்ப்பாசனத் திட்டங்களை நிர்மாணித்தவர்களை பாராட்டும் நிகழ்வில் திங்களன்று (08) உரையாற்றிய ஜனாதிபதி, பராக்கிரம சமுத்திரத்தைத் திருத்தியமைத்த முஸ்லிம் பொறியியலாளரின் தியாகத்தைக் குறிப்பிட்டு உரையாற்றினார்.

பராக்கிய சமுத்திரம் பராக்கிரமபாகு மன்னனால் மூன்று குளங்களை இணைத்துக் கட்டப்பட்டது. 1930 களில் டீ.எஸ். சேனாநாயக்க இந்தக் குளத்தைத் திருத்தியமைப்பதற்குத் தீர்மானித்து, அந்தப் பொறுப்பை நீர்ப்பாசனப் பொறியியலாளரான இஸ்மாயில் எனும் முஸ்லிம் பொறியியலாளரிடம் ஒப்படைத்தார். இந்தத் தகவல் பொலன்னறுவ நீர்ப்பாசன அலுவலகத்தின் பதிவுப் புத்தகத்தில் உள்ளது.

உடைந்திருந்த பராக்கிரம சமுத்திரத்தை மீளவும் திருத்தியமைக்க முடியும் என பொறியியலாளர் இஸ்மாயில் டீ.எஸ். சேனாநாயக்கவுக்கு அறிவித்ததைத் தொடர்ந்து அந்தப் பணியைத் தொடர்வதற்கு அவர் அனுமதியளித்தார். இந்தப் பணியின் இறுதிக் கட்ட வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது பொறியியலாளர் இஸ்மாயிலுடை குழந்தை கடுமையான சுகவீனமுற்றிருப்பதாக கொழும்பிலிருந்து தந்தி வந்திருந்தது. உடனடியாகப் புறப்பட்டு வருமாறு அவருடைய மனைவி அதில் குறிப்பிட்டிருந்தார்.

உடனடியாகச் செல்வதற்கு அவருடைய மனம் விரும்பியபோதும் அவர் வேலையின் முக்கியத்துவத்தைக் கருதி அவ்விடத்திலிருந்து செல்வதைத் தவிர்த்துக் கொண்டார். அவரது சக ஊழியர்கள் வேலையை தாங்கள் கவனித்துக் கொள்கிறோம். நீங்கள் சென்று வாருங்கள் என்று கூறியபோதும், இன்னும் இரண்டு வாரங்களில் பெய்யப் போகும் மழையினால் எங்களது பணி பாதிக்கப்பட முடியும். எனவே, வேலையை முடித்து விட்டே செல்கிறேன் என்று முடிவெடுத்து தனது பணியைத் தொடர்ந்தார்.

இரண்டு வாரங்களின் பின்னர் மீண்டும் வீட்டிலிருந்து தந்தி வருந்திருந்தது. குழந்தை இறந்து விட்டதாகவும், உடனே வீடு வரும் படியும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அவர் தனது பணியை முடித்து விட்டு குழந்தையின் இறுதிக் கிரியைக்காகத்தான் கொழும்புக்குப் போய்ச் சேர்ந்தார்.

1950களுக்குப் பின்னர் இருந்துதான் சிங்கள-தமிழ்-முஸ்லிம் பிரச்சினைகள் உருவாகி, அபிவிருத்திப் பணிகள் வீழ்ச்சியடையும் அளவுக்கு இன, மத அடிப்படையில் அரசியல் கட்சிகள் உருவாகி நாங்கள் வீழ்ச்சியடையும் நிலைக்கு வந்திருக்கிறோம் என்று தெரிவித்தார்.

Meelparvai.net



( ஐ. ஏ. காதிர் கான் )

   போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில்,  புறக்கோட்டையிலிருந்து கொம்பனித்தெரு -  யூனியன் பிளேஸ் வரை படகுச் சேவையை ஆரம்பிக்க, காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் நடவடிக்கைகளை  எடுத்துள்ளது.
   இதற்கமைய, இலங்கைக்  கடற்படையினரால் நிர்மாணிக்கப்பட்ட குளிரூட்டப்பட்ட பயணிகள் படகில் முதலாவது கண்காணிப்பு சுற்றுப்பயணத்தை, நகர்ப்புற மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மேற்கொண்டார்.
   இந்தப் படகுச்  சேவையை ஆரம்பிப்பதன் மூலம், புறக்கோட்டையிலிருந்து யூனியன் பிளேஸ் வரை 15 நிமிடங்களிலும் மிகக் குறைவான நேரத்தில் பயணிக்க முடியுமென்பதோடு, போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு  இது ஒரு சிறந்த தீர்வாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. 

( ஐ. ஏ. காதிர் கான் )


கைதிகளுக்குப் புனர்வாழ்வளிப்பது தொடர்பில் அவர்களுக்கு கைத்தொழில் பயிற்சி திட்டங்களை வழங்குவது குறித்து தேசிய பயிலுநர் கைத்தொழில் பயிற்சி அதிகார சபை (நைற்றா)மூலம் நடவடிக்கை எடுக்கத் திட்டமிடுகின்றது.
இதுகுறித்த முக்கிய கலந்துரையாடல் ஒன்று அண்மையில் நைற்றா நிறுவனத் தலைவர் நஸிர் அஹமட்டுக்கும் சிறைத் துறைசார் அதிகாரிகளுக்கும் இடையில் நடைபெற்றது.
சிறையிலுள்ள கைதிகளின் வாழ்க்கைத்தர மேம்பாட்டுக்கு உதவும்வகையில் அவர்க ளுக்குத் கைத்தொழில் பயிற்சிகளை வழங்குவதுடன் அதனைப் பூர்த்தி செய்தவர்க ளுக்கு அரச அங்கீகாரமுள்ள சான்றிதழ்களை வழங்கவும் எதிர்காலத்தில் இதன் மூலம் அவர்கள் சமூகத்தில் நற்பிரஜைகளாக வாழ்வதற்கான நடைமுறைகளை அறிமுகம் செய்யவும் இதன்போது ஆலோசிக்கப்பட்டிருக்கிறது.
நைற்றா நிறுவனம் தற்போது 16 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்ட இருபாலாருக்கும் பல்வேறு கைத்தொழில் பயிற்சிகளை வழங்கிவருவதுடன், தகவல் தொழில் நுட்பம் குறித்த புதிய பாட விதானங்களை அறிமுகம்செய்து அவற்றுக்கான பயிற்சி களையும் மேற்கொண்டு வருகின்றது. இந்த பயிற்சிகளைப் பூர்த்தி செய்பவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு அவர்கள் தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்வதற் கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டு வருகின்றன.
இந்த நடவடிக்கை காரணமாக நாட்டின் அணைத்து பகுதிகளிலுமுள்ள வேலை வாய்ப்பற்ற இளைஞர், யுவதிகள் தமது வாழ்கை வளமேம்பாட்டுக்கான பயிற்சி களை பெற்றுவருவதுடன் தொழில்துறை வாய்ப்புக்களையும் பெற்று வருகின்றனர்.
மேற்படி நிறுவனத்தின் தவைராக நஸிர் அஹமட் பதவி ஏற்றுக்கொண்டதன் பின்னர் பல்வேறு புதிய செயற்றிட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக இந்த நிறுவனத்தில் பயிற்சியை பெற்றுக்கொண்டவர்கள் தமது மேலதிக கல்விக ளை வெளிநாடுகளிலுள்ள அரச,தனியார் பல்கலைகழங்களில் பெற்றுக்கொள்ளவும்; முன்பள்ளி ஆசிரியைகள் தமது கல்விமேம்பாட்டை வளர்த்துக் கொள்ளுவதற்கான பயிற்சித்திட்;டங்களும் செயற்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக தனியார் தொழில் துறைகளில் இளையவர்கள் வாய்ப்புகளைப்பெற கூட்டுறவுப் பயிற்சித் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றன.
அந்தவகையில் சிறைக் கைதிகள் மற்றும் மனநிலை பாதிப்பிற்கு உள்ளானவர் களின் மேம்பாட்டுக்கான பயிற்சிகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.





( ஐ. ஏ. காதிர் கான் )

    ஏப்ரல் 21, உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து, பயங்கரவாதச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு,  தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள சாதாரண அப்பாவி முஸ்லிம்களை உடனடியாக விடுவிக்குமாறு கோரி, முன்னாள் அமைச்சரும் ஸ்ரீல.சு.க. பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
   பைஸர் முஸ்தபா எம்.பி. க்கும் ஜனாதிபதிக்கும்  இடையிலான முக்கிய சந்திப்பொன்று, நேற்று (09) காலை, ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நடைபெற்றது.
   இதன்போதே, பைஸர் முஸ்தபா எம்.பி.,  மேற்கண்டவாறு வேண்டுகோள் விடுத்தார்.
   கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முஸ்லிம் வைத்தியர்கள், பொறியியலாளர்கள் மற்றும் மெளலவிமார்கள் அடங்கிய 36 பேரை விடுவிக்கக் கோரியும், இதன்போது பைஸர் முஸ்தபா எம்.பி. ஜனாதிபதியிடம் எடுத்துரைத்தார்.
   இவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இவர்களின் விடுதலை குறித்து சட்ட மா அதிபர், பதில் பொலிஸ் மா அதிபர் மற்றும் இராணுவத் தளபதி ஆகியோருடன் பேசி, உடன் நடவடிக்கை எடுக்குமாறு தான் கூறியதாகக் கூறுமாறும், இதன்போது  பைஸர் முஸ்தபா எம்.பி. யிடம் ஜனாதிபதி  தெரிவித்துள்ளார்.
   அத்துடன், இது தொடர்பிலான ஒப்பந்தம் ஒன்றிலும் ஜனாதிபதி கைச்சாத்திட்டார்.
   இதேவேளை, ஜனாதிபதியின் இந்த வேண்டுகோளை அடுத்து, பைஸர் முஸ்தபா எம்.பி., உடனடியாகவே  பதில் பொலிஸ் மா அதிபரையும் நேற்று (09) சந்தித்து இது தொடர்பிலான பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.  இப்பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதாக, பைஸர் முஸ்தபா எம்.பி. யின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

( ஐ. ஏ. காதிர் கான் )

கலாநிதி றவூப் ஸெய்ன்
சட்டத்தின் ஆட்சி (Rule of Law) ஜனநாயக விழுமியங்களில் முக்கியமானது. அதன் அடிப்படையில்தான் சட்டத்திற்கு முன் அனைவரும் சமமானவர்கள் எனும் மற்றொரு விழுமியம் பெறப்படுகின்றது. ஆயினும் இந்த விழுமியம் பெரும்பான்மையான ஜனநாயக நாடுகளில் வெறும் கோட்பாடாகவே உள்ளது. அதற்கு ஏதுவான சில காரணிகள் அங்கு இருக்கவே செய்கின்றன.
சட்டத்தின் ஆட்சி (Rule of Law) ஜனநாயக விழுமியங்களில் முக்கியமானது. அதன் அடிப்படையில்தான் சட்டத்திற்கு முன் அனைவரும் சமமானவர்கள் எனும் மற்றொரு விழுமியம் பெறப்படுகின்றது. ஆயினும் இந்த விழுமியம் பெரும்பான்மையான ஜனநாயக நாடுகளில் வெறும் கோட்பாடாகவே உள்ளது. அதற்கு ஏதுவான சில காரணிகள் அங்கு இருக்கவே செய்கின்றன.
ஒரு நாட்டில் வாழும் அனைத்து மக்களும் அதன் குடிமக்கள் அல்லது பிரஜைகள் என்ற வகையில் நாட்டின் அனைத்து சட்டங்களையும் பின்பற்றுவது அவசியமானது. அதில் யாருக்கும் ஒரு துளியும் கருத்து மாறுபாடுகள் இருக்க முடியாது. அதேவேளை, ஒரு நாட்டின் சட்டங்கள் அங்கு வாழும் எந்தவொரு மக்கள் தொகுதியினதும் கலாசார, மத சுதந்திரங்களை மீறுகின்ற வகையில் உருவாக்கப்படுவதோ நடைமுறைப்படுத்தப்படுவதோ ஜனநாயகத்திற்கு எதிரானதாகும். மட்டுமன்றி, சர்வதேச ரீதியில் அனைத்து நாடுகளும் ஏற்றுக் கொண்டுள்ள அடிப்படை மனித உரிமைகளை மீறுவதும் ஆகும்.
குறிப்பாக, பன்மைத்துவ நாடுகளில் பல்லின மக்களினதும் கலாசாரம் மற்றும் மதம் தொடர்பான சுதந்திரங்களும் உரிமைகளும் மதிக்கப்பட வேண்டும் என்பதை சர்வதேச சட்டங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன. இலங்கை ஒரு பன்மைத்துவ சமூகக் கட்டமைப்பைக் கொண்ட நாடு என்ற வகையில், சிறுபான்மை மக்களின் அடையாளங்களையும் தனித்துவங்களையும் பாதுகாப்பது சட்டமியற்றுபவர்களின் பொறுப்பாகும்.
அனைவருக்கும் ஒரே சட்டம்
4/21 தாக்குதலுக்குப் பிந்திய விவாதங்களில் ‘அனைவருக்கும் ஒரே சட்டம்’ என்ற கோஷம் முன்பை விட மிகக் கராராக எழுப்பப்படுகின்றது. கடந்த சில ஆண்டுகளுக்கு மேலாக இந்தக் கோஷம் பலராலும் எழுப்பப்பட்டு வந்த நிலையில், தற்போது பேரினவாதிகள் மட்டுமன்றி, சில அரசியல்வாதிகளும் அதனை தூக்கிப் பிடிக்கின்றனர். சிறி லங்கா சுதந்திரக் கட்சி முன்வைத்துள்ள எதிர்கால அரசியல் வேலைத் திட்டத்தின் ஒரு பகுதியாக இவ்விடயம் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அதேவேளை, அனைவருக்கும் ஒரே சட்டம் என்ற கோரிக்கையை சில மதகுருக்கள் அரசாங்கத்திடம் முன்வைக்கப் போவதாகத் தெரிவித்து வருகின்றனர். இதற்கு ஆதரவாக கையொப்ப வேட்டையொன்றில் சில அமைப்புகள் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.
இவ்விவாதத்தை பல்வேறு கோணங்களில் நம் நோக்க வேண்டியுள்ளது. ஏனெனில், ‘அனைவருக்கும் ஒரே சட்டம்’ என்பதற்குள் பல உள் முரண்பாடுகளும் மங்கலான விடயங்களும் உள்ளன. இலங்கையின் அரசியலமைப்புச் சட்டம் எல்லாவற்றுக்குமான தாய்ச் சட்டமாக இருந்து வருகின்றது. இந்தச் சட்டத்தினை அடியொற்றியே குற்றவியல், பயங்கரவாதம், சொத்துரிமை, காணி, போக்குவரத்து, வங்கி, வியாபாரம், பணக் கொடுக்கல் வாங்கல் என இன்ன பிற சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. இச்சட்டங்கள் அனைத்தும் இந்நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்கும் பொதுவானவை. இன, மத, பிரதேச, கலாசார வேறுபாடுகள் இன்றி அனைவர் மீதும் அவை பிரயோகிக்கப்படுகின்றன. அவ்வாறாயின், விவாதத்திற்கு வந்துள்ள “அனைவருக்கும் ஒரே சட்டம்” என்ற கோஷத்தின் உட்பொருள் என்ன?
முஸ்லிம்கள் குறித்து ஒரு வகைப் பீதியும் சந்தேகமும் பெரும்பான்மை மக்களிடையே திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ள இத்தருணத்தில் முஸ்லிம்கள் தொடர்பாக மேற்கொள்ளப்படும் மற்றொரு பீதியே ‘அனைவருக்கும் ஒரே   சட்டம்’ என்ற இந்தக் கோஷமாகும்.
இதன் மூலம் பெரும்பான்மை மக்களிடையே முஸ்லிம்களுக்கு இந்நாட்டில் வேறொரு சட்டம் இருப்பதாக வியாக்கியானப்படுத்தப்படுகிறது. இந்தத் தப்பான வியாக்கியானம் முஸ்லிம் சமூகம் குறித்த ஒரு பிழையான புரிதலின் விளைவா அல்லது இனத் துவேஷத்தை வளர்க்கும் நோக்கில் முன்வைக்கப்படும் ஒன்றா என்பதை பெரும்பான்மை மக்களே பரிசீலிக்க வேண்டும்.
முஸ்லிம்கள் செறிவாக வாழும் சில பிரதேசங்களில் ஒரு சில இளைஞர்கள் பொதுப் போக்கு வரத்து ஒழுங்குகளை மீறிச் செயற்பட்ட சில சம்பவங்கள் கடந்த காலங்களில் ஆங்காங்கே பதிவாகியிருந்தமை உண்மையே. கல்முனை, காத்தான்குடி, பேருவளை, திஹாரி போன்ற பிரதேசங்களில் மோட்டார் சைகிள் ஓட்டுநர்கள் தலைக்கவசம் அணிவதில்லை என்ற குற்றச்       சாட்டை போக்குவரத்துப் பொலிஸார் பலமுறை முன்வைத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சில சமூக வலைத் தளங்களில் பரவி கடும் விமர்சனங்களையும் எழுப்பியது. முஸ்லிம்கள் நாட்டின் சட்டங்களை மீறுகின்றனர் எனப் பிரச்சாரம் செய்து கொண்டு கலவரங்களைத் தூண்ட முயற்சிப்போர் இதனை தமக்குச் சாதமாக எடுத்துக் கொண்டனர்.
சமீபத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்ட அமைச்சர் ராஜித, பேருவளை பிரதேசத்தில் இவ்விடயம் குறித்து முஸ்லிம் மக்களோடு தான் கலந்துரையாடிய பின்னர் தற்போது தலைக்கவசம் அணியும் நிலை உருவாகி விட்டது என்று தெரிவித்திருந்தார். தற்போது அனைத்து முஸ்லிம் பிரதேசங்களிலும் இந்நிலைமை மாறி விட்டது.
ஆக, இந்தப் பின்னணியிலிருந்து அனைவருக்கும் ஒரே சட்டம் என்ற கோஷத்தைக் கிளப்புவதில் எந்த நியாயமும் இல்லை. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சில முஸ்லிம் அரசியல்வாதிகள் தொடர்பு பட்டிருந்தால் அவர்களை பாரபட்சமின்றி தண்டிக்க வேண்டும் எனவும், சிலர் கூறி வருகின்றனர். அது ஏற்புடையதே.
எவ்வாறாயினும், முஸ்லிம் தனியார் சட்டத்தை ஒழிக்க வேண்டும் என்பதே இந்தக் கோஷத்தின் உள்நோக்கம் எனில், அது மிகப் பாரதூரமான உரிமை மீறலாகும். முஸ்லிம்களின் சமய, கலாசார  தனித்துவத்தைத் துடைத்தழிக்கும் நீசத்தனமாகும்.
அளுத்கம கலவரத்திற்கு முன்பிருந்தே ஞானசார தேரர் முஸ்லிம் தனியார் சட்டத்தையும் காழி நீதி மன்றங்களையும் ஒழிக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்து வருகின்றார். தொடர்ந்தும் இக்கோரிக்கையை அரசாங்கத்திற்கு முன்வைக்கப் போவதாக அச்சுறுத்தி வருகின்றார். பெரும்பான்மை மக்களிடையே முஸ்லிம் தனியார் சட்டம் குறித்த விம்பம் எத்தகையது என்பதை நாம் நாடி பிடித்துப் பார்க்க வேண்டும். ஏனெனில், முஸ்லிம்களின் விவாக-விவாகரத்து மற்றும் வாரிசுரிமையோடு மட்டுப்படுத்தப்பட்ட தனியார் சட்டத்தை தேரர் மிகப் பிழையாக வியாக்கியானப்படுத்தி வருகிறார்.
ஏற்கனவே நாம் குறிப்பிட்ட அனைத்து விவகாரங்களிலும் (காணி, கல்வி, வங்கி, கொடுக்கல் வாங்கல், குற்றவியல்….) முஸ்லிம்களுக்கு தனி யானதொரு சட்டம் நடைமுறையில் இருப்பது போன்றே தேரரின் பிரச்சாரம் அமைந்துள்ளது. இதனால் சிங்கள மக்கள் முஸ்லிம்கள் தொடர்பில் மென் மேலும் வெறுப்புக் கொள்வதற்கும் பீதியடைவதற்குமான ஒரு கொதிப்பான சூழல் இங்கு திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றது.
நாட்டிலுள்ள சில ஊடகங்களும் இந்தப் போலிப் பிரச்சாரத்திற்கு சோரம் போகின்றன. முஸ்லிம்களுக்கு இந்நாட்டில் தனிச்சட்டம் உள்ளது என்பது மிகப் போலியான பிரச்சாரமாகும். கண்டியச் சட்டம் இருப்பது போல், வட மாகாண தமிழர்களுக்கு தேச வழமைச் சட்டம் இருப்பது போல, முக்குவர் சாதியைச் சேர்ந்தவர்களுக்கு முக்குவர் சட்டம் இருப்பது போல முஸ்லிம்களுக்கு தனியார் சட்டம் இருக்கின்றதே ஒழிய, தனிச் சட்டங்கள் ஏதும் இல்லை. மேற்போந்த சமூகங்களுக்கு தனித்துவமான விவாக, விவாரத்துச் சட்டம் உள்ளது போல் முஸ்லிம்களுக்கும் விவாக விவாகரத்துச்       சட்டம் உள்ளது. ஏனைய அனைத்து விடயங்களிலும் அவர்கள் நாட்டிலுள்ள பொதுச் சட்டங்களையே பின்பற்றுகின்றனர்.
முஸ்லிம் தனியார் சட்டம் என்பதோ கடந்த 300 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வரும் ஒன்றாகும். முஸ்லிம்கள் தமது சமய அடிப்படையில் விவாக, விவாகரத்து விவகாரங்களைக் கையாள்வதற்கு இச்சட்டம் ஒல்லாந்தாரால் அறிமுகப்படுத்தப்பட்டு, ஆங்கிலேயரால் தொடர்ந்தும் அங்கீகரிக்கப்பட்டு, சில திருத்தங்களோடு சுதந்திரத்திற்குப் பின்னர் வந்த அரசுகளால் அங்கீகரிக்கப்பட்டது. இதற்கும் பயங்கரவாதத்திற்கும் இடையில் எதுவித தொடர்பும் இல்லை. அந்தச் சட்டம் தீவிரவாதத்தைப் போதிக்கவில்லை. முஸ்லிம்கள் அவற்றைப் பின்பற்றுவதனால் நாட்டுக்கோ ஏனைய சமூகங்களுக்கோ எவ்வித நஷ்டமோ அச்சுறுத்தலோ பிரச்சினையோ இல்லை.
அனைவருக்கும் ஒரே சட்டம் என்ற பிரச்சாரம் முஸ்லிம் விரோத கோஷம் என்பதில் சந்தேகமில்லை. இக்கோஷத்தை எழுப்புகின்றவர்கள் 4/21 தாக்குதலுக்கு முன்பாகவும் இதே அழுத்தத்தோடும் துணிவோடும் இப்பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். தமது வாதத்திற்கு வலிமை சேர்க்கும் நோக்கில் தனியார் சட்டத்தின் உள்ளடக்கத்தைப் புரிந்து கொள்ளாது சம்பந்தமில்லாத விடயங்களை தமது போலிக் குற்றச்சாட்டுகளுடன் வெட்டி ஒட்டுகின்றனர்.
முஸ்லிம் பெண்களின் ஆடையை எடுத்துக் காட்டாகக் கொள்கின்றனர். ஒரு நாட்டின் அரசாங்கத்தினால் ஒரு சமூகத்தின் வாழ்வியல் முறை (Life Style) இப்படித்தான் இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கவோ அவ்வாறு மாற வேண்டும் என்று சட்டமியற்றவோ முடியாது. கலாசார, சமய சுதந்திரங்களில் தலையிட எந்த அதிகாரமும் அரசுக்கு இல்லை என்பதை மேலே கண்டோம். எந்தவொரு அரசுக்கும் ஒரு சமூகத்தின் கலாசார மற்றும் வாழ்வியல் உரிமைகளைப் பாராதீனப்படுத்தும் அதிகாரம் இல்லை என்பதை அனைத்து சர்வதேச  சட்டங்களும் ஏற்றுக்கொண்டுள்ளன.
சட்டத்தின் ஆட்சியும் மதகுருக்களின் உண்ணாவிரதமும்
சட்டத்தின் ஆட்சி ஜனநாயகம் உயிர் வாழ்கிறது என்பதற்கான பிரதான அடையாளமாகும். துரதிஷ்டமாக இலங்கையில் சட்டத்தின் ஆட்சி படிப்படையாக தோல்வியுற்று வருகின்றது என்பதற்கு மோசமான உதாரணங்கள் பெருகிச் செல்கின்றன. குறிப்பாக கண்டியில் ரத்ன தேரரும், காலியில் பிக்குகள் பலரும் கல்முனையில் சில தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் பிக்குகளும் மேற்கொண்ட உண்ணாவிரதங்கள் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட கலேபரங்கள் சட்டத்தின் ஆட்சியை கேள்விக்குள்ளாக்குகின்றன.
அமைச்சர் ரிஷாதும், ஹிஸ்புல்லாஹ், அசாத் சாலியும் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே ரத்ன தேரரின் உண்ணா விரதம் ஆரம்பிக்கப்பட்டது. மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளை குறிப்பிட்ட தினத்தில் நண்பகல் 12.00 மணிக்குள் பதவி விலக வேண்டும் என்றும், அவ்வாறு விலகா விட்டால் நாட்டில் மிகப் பெரும் காணிவேல் ஒன்று நடாத்தப்படும் என்றும் அகிம்சை வழிவந்த ஒரு மதகுரு கர்ச்சிக்கின்றார்.
ஒரு மக்கள் பிரதிநிதி குறித்து யாரேனும் குற்றச் சாட்டுக்களை முன்வைத்தால் அவற்றை உரிய முறையில் விசாரித்துத் தீர்ப்பளிப்பதற்கு காவல் நிலையங்களும் நீதிமன்றங்களும் உள்ளன. நாட்டில் ஒரு தெளிவான சட்டமும் அதற்குப் பொறுப்பான அமைச்சும் உள்ளது. அதன்படியே தீர்மானிங்கள் பெறப்பட வேண்டும். அதற்குப் பெயர்தான் சட்டத்தின் ஆட்சி. ஒரு மதகுரு தான் விரும்பிய கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டால் அரசாங்கம் அதற்குப் பணிந்து கோரிக்கைக்கு செவிவாய்க்கும் எனின், சட்டத்தின் ஆட்சி என்பதன் அர்த்தம் என்ன?
இலங்கை ஒரு ஜனநாயக சோசலிச குடியரசு என்கிறோம். ஆனால் சட்டத்தின் ஆட்சியை உண்ணாவிரதங்கள் கேலித் கூத்தாக்குகின்றன. நாட்டில் ஓர் அரசாங்கமும் சட்டங்களை அமுல் படுத்தும் முகவர்களும் இருக்கின்ற நிலையில் தடியெடுத்தவர்களெல்லாம் தண்டல்காரர்கள் என்பது போல சில தனிநபர்கள் எப்படிச் செயல்பட முடியும்? முஸ்லிம்கள் இப்படித்தான் ஆடை அணிய வேண்டும், மத்ரஸா கல்வி முறை நீக்கப்பட வேண்டும், இவற்றையே உண்ண வேண்டும், ஹபாயாவைக் கழற்ற வேண்டும் என்றெல்லாம் கோடு கிழிக்கும் அதிகாரம் எந்தவொரு ஜனநாயக அரசுக்கும் இல்லை.
ஒரு அரசாங்கத்திற்கே இந்த அதிகாரம் இல்லாத நிலையில் தலை மழித்த ஒரு மதகுரு இந்தப் புத்தகத்தைத்தான் வாசிக்க வேண்டும், இந்த மொழியைக் கற்கக் கூடாது. இஸ்லாத்தின் இந்தப் பிரிவைத்தான் பின்பற்ற வேண்டும் என்றெல்லாம் கர்ச்சிப்பதற்கும் சட்டாம் பிள்ளை வேலை செய்வதற்கும் அதிகாரம் எங்கிருந்து வருகின்றது?
பன்மைப் பாங்கான ஒரு நாட்டில் ஒவ்வொரு சமூகத்தினதும் கலாசார, சமய வாழ்வியல் விவாகரங்களில் பயங்கரவாதம் அல்லது தீவிர வாதம் என்ற தோரணையில் அரசு கைவைக்க முடியாது. அவ்வாறு உரிமை மீறலில் ஈடுபடும் மதகுருக்களுக்கு இடமளிக்கவும் முடியாது. அதேவேளை, முஸ்லிம்கள் தமது மத கலாசார சுதந்திரங்களை பொறுப்புடன் கையாள வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று அப்பிப்பிராயமில்லை. தாம் முஸ்லிம்கள் என்ற உணர்வு நிலை அவர்களுக்கு இருப்பது போன்று இலங்கையர்கள் என்ற உணர்வு நிலையும் இருக்க வேண்டும். ­
சட்டத்தின் முன் அவைனவரும் சமம்
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது தான் சட்ட ஆட்சியின் அடித்தளமாகும். தற்போது நாட்டில் அனைவருக்கும் ஒரே சட்டம் என்று கோஷமெழுப்புபவர்கள் இந்த அர்த்தத்தில் அக்கோஷத்தை எழுப்புவார்களாயின் அதனை முஸ்லிம்கள் மிகுந்த மரியாதையுடன் வரவேற்பர். இன்று இலங்கையில் தவறிப் போயுள்ள விடயம் இதுதான். சட்டம் பிரயோகத்தில் வேறுபடுகின்றது. முஸ்லிம்கள் பாகுபாடாக நடத்தப் படுகின்றனர். ஓர வஞ்சனையுடன் நோக்கப்படுகின்றனர். எடுத்துக் காட்டாக சட்ட விரோத வழிகளில் பணம் சம்பாதித்தல் குறித்து இன்று வைத்தியர் ஷாபிக்கு எதிராக விசாரணை நடைபெறுகின்றது. ஆனால், ஷாபியை விட இத்தகைய விசாரணை நடத்தப்பட வேண்டிய பல மோசடிக்காரர்களும் அரசியல்வாதிகளும் இங்கு தாராளமாக உள்ளனர்.
திகன கலவரத்திலும் மினுவாங்கொடை கலவரத்திலும் நேரடியாகப் பங்கு கொண்ட அமித் சிங் உடனடியாக பிணையில் விடுதலை செய்யப்பட்டார். ஆனால், அற்ப சொற்ப காரணங்களுக்காக இராணுவத் தேடுதலின் போது கைதாகிய அப்பாவி முஸ்லிம்கள் பலர் இன்னும் சிறைச்சாலைகளில் உள்ளனர்.
மே மாதம் தலதா மாளிகை பக்கம் சென்ற இரு முஸ்லிம் இளைஞர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டு இரத்தம் ஓட்டப்பட்டனர். ஆனால், குருனாகல் மாவட்டத்தில் சில பள்ளி வாயலின் நடுபகுதிக்குள் ஊடுருவி அல்குர்ஆன் பிரதிகளை எரித்துச் சாம்பலாக்கியவர்களுக்கு எந்தத் தண்டனையும் இல்லை.
தர்மச் சக்கரம் ஆடையில் பொறிக்கப்பட்டிருந்ததாக ஒரு அப்பாவி முஸ்லிம் பெண் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். ஆனால் 1915 ஆண்டிலிருந்து முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இனக் கலவரங்களில் பல நூற்றுக்கணக்கான பள்ளிவாயல்கள் நொறுக்கப்பட்டன. அதன் சூத்திரதாரிகளுக்கு எந்தத் தண்டனையும் இல்லை.
இந்தக் கோணத்திலிருந்து ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கோஷத்தை முன்வைப்பார்களாயின் முஸ்லிம்கள் அதற்கு முழு ஆதரவு வழங்குவார்கள். அதை விடுத்து முஸ்லிம் விரோத பகையுணர்வையும் முஸ்லிம்கள் குறித்து பயத்தையும் பெரும்பான்மை மக்களிடையே பிரச்சாரம் செய்து கலவரங்களைத் தூண்டும் நோக்கிலான இத்தகைய பொய்ப் பிரச்சாரங்களை முஸ்லிம் சமூகம் வன்மையாக எதிர்க்க வேண்டும். சட்ட ரீதியாக எதிர்கொள்ள வேண்டும்.
முஸ்லிம்களின் சமய, கலாசார சுதந்திரம் மூச்சுக் காற்றுக்கு ஒப்பானது. அதனை விட்டுக் கொடுத்தால் முஸ்லிம் சமூகம் உயிர் பிழைப்பது சாத்தியமற்றுப் போய்விடும்.

நன்றி - மீள்பார்வை இணையம்


"தெரண" ஊடக தில்காவின் "முஸ்லிம் தனியார் சட்டம்" தொடர்பிலான கேள்விக்கு பாராளுமன்ற உறுப்பினர் சுமேந்திரன் அவர்களின் பதில்:-

"பாராளுமன்றப் பெரும்பான்மையைப் பயன்படுத்தி குறித்த ஒரு சமூகத்தின் விஷேட தனியார் சட்டங்களை நீக்க முடியாது"

"முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருமணத்திற்கான ஆகக்குறைந்த வயது விடயத்தைத் தவிர வேறு விடயங்களில் நான் குறை காணவில்லை."

"திருமண வயது குறித்த திருத்தமும்கூட முஸ்லிம்களின் முழுமையான இணக்கப்பாட்டின் அடிப்படையில் மட்டுமே செய்யப்பட வேண்டும்."

"இந்த நாட்டிலே கண்டியச் சட்டம் - தேசவழமைச் சட்டம் - முக்குவர் சட்டம் என்றெல்லாம் -  தனியார் சட்டங்கள் உள்ளன. ஆனால் எல்லோரும் முஸ்லிம் தனியார் சட்டம் பற்றி மட்டுமே விமர்சிக்கின்றனர். அதை ஏற்றுக்கொள்ள முடியாது..."

(A.L.Thavam)

உயர்தரம் சித்தியடையாத ஒருவரை பாராளுமன்றத்திற்கு அனுப்புவது மற்றும் ஜனாதிபதியாக தெரிவு செய்வது மக்களினால் மேற்கொள்ளப்படும் பாரிய தவறு என பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 

இன்று (09) கம்பஹா பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

அத்துடன் பாராளுமன்றத்தில் 70 அல்லது 80 பேர் அளவில் உயர்தரம் சித்தியடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறக்கூடிய வேட்பாளர் ஒருவர் போட்டியிட தேவையில்லை எனவும் நாட்டை முன்னேற்றக்கூடிய ஒருவரே போட்டியிட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

நாட்டை முன்னேற்றக்கூடிய தலைவர் ஒருவரை ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக முன்வைத்தால் தனது பூரண ஒத்துழைப்பை வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

(AdaDerana)
Blogger இயக்குவது.