எதிரிகள் எங்களை தாக்கபோகின்றார்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டால், அவர்கள் எங்களை தேடி வரமுன்பு நாங்கள் எதிரியை தேடிச்சென்று தாக்கி அழிக்க வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் இழப்பினை சந்திப்பது தவிர்க்க முடியாதது. 

தற்போது பாரசீக வளைகுடாவில் போர் பதட்டம் நிலவுகின்றது. ஈராக்கை அழித்து நிர்மூலமாக்கியது போன்று ஈரானையும் அமெரிக்கா எந்தநேரத்திலும் தாக்கலாம் என்ற அச்சம் காணப்படுகின்றது.

ஈராக் அதிபர் சதாம் ஹுசைன் விட்ட தவறினை ஈரான் விடுமா என்பதுதான் எமது கவலையாகும்.

பல ஆயிரம் கிலோமீட்டருக்கு அப்பால் எங்கயோ இருக்கின்ற அமெரிக்காவானது நூறுவீதம் இஸ்லாமியர்கள் வாழ்கின்ற பாரசீக வளைகுடா பிராந்தியத்தில் தளம் அமைத்துக்கொண்டு இஸ்லாமிய நாடொன்றை தாக்கி அழிப்பதற்கு அப்பிராந்தியத்தில் உள்ள நாடுகள் ஒத்துழைக்க வேண்டும்.

அவ்வாறு ஒத்துழைக்காவிட்டால் இஸ்லாமிய நாடொன்றை அழிப்பதென்பது அமெரிக்காவினால் கற்பனை பண்ணிக்கூட பார்க்க முடியாத விடயமாகும். 

சதாம் ஹுசைனை பதவி கவிழ்க்கப் போகிறோம் என்ற போர்வையில் ஈராக்கை அழித்து பல இலட்சம் இஸ்லாமியர்களை அமெரிக்கா கொலை செய்யப் போகிறது என்று முன்கூட்டியே நன்றாக தெரிந்திருந்தும், தனது அயல் நாடுகளில் அமெரிக்கா தளம் அமைத்து தன்னை பலப்படுத்தும் வரைக்கும் பார்த்துக் கொண்டிருந்தது சதாம் ஹுசைன் விட்ட பாரிய தவறாகும்.

அதாவது ஈராக்கை தாக்குவதற்காக சவூதி அரேபியா, குவைத், கட்டார், உட்பட ஈராக்கை அண்மித்த பல நாடுகளில் அமெரிக்கா தளம் அமைத்துகொண்டும், பாரசீக வளைகுடா கடல் பகுதியில் தனது விமானம் தாங்கி கப்பலை நிறுத்தி அங்கிருந்தும் ஈராக் மீது அமெரிக்கா தாக்குதல் நடாத்தியது. 

அவ்வாறு தளம் அமைத்து அமெரிக்கா தன்னை பலப்படுத்தும் வரைக்கும் அவகாசம் வழங்காமல் ஆரம்பத்திலேயே அந்த இடங்களை வலிந்து சென்று தாக்குதல் நடாத்தி நிர்மூலமாக்கியிருந்தால் ஈராக்கை அழிப்பது அமெரிக்காவுக்கு கடினமான காரியமாக இருந்திருக்கும்.

அமெரிக்கா வியட்நாமில் அடைந்த தோல்விக்கு பின்பு எந்தவொரு நாட்டின்மீதும் தனியாக சென்று போர் தொடுப்பதில்லை. தனது கூட்டாளி நாடுகளையும் அழைத்துக்கொண்டே செல்வது வழக்கம்.
அதிலும் தரைப்படையை கொண்டு தாக்குதல் நடாத்துவதில்லை.

முதலில் விமான தாக்குதல் நடாத்தி அதன்மூலம் எதிரி நாட்டின் இராணுவ கட்டளை மையங்கள், விநியோகப் பாதைகள், விமான தளங்கள், ஏவுகணை நிலைகள், விமான எதிர்ப்பு நிலைகள் என அனைத்து கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையும் நிர்மூலமாக்கிய பின்பே தரைப்படையினரை அனுப்புவார்கள்.

அதாவது எதிரி நாட்டின் முள்ளந்தண்டை உடைத்து அவர்களது எழுபது வீதமான பலத்தினை அழித்து நிலைகுலைய செய்த பின்பே அமெரிக்காவினதும், அதன் கூட்டாளி நாடுகளினதும் தரைப்படைகள் எதிரி நாட்டுக்குள் நுழைவது வழக்கம். இதுதான் ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் நடந்தது. 

இதனை ஒரு படிப்பினையாக கொண்டு ஈரான் செயல்பட வேண்டும். அதாவது தன்னை சுற்றியுள்ள நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க விமான தளங்களையும், ஏவுகணை நிலைகளையும் வலிந்து சென்று தாக்கி அழிக்க வேண்டும்.

அத்துடன் மேலதிக அமெரிக்க படைகளும், விமானங்களும் வளைகுடா பகுதிக்குள் நுழைவதை தடுப்பதுடன், ஈரானுக்கும் ஓமானுக்கும் இடைப்பட்ட ஹோமொஸ் கடல் பாதையூடாக வளைகுடா கடல் பகுதிக்குள் அமெரிக்க விமானம் தாங்கி கப்பல் செல்வதனையும் தடுக்க வேண்டும்.

அவ்வாறு செய்யாவிட்டால் அமெரிக்காவின் அதிநவீன F-35 விமானத்தின் மூலமாகவும், ஏவுகணைகள் மூலமாகவும் ஈரான் தாக்கப்படுவதனை தடுக்கமுடியால் போய்விடும்.

அண்மையில் வளைகுடா பகுதியில் அமெரிக்காவின் நற்பு நாடுகளின் கப்பல்கள் மீதும், சவூதியின் சில இடங்களிலும் நடைபெற்ற தாக்குதல் சம்பவங்களை அவதானிக்கும்போது சதாம் ஹுசைன் விட்ட தவறினை போன்று ஈரான் செய்யாது என்பதனை புரிந்துகொள்ள கூடியதாக உள்ளது.

முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.