ஜனாதிபதித் தேர்தலில் 15,992,096 பேர் வாக்களிக்கத் தகுதி ;
13 ஆயிரத்துக்குக் குறையாத வாக்களிப்பு நிலையங்கள்

( மினுவாங்கொடை நிருபர் )

   நவம்பர் மாதம் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்காக,  சுயேச்சைக் குழு  வேட்பாளர்கள் 75 ஆயிரம் ரூபாவும், அரசியல் கட்சியின் வேட்பாளர்கள் 50 ஆயிரம் ரூபாவும் கட்டுப் பணமாகச் செலுத்த வேண்டும் என, தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 
குறித்த கட்டுப்பணங்களைச்  செலுத்துவதற்கு, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 6 ஆம் திகதி நண்பகல் பன்னிரண்டு மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

   இதேவேளை, ஒக்டோபர் 7 ஆம் திகதி காலை 9 மணிமுதல் முற்பகல் 11 மணி வரை வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என,  தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிட்டுள்ளது.

   இது தவிர, நாட்டில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் 70 உள்ள போதிலும், அநேகமான கட்சிகள் செயற்பாட்டு அரசியலில் இல்லை என்றும்,  தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய  சுட்டிக்காட்டியுள்ளார்.
   அத்துடன்,  இம்முறை ஜனாதிபதித் தேர்தல் 2018 ஆம் ஆண்டின் வாக்காளர் பட்டியலுக்கேற்பவே நடத்தப்படும்.

   இதன்பிரகாரம்,  ஒரு கோடியே 59 இலட்சத்து 92 ஆயிரத்து 96 பேர் (15,992,096) இம்முறை  வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாகவும், நாடளாவிய ரீதியில் 13 ஆயிரத்திற்குக் குறையாத வாக்களிப்பு நிலையங்களை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இதுபற்றி மாவட்ட மட்டத்திலான  ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

   தற்சமயம், வாக்காளர்கள் அட்டைகளை அச்சிடுவதற்கான பணிகளை ஆணைக்குழு  முன்னெடுத்துள்ளதாகவும், 
   வேட்பு மனுக்கள் தாக்கல் செய்து நிறைவு செய்யப்பட்டதும் குறித்த வாக்காளர் அட்டைகளை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள்  முன்னெடுக்கப்படும் என்றும், தேர்தல்கள்  ஆணைக்குழு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. 

( ஐ. ஏ. காதிர் கான் )

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.