ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் வேட்பாளர் போட்டியிடுவது, ஜனாதிபதியை தீர்மானிப்பதற்கே அன்றி ஜனாதிபதி ஆகுவதற்கு இல்லை என கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

காத்தான்குடியில் தனது கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களை சந்தித்த போது அங்கு உரையாற்றுகையிலேயே ஹிஸ்புல்லாஹ் இவ்வாறு கூறினர்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ஜனாதிபதியாவதற்கு ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் வேட்பாளர் போட்டியிடுவதில்லை. ஜனாதிபதியை தீர்மானிப்பதற்காகவே போட்டியிட வேண்டியுள்ளது. ஜனாதிபதியை தீர்மானிக்கும் வேட்பாளர் என்ற கோசமே எமது கோசமாகும்.

இது ஒரு பௌத்த நாடு, நல்ல பௌத்த சிங்கள தலைவரை இந்த நாட்டுக்கு ஜனாதிபதியாக கொண்டு வரவேண்டும்.

பயங்கரவாதம் ஒழிக்கப்படல் வேண்டும். தீவிரவாதம் ஒழிக்கப்படல் வேண்டும். எந்தவொரு சமயத்தையும் விமர்சிக்க கூடாது போன்ற விடயங்களை செய்யக் கூடிய நாட்டை கட்டியெழுப்பக் கூடிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பக் கூடிய சர்வதேசத்துக்கு முகம் கொடுக்கக் கூடிய நல்ல சிறந்த பௌத்த தலைமைத்துவத்தை நாட்டுக்கு ஜனாதிபதியாக கொண்டு வரவேண்டும்.

இதற்காகத் தான் நாங்கள் பாடுபடுகின்றோம். இவ்வாறு கூறுவது இனத்துவேசமா என நான் கேட்கின்றேன்.

ஜனாதிபதி தேர்தலில் நான்கு கட்சிகள் போட்டியிட்டால் கடும் போட்டியிருக்கும். ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள 50 பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சியை விட்டும் வெளியேறி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க போன்றவர் ஒன்றிணைந்து சஜித் பிரேமதாசாவை வேட்பாளராக நிறுத்தினால் அதுவும் போட்டியாக இருக்கும்.

ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சி அவர்களும் போட்டியிட்டால் அதுவும் போட்டி தான்.

மற்றைய தரப்பில் கோட்டாபய ராஜபக்ஷ, அதே போன்று அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் வேட்டபாளராக போட்டியிடுவார்கள். இதனால் தேர்தல் கடும் போட்டியாக இருக்கும்.

இந்த நேரத்தில் ஒரு முஸ்லிம் வேட்பாளரை நிறுத்தி முஸ்லிம் பிரதேசங்கள் அனைத்திலும் பிரச்சாரங்களை செய்வது இலங்கையிலுள்ள முஸ்லிம் வாக்குகள் அனைத்தையும் பெற முயற்சிக்க வேண்டும்.

ஆகக் குறைந்தது 3 இலட்சம் வாக்குகளையாவது அந்த முஸ்லிம் வேட்பாளர் எடுத்தால் ஜனாதிபதியை தீர்மானிக்கின்ற சக்தியாக மாற முடியும். அதனால் தான் முஸ்லிம் வேட்பாளர் ஒருவரை ஜனாதிபதி தேர்தலில் களமிறக்க வேண்டும் என்ற முன்மொழிவை நான் வைத்துள்ளேன்.

ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் 50 வீதமான வாக்குகளை பெற முடியாத சூழ்நிலை வருமாக இருந்தால் நமது முஸ்லிம் சமூகத்தினுடைய வாக்குகள் யார் ஜனாதிபதி என்பதை தீர்மானிக்கும்.

நாட்டில் தொடர்ச்சியாக முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக பாரிய சதிகள் தொடர்வதைத் தடுக்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும். எனவே, தான் நாம் ஜனாதிபதியை தீர்மானிக்கின்ற சக்தியாக இருப்போம் என மேலும் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.