( மினுவாங்கொடை நிருபர் )
குறைந்த கட்டணத்தில் உம்ராவுக்கு அழைத்துச் செல்வதாக வாக்குறுதியளித்து, மக்களிடமிருந்து போலி உம்ரா உப முகவர்கள் பணம் வசூலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பில், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு, அரச ஹஜ் குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.
பொதுமக்கள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்டு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ள ஹஜ் மற்றும் உம்ரா முகவர் நிலையங்களின் ஊடாகவே தங்களது பயணங்களை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
அங்கீகரிக்கப்பட்டுள்ள ஹஜ் மற்றும் உம்ரா முகவர் நிலையங்களின் விபரங்களை, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தைத் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளுமாறும் பயணிகள் வேண்டப்பட்டுள்ளார்கள்.
போலி முகவர்களிடம் உம்ராப் பயணத்துக்காக முற்பணம் வழங்கி ஏமாற்றப்படும் பயணிகள் தொடர்பில், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது. இதன் காரணமாக, பயணிகள் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட முகவர் நிலையங்கள் ஊடாகவே தங்கள் பயணங்களை ஏற்பாடு செய்து கொள்ளும்படியும், அரச ஹஜ் குழுவின் தலைவர் கலாநிதி எம்.ரீ. சியாத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதேவேளை,
5 வருட கால எல்லைக்குள் ஒன்றுக்கு மேற்பட்ட பயணங்களை மேற்கொள்ளும் யாத்திரிகர்களிடம் சவூதி அரேபிய அரசு அறவிட்டு வந்த 2000 ரியால் கட்டணம், தற்போது நீக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
( ஐ. ஏ. காதிர் கான் )
கருத்துரையிடுக