கைத்தறித்துறையில் ஈடுபடும் உற்பத்தியாளர்களுக்குச் சர்வதேச பயிற்சிப் பட்டறைகளில் கலந்துகொள்வதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்குமாறு மேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில், மேல் மாகாண கைத்தொழில் திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

அண்மையில் கொழும்பு லயோனல் வென்ட் கலைக்கூடத்தில் நடைபெற்ற 'பேலதிக சலு 2019' என்ற கைத்தறிக் கண்காட்சியினை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேல் மாகாண செயலாளர் பிரதீப் யசரத், மேல் மாகாண கைத்தொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி  எல்.ஏ.எஸ். ரங்கனீ உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள், மக்கள் பலர்  இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

அங்குத் தொடர்ந்தும் உரையாற்றிய ஆளுநர்:
உள்நாட்டு உற்பத்திகளுக்கு மிகவும் முக்கியத்துவம் வழங்கவேண்டிய ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். அந்தவகையில் நாம் ஜனாதிபதிக்கு நன்றிகூறக் கடமைப்பட்டுள்ளோம். ஜனாதிபதிக்கான அதிகாரங்கள் குறைக்கப்பட்டிருந்தாலும் கூட, பல சவால்களுக்கு முகம் கொடுத்து, உள்நாட்டு உற்பத்திகளுக்கான முக்கியத்துவத்தை அவர் பாதுகாத்துள்ளார்.



இது எங்கள் தாய்நாடு. எமது உற்பத்திப் பொருட்கள் தரமானது. என்றாலும் அவற்றை விற்பனை செய்யும் போது பல சவால்களுக்கு முகம் கொடுக்கவேண்டியுள்ளது. எமது நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மிகவும் விருப்பத்துடன் அவற்றைக் கொள்வனவு செய்து உபயோகிக்கின்றனர். குறிப்பாகக் கைத்தறிப் பொருட்களை அவர்கள் விருப்பத்துடன் அணிகின்றனர்.

அவ்வாறு சுற்றுலாப் பயணிகள் எமது வணிகத் துறைக்கு வழங்கும் முக்கியத்துவத்தை, எம்மவர்கள் எவ்வளவு துயரம் வழங்குகிறார்கள் என்பது தொடர்பில் நாம் சிந்திக்க வேண்டும். ஏன் என்றால் நாம் வெளிநாட்டு இறக்குமதிகளால் கவரப்பட்டு, வெளிநாட்டு உற்பத்தியாளர்களின் நலனுக்காகச் செயல்படுகின்ற ஒரு நிலைமைக்கு ஆளாகியுள்ளோம்.

ஆகவே நாம் அதிலிருந்து மீண்டு, எமது உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்குக் கைகொடுக்கவேண்டும், அவர்களை நாம் ஊக்குவிக்கவேண்டும். அதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேல் மாகாண சபை என்ற வகையில் நாம் முன்னெடுக்கவேண்டும் என ஆளுநர் மேலும் தெரிவித்தார்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.