( மினுவாங்கொடை நிருபர் )
சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தளம் ஊடாக இடம்பெறும் நிதி மோசடிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு, குற்றத் தடுப்புப் பொலிஸார் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளனர்.
சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தளம் ஊடாக பொதுமக்களை ஏமாற்றி, பண மோசடி செய்யும் நடவடிக்கைகள் தொடர்பில் பொலிஸாருக்கு ஆதாரங்களுடன் தகவல் கிடைத்துள்ளது.
சந்தேக நபர்கள் சமூக வலைத்தளங்கள் ஊடாக நண்பர்களாக இணைந்து கொண்டு, நம்பிக்கையை ஏற்படுத்தி பண மோசடியில் ஈடுபடுவதாகவும் குற்றத்தடுப்புப் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
வெவ்வேறு நாடுகளில் சீட்டிழுப்பில் வெற்றி பெற்றுள்ளதாக அல்லது பரிசுகள் வெற்றி கொண்டுள்ளதாகத் தெரிவித்து, அவை சுங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, குறித்த சந்தேக நபர்கள் பொய்யுரைப்பதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
வெற்றி கொண்ட பரிசுப் பொருட்களையும் பணத்தையும் பெற்றுக் கொள்வதற்கு பணம் தேவைப்படுவதாகத் தெரிவித்து, சந்தேக நபர்கள் தமது வங்கிக் கணக்குகளுக்கு மக்களிடமிருந்து பணத்தை வைப்பிலிட்டுக் கொண்டுள்ளனர்.
இவ்வாறு பணம் அல்லது பரிசுப் பொருட்களைப் பெற்றுக் கொள்வதற்கு பணத்தை வைப்பிலிடுவதாயின், பொறுப்பு வாய்ந்த நிறுவனத்திடம் கேட்டறிந்து கொள்ளுமாறும் குற்றத் தடுப்புப் பொலிஸார், பொது மக்களை மேலும் அறிவுறுத்தியுள்ளனர்.
( ஐ. ஏ. காதிர் கான் )
கருத்துரையிடுக