நாட்டு மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு முன்னுரிமை வழங்கி எவரது நிபந்தனைகளுக்கும் அடிபணியாமல் தேர்தல் கொள்கை பிரகடனத்தை உருவாக்கியுள்ளதாக பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஆட்சிக்கு வந்து குறுகிய காலப்பகுதியில் இந்தக் கொள்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

பொதுஜன பெரமுனவின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று (வெள்ளிக்கிழமை) நெலும் பொகுன பிரதான அரங்கில் உத்தியோகப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இதன் விபரம் வருமாறு,

#தேசிய_பாதுகாப்பு

நாட்டின் தேசிய பாதுகாப்பு வீழ்ச்சியடைந்தால் ஏனைய அடிப்படைத் துறைகள் அனைத்தும் இயல்பாகவே வீழ்ச்சியடையும் என்ற நடைமுறை நிலைமையினை அடிப்படையாகக் கொண்டு அறிந்து கொள்ளலாம். அனைத்து மட்டங்களிலும் முன்னேற்றமடைய வேண்டுமாயின் தேசிய பாதுகாப்பிற்கே எந்நிலையிலும் முன்னுரிமை கொடுக்க வேண்டும். ஜனநாயகத்தை மதித்து அனைவருக்கும் பொதுவான அமைதியான சூழலை ஏற்படுத்தும் விதத்தில் தேசிய பாதுகாப்பு பலப்படுத்தப்படும்.

#நற்புறவுடனான_வெளிநாட்டுக்_கொள்கை

நாட்டின் கௌரவமான கொள்கைகள் சர்வதேச மட்டத்தில் வெளிநாட்டு கொள்கைகளின் ஊடாகவே வெளிப்படுத்தப்படும். நாட்டின் இறையாண்மையில் தலையிடுவதற்கும், நாட்டின் நிலப்பரப்பினை பிறிதொருவருக்கு கையளிப்பதற்கான ஒப்பந்தங்களை அடிப்படையாகக் கொண்ட வெளிநாட்டு கொள்கைகள் நிராகரிக்கப்படும். இதேவேளை, அனைத்து நாடுகளுடன் என்றும் நட்புறவுடன் செயற்படும் கொள்கைத் திட்டங்கள் செயற்படுத்தப்படும். நட்புறவுடனான வெளிநாட்டுன் கொள்கை முழுமைப்படுத்தப்படும்.

#ஊழல்_மோசடியற்ற_அரச_நிர்வாகம்

மக்களின் தேவைகளை நிறைவேற்றும் அரச நிர்வாக கட்டமைப்பு ஸ்தாபிக்கப்படும். முறையான கொள்கைகளைக் கொண்டு மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகள் செயற்படுவதற்கான ஊழலற்ற முகாமைத்துவம் கட்டாயமாக்கப்படும்.

#மக்களுக்கு_பொறுப்பு_கூறும் #அரசியலமைப்பு_மீள்திருத்தம்

அரசசியல் கட்சிகளினதும் அரசியல் தலைவர்களினதும் தேவைக்காகவும் தனிப்பட்ட தேவைக்காகவும் அரசியலமைப்பினைப் பயன்படுத்திய காலம் நிறைவுக்கு கொண்டு வரப்படும். அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முரண்பாடான விடயங்கள் நீக்கி மக்களாணையினை மையப்படுத்தியதும், பொறுப்புக் கூறும் விதத்திலும் புதிய அரசியலமைப்பு மீள்திருத்தம் செய்யப்படும்.

#மாற்றம்_கொண்ட_பிரஜை – #வளமான #மனித_வளம்

நாட்டு மக்களின் தேவைகளை கருத்திற் கொண்டு மாறிவரும் உலக நடப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தல் அவசியமாகும். திறன் விருத்தி, சுகாதார கட்டமைப்பு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளில் மாற்றம் கொண்டுள்ள மக்களின் கருத்துகளுக்கு முன்னுரிமை வழங்குவதுடன் வளமான மனித வளங்கள் துறைசார் விருத்திக்கேற்ப கட்டியெழுப்பப்படும்.

#மக்களை_மையப்படுத்திய_பொருளாதாரம்

தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டுமாயின் உள்ளூர் வியாபாரிகள் பலப்பட வேண்டும். இதன் முழுப் பொறுப்பினையும் அரசாங்கம் ஏற்கும். வியாபாரிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும். தேசிய பொருளாதாரத்தினை மேம்படுத்துவதற்கு தொழில்நுட்ப துறைசார் விருத்திகளை அரசாங்கம் அனைத்து கிராமிய மட்டத்திலும் மேம்படுத்தும்.

#தகவல்_தொழினுட்ப_விருத்தி

பூகோள தொழினுட்ப விருத்தி மற்றும் அடிப்படை தகவல் தொழினுட்பம் ஆகியவையே இன்றைய இளம் சந்ததியினருக்கு அரசாங்கம் வழங்கும் வரப்பிரசாதமாகும். நாட்டின் முன்னேற்றத்திற்கு தகவல் தொழினுட்பத்தின் பங்களிப்பு இன்றியமையாதது. தகவல், திறன் விருத்தி மற்றும் கல்வித்துறை விருத்தி ஆகியவற்றில் முன்னேற்றமடைந்த சமுதாயம் உருவாக்கப்படும்.

#பௌதீக_வள_அபிவிருத்தி

பௌதீள வளங்களை பயனுடையவதாக மாற்றும் திட்டங்கள் செயற்படுத்தப்படும். ஒவ்வொரு பிரதேசங்களிலும் உள்ள பௌதீள வளங்கள் அங்கு வாழும் மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்யும் விதத்தில் மாற்றியமைக்கப்படும்.

#சுற்று_சூழல்_பாதுகாப்பு_முகாமைத்துவம்

இயற்கை வளங்களைப் பாதுகாப்பது அனைவரது பொறுப்பாகும். எதிர்கால சந்ததியினரின் ஆரோக்கியத்திற்காகவும், வாழ்வாதார இருப்பிற்காகவும் இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுசூழல் பாதுகாக்கப்பட வேண்டும். சுற்றுச்சூழல் முகாமைத்துவத்திற்காக முறையான கட்டமைப்புக்கள் செயற்படுத்தப்படும். சுற்றுசூழல் தொடர்பாக நடைமுறையில் உள்ள சட்டங்கள் மீள் திருத்தம் செய்யப்படும். அத்துடன் காலத்தின் தேவைக்கேற்ப சுற்றுச்சூழல் சார் திட்டங்கள் வகுக்கப்படும்.

#சட்டத்தினை_மதிக்கும்_ஒழுக்கமுள்ள #சமூகம்.

சட்டம் அனைத்து தரப்பினருக்கும் பொதுவானதாக செயற்படுத்தப்படும். சட்டத்தினை அனைவரும் மதிக்கும் நிலைமையினை சமூகத்தில் ஏற்படுத்தல் பிரதானமாகும். எவருக்கும் எந்நிலையிலும் சட்டத்தின் பிரகாரம் முன்னுரிமை கொடுக்காது கௌரவத்தின் பிரகாரம் ஒழுக்கமுள்ள சமூகம் தோற்றுவிக்கப்படும்.

என்று குறித்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முபிஸால் அபூபக்கர்
முதுநிலை விரிவுரையாளர்
பேராதனைப் பல்கலைக்கழகம்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.