இன்று நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக முழுமையான பெறுபேறுகளை 18 ஆம் திகதி திங்கள் கிழமை மாலை 6.00 மணிக்கு முன்னதாக வெளியிடக்கூடியதாக இருக்கும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இருப்பினும் முடிந்தவரை பெறுபேறுகளை விரைவாக வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளோம். சிலவேளை இது நாளை மாலைக்கு முன்னதாக கூட இடம்பெறலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இன்று மாலை அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு ஆணைக்குழுவின் தலைவர் பதிலளித்தார்.

இதேவேளை இன்று மாலை 5.00 மணியுடன் நிறைவடைந்த ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு 80 சதவீதமாக அமைந்திருந்ததாக ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.

இன்று நள்ளிரவு 12.00 மணிக்கு முன்னர் முதலாவது தேர்தல் பெறுபேற்றை வெளியிடக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார். இது தபால் மூலம் அளிக்கப்பட்ட வாக்குகளின் பெறுபேறாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

வாக்களிப்பு வீதம் 80 சதவீதத்திற்கும் அதிகரிக்கக்கூடும் ஏனெனில் தபால் மூலம் அளிக்கப்பட்ட வாக்களிப்பையும் கவனத்தில் கொள்ளும் போது ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு வீதம் 80 சதவீதத்திற்கு அதிகமாக இருக்க கூடும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.