எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புகள் நேற்றும் இன்றும் நடைபெற்றது.

இதன் அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 97% வாக்குப்பதிவு இடம்பெற்றிருப்பதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரும் முல்லைத்தீவு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலருமான திருமதி. ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நடைபெற்று முடிந்த தபால் மூல வாக்களிப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், நடைபெற இருக்கின்ற ஜனாதிபதி தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 171 வாக்களிப்பு நிலையங்களில் 17,676 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றிருந்தனர்.

அவற்றில் 514 தபால் மூல வாக்குகள் தேர்தல் திணைக்களத்தில் கிடைக்கப் பெற்றிருக்கிறது. அதன் அடிப்படையில் 97% வாக்குப்பதிவு இடம்பெற்றிருக்கின்றது.

அத்தோடு குறிப்பாக தேர்தல் இடம்பெற்ற இந்த நாட்களில் தேர்தல்கள் தொடர்பான முறைப்பாடுகள் எதுவும் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

இதே வேளை கிளிநொச்சி மாவட்டத்தில் 90 சதவீத தபால் மூல வாக்களிப்பு பதிவாகியுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(AdaDerana)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.