இடைக்கால சம்பள சுற்றறிக்கையை, நவம்பர் 5 ஆம் திகதிக்கு முன்பாக வெளியிடாவிட்டால், ஆசிரியர், அதிபர்கள் இணைந்து, மீண்டும் 8 ஆம் திகதி முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக, ஆசிரியர், அதிபர் சங்கம் கூட்டாக இணைந்து சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இது தொடர்பில், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், ஆசிரியர் சேவா சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
அதிபர், ஆசிரியர்களுக்கான சம்பள முரண்பாட்டை நீக்குமாறு, பல வருடங்களாகக் கோரிக்கை விடுத்துவருகின்ற போதிலும்  இதுவரை அதற்கான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்றும், அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும்வகையில், மார்ச் மாதமும் செப்டெம்பர் மாதமும், சுகவீன விடுமுறைப் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
போராட்டத்தின் விளைவாக, இடைக்காலக் கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டதாகவும் ஆனால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டு பல வாரங்கள் சென்றுள்ள நிலையில், இதுவரை இடைக்கால சம்பள சுற்றறிக்கை வெளியிடப்படவில்லை என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், 5 ஆம் திகதிக்குள் சுற்றறிக்கை வெளியிடப்படவில்லை எனில்,  8 ஆம் திகதி பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கை ஆசிரியர் சேவா சங்கம், அனைத்து இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கம், அதிபர் சேவா சங்கம், கல்வி வல்லுநர்கள் சங்கம், ஆசிரியர், அதிபர் சங்கம், இலங்கை சுதந்திர ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட 26 சங்கங்கள் இணைந்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Tamilmirror)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.