சிறுபான்மை சமூகத்தின் ஆதரவு இல்லாமல் இந்த நாட்டிலே ஜனாதிபதி ஒருவரை உருவாக்க முடியாது என்ற செய்தியை இனவாதிகளுக்கு உணர்த்தும் தேர்தலாக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் அமையவேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் தலைமையில் சஜித் பிரேமதாசவை ஆதரித்து மன்னாரில் இன்று இடம்பெற்ற பிரசாரக்கூட்டத்தில் அமைச்சர் றிஷாட் பதியுதீன் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது, நாட்டின் எதிர்கால தலைவர் ஒருவரை தெரிவு செய்யும் இந்த தேர்தலில் நீங்கள் அமைதியாகவோ, அலட்சியமாகவோ இருந்துவிடக் கூடாது.

கடந்த காலங்களில் எமது மதஸ்தலங்களை நெருக்கியவர்கள், உரிமைகளை பறித்தெடுத்தவர்கள், வியாபாரஸ்தாபனங்களை நாசப்படுத்தியவர்கள், நிம்மதியை தொலைத்தவர்கள் அனைவரும் கோட்டாபயவுக்கு பின்னால் அணிதிரண்டுள்ளனர். இவர்களின் கனவுகளை சிதைப்பதற்காகவே சிறுபான்மை தலைவர்களான நாம் அனைவரும் ஒன்று பட்டுள்ளோம். எனவே இனவாதிகளின் சதிகளை முறியடிப்பதற்கும் தடுப்பதற்கும் நீங்கள் எம்முடன் கைகோர்த்து சஜித்தை வெல்லவையுங்கள்.

சிறுபான்மை மக்கள் அனைவரும் ஓரணியில் திரள்வோமேயானால் சஜித் பிரேமதாச பாரிய வெற்றியை பெறுவார். நியாயத்திற்கும் அநியாயத்திற்குமான இந்த தேர்தலில் நியாயம் வெல்லவேண்டும், நீதி வாழவேண்டும்.

இனவாதிகள் தமது அணிதான் வெற்றிபெறுமென்று தம்பட்டம் அடிக்கின்றார்கள். நமது சமூகத்தை அளிப்பதற்கு அத்தனை முயற்சிகளையும் செய்துவிட்டு இப்போது வாக்குகேட்டு வருகின்றார்கள். போதாக்குறைக்கு அவர்களது முகவர்களை வடக்கு, கிழக்குக்கு அனுப்பி வைத்துள்ளார்கள். பெருவாரியான பணத்துடன் வந்துள்ள இந்த கோடரிக்காம்புகள் வடக்கு, கிழக்கு பிரதேசத்தில் முகாமிட்டு வாக்கு கேட்கிறார்கள். கற்றை கற்றையாக காசை அள்ளி விசுறுகிறார்கள் போதாக்குறைக்கு இங்குள்ள சிலபணக்காரர்களும் இந்த சதிக்கு துணைபோவதாக அறிகிறோம். பணத்தை காட்டி வாக்குகளை கொள்ளையடிக்கும் இந்த கூட்டத்திடம் ஏமாந்துவிடாதீர்கள். சோரம்போய்விடாதீர்கள். அவர்கள் தந்தாள் கனிமத்துப்பொருட்கள் (யுத்தத்தில் விட்டுச்செல்லும் பொருட்கள்) என நினைத்து வாங்கிக்கொள்ளுங்கள்.

நாங்கள் ஊர் ஊராக, வீடு வீடாக வந்து வாக்கு கேட்கமுடியாது போய்விட்டாலும் நீங்கள் உணர்ந்து வாக்களியுங்கள். சஜித் பிரேமதாசாவை வெல்லவைப்பதன் மூலம் நமது எதிர்காலம் நமது மண்ணின் எதிர்காலம் சிறக்கும் என்பதை மறந்துவிட வேண்டாம் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, அமைச்சர்களான ஹக்கீம், மனோகணேசன் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் டி.எம்.சுவாமிநாதன், முன்னாள் எம்பிக்களான சபீக் ரஜாப்தீன், ஹுனைஸ் பாரூக், அஸ்லம், முத்தலி பாவா பாரூக், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான றிப்கான், அலிகான் ஷரீப், நியாஸ், பாயிஸ், பிரதேசபை தவிசாளர்களான முஜாஹிர், சுபியான், செல்லத்தம்பு உட்பட இங்கு பலர் உரையாற்றினர்.

(AdaDerana)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.