முஸ்லிம்கள் அச்சம் கொள்ளும் வகையில் முன்வைக்கப்படும் கருத்துக்களை தவிர்க்க வேண்டும் -
முஸ்லிம் மக்கள் அச்சம் கொள்ளும் வகையில் கடந்த காலங்களைப் போன்றே தற்போதும் அமைச்சர்கள் சிலர் கருத்துகளை முன்வைத்து வருகின்றனர்.
இத்தகைய கருத்துகள் இன நல்லிணக்கத்துக்குப் பெரும் தீங்கை ஏற்படுத்தும் இது தொடர்பில் ஆட்சிஅதிகாரத்திலுள்ள தலைமைகள் கவனம் கொள்ளவேண்டியது அவசியமானது எனத் தெரிவிக்கின்றார் கிழக்கு மாகாண முன்னாள் முதல்வரும் ஸ்ரீல. முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான நஸிர் அஹமட்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த வாரம் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பத்தாயிரத்துக்கும் அதிகமான மக்களுக்குச் சமைத்த உணவுகளை வழங்கி வைத்த பின்னர் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
கடந்த காலங்களைப்போன்று அமைச்சர் விமல் வீரவன்ஸ இனவாத கருத்துகளையே முன் வைத்து வருகின்றார், ‘இந்தியாவில் மோடியின் அமைச்சரவையில் முஸ்லிம் உறுப்பினர்கள் இல்லை.
அதேபோன்றதொரு ஆட்சியே இலங்கையிலும் நடைபெறும் என்றும் ‘இந்தியாவில் முஸ்லிம் மக்கள் அதிகம் உள்ளனர். ஆனாலும் மோடியின் அமைச்சரவையில் முஸ்லிம் உறுப்பினர்கள் இல்லை. ஆனாலும் அனைவருக்கும் ஏற்றவகையில் சட்டத்திட்டங்கள் கொண்டுவரப்பட்ட நடைமுறைப்படுத்தப்படுகின்றன’ எனவும் தெரிவித்துள்ளார்.
இத்தகைய கூற்றுகள் மறைமுகமாக முஸ்லிம் மக்களை அச்சுறுத்துபவையாகவே உள்ளன. எனவே அரசுக்கு ஆதரவு வழங்கும் முஸ்லிம் எம்.பிகள் கவனம் கொள்ளவேண்டும். இது தொடர்பில் தமது தலைமைகளின் கவனத்துக் கொண்டு சென்று இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் மக்கள் பெருவாரியாகச் சிங்கள வேட்பாளர்களுக்கே வாக்களித்துள்ளார்கள் தனியான ஒரு முஸ்லிம் வேட்பாளர் போட்டியிட்டபோதும் அவருக்கு தமது முழுமையான ஆதரவை அவர்கள் வழங்கவில்லை. இந்த யதார்த்தத்தை சிங்கள தலைமைகள் புரிந்து கொள்ள வேண்டும்.
தேசிய அரசியலில் சமத்துவமிருக்க அதிகாரப் பங்கிட்டு அரசியல் தோற்றம் பெற வேண்டும் என்ற சிந்தனையின் பிரகாரமாகவே முஸ்லிம் மக்கள் தமது வாக்குரிமை பயன்படுத்தி வந்தனர் வருகின்றனர்.
நாட்டில் வாழும் சமூகங்களின் மத்தியில் சமத்துவ சிந்தனையையும் நல்லிணக்கத்தையும் தோற்றம் பெறச்செய்யாது. இத்தகைய சர்வாதிகார போக்கு கொண்ட கருத்துகளை முன்வைப்பது ஒருபோதும் காத்திரமான அரசியல் கலாச்சாரம் ஏற்பட வழி வகுக்காது என்பதைச் சம்பந்தப்பட்டவர்கள் தெரிந்துகொண்டு அனைத்து சமூக மக்களின் உணர்வுகளையும் மதித்துச் செயற்பட முன்வரவேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்துரையிடுக