விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சுவிஸ் தூதரகத்தின் பெண் அதிகாரி கானியா பெனிஸ்டர் பிரான்சிஸ்ஸை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதனடிப்படையில் 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீர பிணைகளின் அடிப்படையில் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரின் பிணையாளர்கள் இருவரின் வசிப்பிடத்தை உறுதி செய்யும் கிராம அதிகாரியின் சான்றிதலையும் சந்தேக நபரின் நிரந்தர இருப்பிடத்தை உறுதி செய்யும் கிராம அதிகாரியின் சான்றிதலையும் முன்வைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவரின் வசிக்கும் நிரந்தர முகவரியை நீதிமன்றத்திற்கு அறிவிக்காது மாற்றத்தை ஏற்படுத்த முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அவருக்கு வெளிநாடு செல்ல தடை விதித்த நீதிமன்றம் அவருடைய கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.

(செய்திப்பின்னணி)

சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய கடந்த 16 ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

அரசாங்கத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியமை மற்றும் பொய் சாட்சியங்களை முன்வைத்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டார்.

கானியா பெனிஸ்டர் பிரான்சிஸ் கடத்தப்பட்டமை தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் அவரிடம் கடந்த நாட்களில் நீண்ட வாக்கு மூலத்தை பெற்றுக்கொண்டனர்.

இந்த நிலையில் குறித்த சுவிஸ் தூதரக அதிகாரியின் மன நலம் தொடர்பில் பரிசோதித்து அறிக்கை ஒன்றை பெற்றுக் கொள்ளுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதற்கமைய அவர் அங்கொடையில் உள்ள மனநல நிருவகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு பரிசோதனைக்கு உற்படுத்தப்பட்டார்.

அதன்பின்னர் அவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு சட்டமா அதிபர் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

அதற்படி சுவிஸ் தூதரக அதிகாரி கானியா பெனிஸ்டர் பிரான்சிஸ் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இருந்த போது கைது செய்யப்பட்டார்.

இதன் பின்னர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவரை இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

அததெரண 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.