( மினுவாங்கொடை நிருபர் )

   ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு, ஜனவரி மாதம் முதல் இணையத்தளம் மூலம் கொடுப்பனவுகள் வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 

   ஐந்தாம் தர  புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற சகல மாணவர்களுக்கும் ஒவ்வொரு மாதமும் 10 ஆம் திகதி இணையவழி மூலமாகக் கணக்குப் புத்தகத்தில் பணத்தைப் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள  கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. 

   சகல பாடசாலைகளுக்கும் சென்று உதவித் தொகையைப் பெற்றுக் கொள்ளத் தகுதியுடைய சகல மாணவர்களின் தரவுகளைப் பெற்று, அதற்கமைவாக அட்டவணைகள்  தயாரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. 

   ஒவ்வொரு வருடமும் 3 இலட்சத்து 50 ஆயிரம் பேர் ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றுவார்கள்.  இதில் மாதாந்தம் 15 ஆயிரம் ரூபாவுக்கு  வருமானம் குறைந்த குடும்பத்தைச் சேர்ந்த 20 ஆயிரம் மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும்.

   இந்நிலையில், ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றிச் சித்தியடைந்த மாணவர்களுக்கு 6 ஆம் ஆண்டு முதல் 13 ஆம் ஆண்டு வரை, இவ்வுதவித் தொகைகள்  வழங்கப்படும். 

   குறித்த உதவித் தொகைகளைப் பெற்றுக் கொள்ள ஒவ்வொரு மாணவர்களும் மாதாந்தம் வவுச்சர் மூலம் விண்ணப்பிக்கும் முறையே  இதுவரை காலமும் இருந்து வந்தது. இதனால் கால தாமதம், சிரமங்களை எதிர்நோக்க வேண்டியிருந்தது. 

   இதனைத் தவிர்க்க, தற்போது இணையவழி மூலமாக மாணவர்களின் கணக்கில் நேரடியாக மாற்றக் கூடிய வகையில் இலகு முறையில் நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

   இதன்பிரகாரம், 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து சகல அரச பாடசாலைகளுக்கும் இணைய வழி மூலமாக உதவித் தொகைகள்  வழங்கப்படும் என நிதி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

( ஐ. ஏ. காதிர் கான் )

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.