( மினுவாங்கொடை நிருபர் )

   டெங்கு நுளம்பை ஒழிப்பதற்கான உத்தேச திட்டம் ஒன்றாக வொல் பெக்கியா (Wol bachia) என்ற பக்ரீரியாவை டெங்கு நுளம்பில் உட்புகுத்தும் புதிய வேலைத்திட்டம், ஜனவரி மாதம்  ஆரம்ப காலப்பகுதியில் நடைமுறைப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

   இரண்டு சுகாதார வைத்திய பிரிவுகளைத் தெரிவு செய்து இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. நுகேகொட சுகாதார வைத்திய அதிகாரப் பிரிவிலும், கொழும்பு நகர சபைக்கு உட்பட்ட தெமட்டகொடை  பிரதேசத்தில் உள்ள "டி1" என்ற பிரிவிலும் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவிருப்பதாக, தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

   அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. ஜனவரி மாதம் முதல் இது முன்னெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவுஸ்ரேலியாவில் மொனெஷ் (Monash University) பல்கலைக்கழகத்தின் ஆய்வுக்கு அமைவாக இந்த நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டம் உலகில் 12 நாடுகளில் முன்னெடுக்கப்படுகிறது.

   இது 2023 ஆம் ஆண்டளவில் உலகில் 100 மில்லியன் மக்களை இலக்காகக் கொண்டு விரிவுபடுத்தப்படவுள்ளது. இந்தத் திட்டத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்தும் பொழுது நுளம்பு முட்டைகள் நாட்டில் இருந்து அவுஸ்ரேலியாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு பக்ரீரியாவை உட்செலுத்திய பின்னர் மீண்டும் அந்த முட்டைகள் நாட்டுக்குக் கொண்டு வரப்பட்டு நுளம்புகள் உள்ள சுற்றாடல் பகுதியில் விடுவிக்கப்படும்.

அவுஸ்ரேலியாவில் உள்ள தொழில்நுட்பம் இலங்கையில் இல்லாமையால், இந்த முட்டைகள் அந்நாட்டுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. பக்ரீரியா உட்புகுத்தப்பட்ட நுளம்புகள் 12 தொடக்கம் 20 வார காலப்பகுதிக்குள் விடுவிக்கப்படும். 

   சில காலம் செல்லும் பொழுது வொல் பெக்கியா (Wol bachia) என்ற பக்ரீரியா உட்புகுத்தப்பட்ட நுளம்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பதன் மூலம் டெங்கு நோயைப் பரப்பக்கூடிய நுளம்புகள் சுற்றாடலில் இல்லாமல் போகும். அவுஸ்ரேலியா, வியட்னாம், பிரேசில், கொலம்பியா உள்ளிட்ட 12 நாடுகளில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

( ஐ. ஏ. காதிர் கான் )

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.