எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் புதிய முன்னணி ஒன்றை உருவாக்கி அதன் மூலம் பொதுத் தேர்தலில் வெற்றிப்பெறுவதற்கான வியூகங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் வெலிமடை ஊவா பரணகம பகுதியில் அமைக்கப்பட்ட புதிய வீதி கட்டமைப்பை மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு நேற்று (09) மாலை இடம்பெற்றது.
இதற்காக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் உரையாற்றிய போதே அ.அரவிந்தகுமார் இதனை கூறினார்.
அங்கு தொடர்ந்தம் உரையாற்றிய அவர், கடந்த ஜனாதிபதி தேர்தலில் பின்னடைவை சந்தித்திருந்தாலும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி நிச்சயம் வெற்றி பெறும் எனவும் நம்பிக்கை வெளியிட்டார்.
அதனை இலக்காக கொண்டு எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் புதிய தேர்தல் வியூகங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் அரவிந்த குமார் தெரிவித்துள்ளார்.
ஆகவே கடந்த ஜனாதிபதி தேர்தலில் மலையக மக்கள் செயற்பட்ட விதத்திற்கு நிகராக எதிர்வரும் பொதுத் தேர்தலிலும் செயற்பட்டால் நிச்சயம் பாராளுமன்ற ஆட்சியை கைப்பற்றுவது உறுதி எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
மேலும் பதுளை மாவட்டத்திற்கு தற்போது கிடைத்துள்ள இரண்டு தமிழ் பிரதிநிதித்துவத்தையும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் இல்லாது செய்வதற்கு சிலர் கங்கணம் கட்டி செயற்படுவதாகவும் அவர் கூறினார்.
அவ்வாறு பதுளையில் தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்யப்படுவதற்கு எம்மவர்களும் துணைப்போவது வேதனைக்குரிய விடயம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஆகவே இந்த விடயத்தை மிக நிதானத்துடன் உணர்ந்து ஊவாவில் தமிழ் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய வேண்டியது மிக அவசியம் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் மேலும் தெரிவித்துள்ளார்.
AdaDerana
கருத்துரையிடுக