மரண தண்டனைக் கைதியான துமிந்த சில்வாவை, ஜனாதிபதியின் விசேட பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்த அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரைக் கடுமையாகத் திட்டியுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, அவர்களை அங்கிருந்து விரட்டியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த எம்.பிக்கள் சிலரும் தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலருமே, நேற்று முன்தினம் (08) ஜனாதிபதியைச் சந்தித்து, இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
அப்போது அவர்கள், ரஞ்சன் ராமநாயக்க எம்.பியின் அலைபேசிக் கலந்துரையாடல்கள் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளால், சாதகமான சூழ்நிலையொன்று ​தோன்றியிருப்பதாகவும் இதைப் பயன்படுத்தி, துமிந்த சில்வாவை விடுவிப்பது நல்லதென்றும் கூறியுள்ளனர்.
இதனால் கோபமடைந்துள்ள ஜனாதிபதி, இப்போதைக்குத் தான் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள் போதுமென்றும் இன்னுமின்னும் பிரச்சினைகளை ஏற்படுத்தாதீர்கள் என்றும், இதற்கான தேவை தனக்கில்லை என்றும் கூறி, அவர்களைக் கடுந்தொனியில் திட்டியுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
இவ்வாறு ஜனாதிபதியைச் சந்தித்துவிட்டு வெளியேறியுள்ள எம்.பிக்கள், அமைச்சர்கள், மீண்டும் தனியாகக் கூடி, பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளனர் என்றும் இதே யோசனையை, மீண்டும் நல்ல சந்தர்ப்பம் பார்த்து, ஜனாதிபதியிடம் முன்வைக்க வேண்டுமென்றும் தீர்மானித்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Tamilmirror 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.