எம்.எஸ். அமீர் ஹுசைன்
சிறுபான்மை இனங்களான தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த தனித்துவமான அரசியல் கட்சிகளின் மூலம் பிரதிநிதிகள் பாராளுமன்றத்திற்குத் தெரிவாகும் சந்தர்ப்பத்தை இல்லாதொழிக்கும் வகையிலான தனிநபர் பிரேரணை ஒன்றை அரசியல் அமைப்பிற்கான 20 ஆவது திருத்தமாக சமர்ப்பிப்பதற்கு முன்னாள் நீதி மற்றும் புத்தசாசன அமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான விஜேதாச ராஜபக்ஷ திட்டமிட்டு வருகின்றார். அவரது இந்தப் பிரேரணை பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் இடம்பெறச் செய்வதற்காக சமர்ப்பிக்கப்பட்டிருப்தாக அறிய முடிகின்றது.
இதுகால வரையில் சிறுபான்மை இன அடிப்படையிலான கட்சிகள் தேர்தல்களில் போட்டியிட்டு 5% சதவீத வாக்குகளைப் பெற்றுக் கொண்டால் உறுப்பினர்களைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு இருந்து வருகின்றது. அந்தச் சந்தர்ப்பத்தை ஒழித்துக் கட்டுவதற்கான முயற்சியாகவே இந்தப் பிரேரணை அமைய இருக்கின்றது.
தனிநபர் பிரேரணை ஒன்றால் ஒரு இனம் சார்ந்த உரிமையைப் பறித்து அழித்துவிட முடியுமா? என்ன காரணத்தின் அடிப்படையில் இவ்வாறான பிரேரணை ஒன்றை விஜேதாச ராஜபக்ஷ முன்வைக்க வேண்டும் போன்ற கேள்விகள் எழுந்துள்ளன. இந்தப் பிரேரணை பாராளுமன் றத்தில் சட்டமூலமாக சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டால் மாத்திரமே சட்டமாகும் நிலை இருக்கின்றது. இவ்வாறான ஒரு பிரேரணை பாராளுமன்றத்தில் உறுப்பினர் ஒருவரால் தனி நபர் பிரேரணையாகச் சமர்ப்பிப்பதால் உடனடியாக சட்டமாகும் நிலை ஏற்படுவதில்லை.
இருந்தாலும் பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில் இடம்பெறுமாயின் அது சபை ஒத்திவைப்பு நேர பிரேரணையாகவே விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும். அவருக்குச் சார்பான ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதற்குச் சாதகமாகவும் எதிராகவும் கருத்துக்களை தெரிவிக்க முடியும்.
இந்தப் பிரேரணை பற்றி ஆராய்வதற்கு முன்னர் இந்த விஜேதாச ராஜபக்ஷ யார், அவரது போக்குகள் எப்படிப்பட்டது என்பது தொடர்பாக கவனம் செலுத்துவதும் முக்கியமானதாக அமைகின்றது. இவர் நல்லாட்சி அரசாங்கத்தில் மைத்திரிபால சிறிசேனாவுடன் இணைந்திருந்த சந்தர்ப்பத்தில் முன்னாள் நீதி மற்றும் புத்தசாசன அமைச்சராக இருந்தார். பின்னர் இடையில் அமைச்சர் பதவியை இழந்தார். அதற்கு முன்னர் சந்திரிக்கா பண்டாரநாயக்கா ஆட்சியில் இணைந்திருந்தார். அதன் பின்னர் சந்திரிக்காவின் அரசாங்கத்தில் இருந்து வெளியேறி ஐ.தே.க.வுடன் இணைந்து சிறிது காலம் செயற்பட்டார். பின்னர் மீண்டும் ஐ.தே.க.வில் இருந்து வெளியேறி மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து செயற்பட்டார். இறுதியாக மைத்திரிபால சிறிசேனாவின் ஸ்ரீ.ல.சு.கட்சியுடன் இணைந்திருந்து ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில் கோதாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவிக்கும் ஒருவராக மாறினார்.
இவ்வாறாக நிரந்தரமற்ற ஒரு அரசியல் கொள்கையோ கட்சியோ இல்லாதவராக சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப காற்றடிக்கும் திசைக்கு மாறி மாறி அரசியல் நடத்தும் ஒருவராக இலங்கையின் அரசியல் அரங்கில் பேசப்படும் ஒருவரே இவர். ஆனாலும் 2011 ஆம் ஆண்டின் பின்னர் கலபொட அத்தே ஞானசார தேரரின் முஸ்லிம் விரோத சிந்தனைகளால் வெகுவாகக் கவரப்பட்ட ஒருவராக இவர் இருந்து வருகின்றார். அதனால் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் இலங்கை வாழ் முஸ்லிம் சமூகம் அனுபவிக்கும் உரிமைகள், சலுகைகளுக்கு எதிராகக் குரல் எழுப்புவதன் மூலம் முஸ்லிம் விரோத இனவாதிகளதும் சிங்களவாத தீவிர போக்காளர் களதும் ஆதரவைப் பெறுவதற்கான முயற்சிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். இவ்வாறான ஒரு பின்னணியைக் கொண்ட ஒருவரான விஜேதாச ராஜபக்ஷவே இந்தப் பிரேரணையையும் பாராளுமன்றத்தில் அரசியல் அமைப்பிற்கான 20 ஆவது திருத்தமாக முன்வைக்கத் துடிக்கின்றார்.
தனிநபர் பிரேரணை ஒன்றின் நிலை இவ்வாறாக அமைந்தாலும் நாட்டில் பொதுமக்கள் மத்தியில் பொதுவான அபிப்பிராயம் ஒன்றைக் கட்டி எழுப்புவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்துவது பிரதான சாதகமான காரணியாக அமைகின்றது. அத்துடன் அரசாங்கத்தின் கவனத்தை ஈர்த்து இந்த உரிமையைப் பறிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள இந்தத் தனி நபர் பிரேரணை ஒரு வாய்ப்பாக அமையலாம். ஆளும் கட்சியின் நீதி அமைச்சரால் அரசியல் அமைப்பிற்கான திருத்த மசோதாவாக உள்ளடக்கிய அமைச்சரவை அங்கீகாரத்துடன் எதிர்வரும் காலங்களில் பாராளுமன்றத்தில் விவாதிக்கச் செய்து சில சந்தர்ப்பங்களில் நிறைவேற்றப்பட்டால் இதனால் பாதிப்பு ஏற்பட இடமிருக்கின்றது.
ஏற்கனவே இரண்டாவது குடியரசு யாப்பான 1978 ஆம் ஆண்டு அரசியல் அமைப்பில் உள்ளடக்கப்பட்டிருந்த 12.5% வீதம் என்ற வெட்டுப் புள்ளிக்கு திருத்தம் கொண்டு வரும் வகையில் முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாசாவின் ஆட்சிக் காலத்தில் அரசியல் அமைப்பிற்கான 15 ஆவது திருத்தமாக 1988 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி நிறை வேற்றப்பட்ட திருத்தச் சட்டத்தின் மூலம் 5% என்ற வெட்டுப் புள்ளி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திருத்தத்தைக் கொண்டு வருவதற்கான ஆலோசனைகளை அப்போதைய சிரேஷ்ட அரசியல்வாதியாக இருந்த ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த எம்.எச்.எம் அஷ்ரப் அப்போதைய ஜனாதிபதி ஆர். பிரேமதாசாவிற்கு வழங்கினார். அதன் படியே 15 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டது.
ஆனாலும் அந்தத் திருத்தம் கொண்டு வரப்பட்ட போது அன்றைய நிலையில் சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என்ற பேதங்கள் இன்றி எல்லா உறுப்பினர்களும் இதற்கு ஆதரவளித்தனர். அதன் காரணமாகவே இவ்வாறான ஒரு பிரேரணை நிறைவேறியது. ஆனாலும் இன்று விஜேதாச ராஜபக்ஷ இந்தப் பிரேரணையானது அப்போதைய ஜனாதிபதியாக இருந்த ஆர்.பிரேமதாசாவை அஷ்ரப் ஏமாற்றி சுயநல நோக்கத்தில் நிறைவேற்றியது என்ற அடிப்படையில் மிக மோசமான முறையில் இனவாத அடிப்படையில் முஸ்லிம் விரோத போக்கை ஏற் படுத்தி மிகவும் தாழ்வான அரசியல் பிரபல்யம் தேடும் வகையில் கருத்துக்களை பரப்புவதில் ஈடுபட்டுள்ளார்.
அவருக்கு ஆதரவாக அடுத்த இனத் துவேஷியான அதுரலியே ரத்ன தேரர் செயற்பட்டு வருகின்றார். ஆனாலும் முன்னாள் இடதுசாரி அரசியல்வாதியும் அமைச்சருமான டியு குணசேகர உட்பட பல தமிழ் அரசியல்வாதிகள் இந்தப் பிரேரணையை எதிர்த்து கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். அவர்கள் அதனை எதிர்ப்பதோடு விஜேதாச ராஜபக்ஷவின் அரசியல் சாணக்கியம் பற்றிய அறிவின் ஆழத்தையும் விமர்சித்துள்ளனர்.
இந்த 5% என்ற வெட்டுப் புள்ளி முறை அறிமுகப்படுத்தப்பட்டதன் காரணமா கவே சிறுபான்மை இனங்களான தமிழ் மற்றும் முஸ்லிம் இன
அடிப்படையிலான பிரதிநிதிகள் பாரா ளுமன்றம் செல்லும் சந்தர்ப்பம் அதிகமாக ஏற்பட்டது. அதனால் பேரினவாத சிங்கள பெரும்பாமை அரசியல் கட்சிகள் சிறுபான்மை இனங்களின் காலில் மண்டியிடும் நிலை ஏற்பட்டதாகக் கூறி அந்த நிலைக்கு முடிவு கட்டுவதற்காக 5% என்ற வெட்டுப் புள்ளி முறை ஒழிக்கப்பட வேண்டும் என்பது விஜேதாச ராஜபக்ஷவின் வாதமாகும். இந்தப் பிரேரணையை பாராளுமன்றத்தில் அரசாங்கம் அங்கீகரித்தால் ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் கட்சி, அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சி, தேசிய காங்கிரஸ் கட்சி உட்பட முஸ்லிம் சமூகம் சார்ந்த மற்றும் தமிழர் சார்ந்த மலையக இன அடிப்படையிலான கட்சிகளில் இருந்து பிரதிநிதிகள் பாராளுமன்றம் வருவதை நிறுத்த முடியும் என்பது விஜேதாசவின் திட்டமாகும்.
எவ்வாறோ இலங்கையின் அரசியல் வரலாற்றில் அவ்வப்போது வந்த அரசியல் தலைவர்கள் சிறுபான்மை இனங்களுக்கு ஏற்படும் அரசியல் ரீதியான அநீதிகளைக் குறைத்து அவர்களுக்கும் நாட்டில் போது மான அரசியல் பிரவேசத்தை ஏற்படுத்து வதற்கான சந்தர்ப்பங்களை அரசியல் அமைப்பு மூலம் வழங்கி வந்துள்ளனர். அந்த வரிசையிலே பல அங்கத்தவ தொகு திகள், இரட்டை அங்கத்தவ தொகுதிகள் போன்ற வாய்ப்புக்களும் உள்ளன. அந்த வழிமுறையில் ஒரு சந்தர்ப்பமாகக் கிடைத்த உரிமையே
இந்த 12.5% என்ற வெட்டுப் புள்ளி முறை 5% வீதமாக குறைக்கப்பட்டமையாகும். ஏற்கனவே அதுரலியே ரதன தேர ரும் முஸ்லிம் தனியார் சட்டத்தை இல்லாதொழித்து முஸ்லிம்களையும் நாட்டின் பொதுவான சட்டத்தின் முன் சமம் என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும் என்ற ஒரு தனிநபர் பிரேரணையையும் சமர்ப்பித் திருந்தார்.
ஆனாலும் புதிய ஜனாதிபதியால் பாராளுமன்ற கூட்டத் தொடர் ஒத்தி வைக்கப்பட்டதால் அந்தப் பிரேரணை செல்லுபடி யற்றதாகி இருக்கின்றது. இனவாதிகள் எத்தகைய பிரேரணைகளை கொண்டு வந்தாலும் அவை அரசாங்கத்தின் பிரேரணையாக சட்டத் திருத்த மசோதாவாக அமைச்சரவை அங்கீகாரத்துடன் பாராளுமன்றத்திற்கு வந்து பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டால் மாத்திரமே இவ்வாறான உரிமைகளை பறிக்க முடியும். அதற்கு இடமளிக்காது முஸ்லிம் அரசியல் தலைமைகள் ஒன்றிணைந்து கைகோர்த்துச் செயற்பட வேண்டும்.
தமிழ் மற்றும் சிங்கள அரசியல் தலை வர்களுடன் சந்திப்புக்களை நடத்தி இதில் உள்ள சாதக பாதகங்களை அவர்களுக்கு எடுத்துக் கூறி, முஸ்லிம்களின் பக்கத்திற்கு அவர்களை சாதகமாகக் குரல் எழுப்புப வர்களாக மாற்றிக் கொள்வதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். ஏன் இந்த 5% முஸ்லிம் அரசியல் கட்சிகளுக்கு அவசியம் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டியது அவசியமாகின்றது. சில சந்தர்ப்பங்களில் பெரும்பான்மை அரசியல் கட்சிகளுடன் ஒட்டிக்கொண்டு அரசியல் நடத்தும் முஸ்லிம் தலைவர்கள் கூட இந்த வாய்ப்பை இல்லாதொழிப்பது நல்லது என்று வாதிட முடியும்.
விஜேதாச மற்றும் அதுரலியே போன்ற சந்தர்ப்பவாத அரசியல் செய்யும் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப நடித்து அப்பாவி சிங் கள பௌத்தர்களைத் தவறான வழிக்கு இட்டுச் செல்லும் இனவாதிகளுக்கு தகுந்த பாடம் கற்பிப்பதற்கு இந்தச் சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். முஸ்லிம் சமூகம் சார்பாக அக்கறை செலுத்தும் சிங்கள அரசியல் தலைவர்களை சரியான முறையில் அணுகி அவர்களுக்கு எமது நிலைப்பாட்டை தெளிவு படுத்த வேண்டியது இன்றைய முஸ்லிம் சமூகத்தின் பொறுப்பாகும். இவ்வாறான ஒரு நிலையில் எமது தலைமைகள் சரியான முறையில் சிந்திக்காது பிரிந்து செயற்பட்டால் அது ஒட்டுமொத்த சமூகத்தையும் பாதிக்கக் கூடியதாக அமையும்.
(Meelparvai)
கருத்துரையிடுக