ஐக்கிய தேசிய கட்சியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.நாவின்ன எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பில் போட்டியிடவுள்ளதாக இன்று (29) இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் தெரிவித்துள்ளார்.
அவர் நீண்ட காலமாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினராக இருந்ததுடன், 2015 பொதுத்தேர்தலில் ஐதேக சார்பாக போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கு தெரிவானமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா - தலிபான் அமைதி ஒப்பந்தம், கத்தாரில் இன்று (29) கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இதன் மூலம் 20 ஆண்டுகால போர் முடிவுக்கு வருகிறது.
மேற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில், தலிபான்கள் - அமெரிக்க படைகள் இடையே, கடந்த 20 ஆண்டுகளாக சண்டை நடந்து வருகிறது.
இந்நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வர, அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட, தலிபான்களுடன் அமெரிக்கா பேச்சு நடத்தியது. உடன்பாடு எட்டிய நிலையில், அமைதி ஒப்பந்தம், மத்திய கிழக்கு நாடான கத்தார் தலைநகர் தோகாவில், இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில், இந்தியா சார்பில், கத்தாரிலுள்ள இந்திய அதிகாரிகள் கலந்து கொண்டனர். பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி கலந்து கொள்வார் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
ஒப்பந்தம் கையெழுத்தானதை அடுத்த 14 மாதங்களில் அமெரிக்கா தன்னுடைய படைகள் அனைத்தையும் விலக்கி கொள்ள முடிவு செய்துள்ளது. AdaDerana
மலேசியாவின் பிரதமராக மொகிதின் யாசினை அந்நாட்டு மாமன்னர் அப்துல்லா நியமித்து உத்தரவிட்டுள்ளார் என்று ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
தாம் மேற்கொண்ட சில நடவடிக்கைகளின் மூலம் மொகிதின் யாசின் நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றுள்ளார் என்பதை நம்ப முடிகிறது என்பதால் அவரை பிரதமராக நியமிப்பதாக மாமன்னர் அறிவித்துள்ளார்.
மாமன்னரின் இந்த முடிவை மலேசிய மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என புதிய பிரதமராக பதவியேற்க உள்ள மொகிதின் யாசின் கேட்டுக் கொண்டுள்ளார்.
நாளை, மார்ச் 1ஆம் தேதி, 72 வயதாகும் மொகிதின் யாசின் மலேசியாவின் எட்டாவது பிரதமராக பதவியேற்கவுள்ளார்.
மொகிதின் யாசின் மலேசியாவின் முன்னாள் உள்துறை அமைச்சர் மற்றும் துணை பிரதமர் ஆவார்.
தற்போது பிரதமர் பதவியில் இருந்து விலகியுள்ள மகாதீர் முகமது தலைமையேற்றுள்ள பெர்சாத்து கட்சியை 2016இல் தொடங்கியவர் யாசின்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார் மகாதீர்.
2015இல் அவரை கட்சியில் இருந்து நீக்கிய அம்னோ (தேசிய ஐக்கிய மலாய்க்காரர்கள் அமைப்பு) கட்சி அவருக்கு ஆதரவளித்துள்ளது என்று ராய்ட்டர்ஸ் தெரிவிக்கிறது.
முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கின் அம்னோ கட்சி தலைமையிலான தேசிய முன்னணி கூட்டணி ஆட்சியில் 2009 முதல் 2015 வரை துணை பிரதமராக இருந்த இவர், ரசாக் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விமர்சித்ததால் பதவியில் இருந்தும் கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டவராவார்.
சிங்கப்பூரை ஒட்டியுள்ள ஜோகூர் மாகாணத்துக்கும், 1986 முதல் 1995 வரை சுமார் ஒன்பது ஆண்டுகள் முதலமைச்சராக பதவி வகித்துள்ளார் மொகிதின் யாசின்.
அன்வார் ஆதரவாளர்கள் ஏமாற்றம்
முன்னதாக பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி சார்பாக மகாதீர் பிரதமராக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் பலன் அளிக்கவில்லை. இன்று மதியம் மாமன்னரை நேரில் சந்தித்தார் அன்வார் இப்ராகிம்.
அப்போது பக்காத்தான் கூட்டணி சார்பாக மகாதீரை பிரதமர் வேட்பாளராக முன்மொழிவதாக அவர் மாமன்னரிடம் தெரிவித்தார்.
எனினும் அன்வார் அரண்மனைக்கு வந்து சென்ற சில மணி நேரங்களுக்குப் பிறகு மொகிதின் யாசினை பிரதமராக நியமிக்கும் அறிவிப்பை அரண்மனை வெளியிட்டது. இதனால் அன்வார் ஆதரவாளர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
இனியும் காலம் தாழ்த்த முடியாது: மாமன்னர்அறிக்கை
இது தொடர்பாக மாமன்னரின் அரண்மனைக் காப்பாளர் வெளியிட்ட அதிகாரபூர்வக் அறிக்கையில், நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களைக் கொண்ட அனைத்துக் கட்சிகளின் தலைவர்களிடம் இருந்தும், சுயேச்சையாக இயங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இருந்தும், அடுத்த பிரதமருக்கான வேட்பாளரை முன்மொழியுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
அவ்வாறு வேட்பாளருக்கான நியமனங்களைப் பெற்றது, மாமன்னர் கடந்த இரண்டு நாட்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நடத்திய நேர்காணல்களின் தொடர்ச்சியான ஒரு நடவடிக்கை என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதன் அடிப்படையில் மொகிதின் யாசினுக்கு பெரும்பான்மை ஆதரவு இருப்பதாகவும், அதனால் அவரைப் பிரதமராக மாமன்னர் நியமித்துள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது.
"நாம் அனைவரும் விரும்பும் இந்த நாட்டின் மக்களின் நலன்களுக்காகவும், அரசாங்கம் ஒன்று அமைய வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தும், பிரதமர் நியமனத்தில் இனியும் காலம் கடத்த முடியாது என்றும் மாமன்னர் கருதுகிறார். நாட்டில் நீடித்து வரும் அரசியல் குழப்பங்களை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் அனைத்துத் தரப்புகளுக்கும் இதுவே சரியான முடிவான அமையும் என மாமன்னர் கருதுகிறார்," என அரண்மனைக் காப்பாளர் அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.
கட்டார் நாட்டை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நாடான ஈரானில் இருந்து வந்த 36 வயதுடைய ஒருவருக்கே கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டதான சந்தேகத்துடன் அங்கொட தொற்றுநோய் பிரிவு IDH வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட இத்தாலியில் இருந்து வந்த இலங்கையர் இருவருக்கும் கொரோனா வைரஸ் தாக்கம் இல்லை என்ற உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஆனந்த விஜயவிக்கிரம இது தொடர்பாக தெரிவிக்கையில், மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைக்கு அமைய சம்பந்தப்பட்ட 2 நபர்களுக்கும் வைரஸ் தாக்கம் இல்லை என்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
காய்ச்சல் மற்றும் இருமல் ஆகியன நோய்க்கான அறிகுறி என தெரிவிக்கப்பட்டு அந்த இருவரும் IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். கொரோனா வைரஸ் தாக்கம் இல்லை என்பது உறுதிசெய்யப்பட்ட பின்னர் IDH வைத்தியசாலைக்கு ஸ்ரீ ஜெயவர்தனபுர வைத்திய சாலையில் இருந்து அனுப்பிவைக்கப்பட்ட நோயாளர்கள் மீண்டும் ஸ்ரீ ஜெயவர்தனபுர வைத்திய சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விசேட வைத்தியர் ஆனந்த விஜயவிக்கிரம தெரிவித்தார்.
பள்ளிவாயல் நிர்வாகத்தினர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொண்டதற்கு இணங்க பொலிஸார் பள்ளிவாயலில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கெமரா காணொளியை பரிசோதித்த போது இனந்தெரியாத நபர் ஒருவர் உண்டியலை உடைத்து பணம் திருடுவது கண்டறியப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிப்பதோடு, திருடன் வெளிபிரதேசத்தினை சேர்ந்தவராக இருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
திருட்டுச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
எம்.சி.சி ஒப்பந்தத்தை இன்று கைசாத்திட்டாலும் தான் மகிழ்ச்சியடைவேன் எனத் தெரிவிக்கும் முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர, அந்த ஒப்பந்தத்தால் ஒரு மாத்திரை அளவுக்கூட இலங்கையின் சுயாதீன தன்மைக்கு பாதிப்பு ஏற்படாதெனவும் தெரிவித்தார்.
மாத்தறையில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு மேலும் கருத்துரைத்த அவர்,
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவில் கடன் சலுகை கோரியதால் வேறு எந்த நாடும் இலங்கைக்கு சிறிய வட்டிக்கு கடன் தர முன்வராத நிலைமை காணப்படுவதாகவும், இதுவரை இலங்கையிலுள்ள எந்தவொரு நிதி அமைச்சரும் வெ ளிநாடுகளிடம் அவ்வாறதொரு கோரிக்கையை முன்வைக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
அதேபோல் மறுதிசையில், அரச ஊழியர்கள் சம்பளத்தை 10 ஆயிரம் ரூபாயால் நல்லாட்சி அரசாங்கம் அதிகரித்ததென தெரிவித்த அவர், கடந்த ஜனாதிபதி தேர்தலில் வரிசையாகச் சென்று புதிய அரசாங்கத்துக்கு வாக்களித்த ஆசிரியர்களை அடித்து விரட்டும் நிலைக்கும் அரசாங்கம் ஆளாகியுள்ளதெனவும் தெரிவித்தார்.
அதேபோல் நல்லாட்சி அரசாங்கம் ,எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரையில் அவசியமாக நிதியை ஒதுக்கீடு செய்தே இடைக்கால கணக்கு அறிக்கையை சமர்பித்திருந்தாகவும் தெரிவித்த அவர், புதிய அரசாங்கம் மக்களை ஏமாற்றும் வகையிலான வரிச்சலுகைகளை அறிவித்து அரசாங்கத்திடம் நிதி இல்லை என்கிறது என்றும் சாடினார்.
எவ்வாறாயினும் பொய்களை மாத்திரமே கூறி ஆட்சியை கைபற்றிய அரசாங்கத்துக்கு மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாத நிலைமையில் வரும் அடக்குமுறையே பிரயோகிக்கபடுமென தெரிவித்த அவர், முதல் தடவையாக ராஜபக்ஷர்கள் பிறந்த பூமியிலேயே உள்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களும் அடித்து விரப்பட்டபடுகிறார்கள் என்றார்.
அத்தோடு, இன்று வீதிப்போக்குவரத்தை சீர்படுத்தும் நோக்கில் அதனை முப்டையினரை களமிறக்கியுள்ளதாக தெரிவித்த அவர், எம்.சி.சி ஒப்பந்தம் மூலம் நாட்டின் போக்குவரத்து விதிமுறைகளை ஒழுங்குபடுத்தும் நோக்கிலேயே கைசாத்திடப்பட இருந்தாகவும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், எம்.சி.சி ஒப்பந்தத்தை கைசாத்திட்டால் இன்றும் தான் மகிழ்ச்சியடைவேன் எனத் தெரிவித்த அவர், அதனால் ஒரு மாத்திரை அளவுக்கூட இலங்கையின் சுயாதீன தன்மைக்கு பாதிப்பு ஏற்படாதெனவும் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் நேற்றைய செயற்குழு கூட்டத்தின் தேசிய சமாதான கூட்டணியை வழிநடத்திச் செல்லும் அதிகாரங்கள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடமே வழங்கப்பட்டுள்ளனவென அந்த கூட்டணியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
அதேபோல் மேற்படி கூட்டணியின் மத்திய செயற்குழுவை நியமிக்கும்போது 60 வீதமானவர்களை ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்தும் ஏனைய 40 வீதமானவர்களை பங்காளி கட்சிகளிலிருந்தும் தெரிவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் ஐ.தே.கவிலிருந்து குறித்த கூட்டணியின் மத்திய குழுவுக்கு தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களை தீர்மானிக்கும் அதிகாரங்களை ஐ.தே.க தலைமைத்துவத்துக்கே வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் காரணமாக இரானில் மட்டும் 210 பேர் இதுவரை பலியாகி உள்ளதாக சுகாதார துறை தகவல்கள் கூறுகின்றன. பெரும்பாலான மரணங்கள் இரான் தலைநகர் டெஹ்ரானில் பதிவாகி உள்ளன. இரான் அரசு வெள்ளிக்கிழமை காலை கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை 34 பேர் பலியாகி உள்ளதாக கூறியது.
ஆனால், பெயர் குறிப்பிட விரும்பாத சுகாதாரத் துறை அதிகாரி, இதுவரை 210 பேர் பலியாகி உள்ளதாக பிபிசியிடம் கூறினார். ஆனால், இதனை மறுக்கும் இரான் சுகாதார அமைச்சகம், தாங்கள் வெளிப்படையாக இருப்பதாகவும், பிபிசி பொய் தகவல்களைப் பரப்புவதாகவும் கூறினார்.
சரி கொரோனா வைரஸ் தொடர்பாகக் கடந்த 24 மணி நேரத்தில் நடந்த நிகழ்வுகளைப் பார்ப்போம்.
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக செளதி அரேபியா விசா வழங்குவதில் சில வரையறைகளை வகுத்துள்ளது. அதன்படி அந்நாட்டில் உள்ள புனித தளங்களான மெக்கா மதினாவை வழிப்பட வருபவர்களுக்கு விசா வழங்குவதைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவெடுத்துள்ளது. அதுமட்டுமல்லாமல், கொரோனா வைரஸால் பாதிப்புக்கு உள்ளான நாடுகளிலிருந்து வருபவர்களுக்கும் விசா வழங்கப்படமாட்டாது என அந்நாடு அறிவித்துள்ளது. எத்தனை காலம் இந்த தடை தொடரும், எப்போது தடை நீக்கப்படும் என்பதை அந்நாடு இன்னும் தெளிவாக விளக்கவில்லை. ஜூலையில் ஹஜ் யாத்திரை தொடங்கும் நிலையில் அப்போது வரை இந்த தடை நீடிக்குமா? அல்லது இடையில் விலக்கிக் கொள்ளப்படுமா என்பது குறித்து அந்நாடு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
கொரோனா வைரஸினால் இதுவரை சர்வதேச அளவில் 80 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2800 பேர் மரணம் அடைந்துள்ளனர். மரணித்தவர்களில் பெரும்பாலானவர்கள் சீனா ஹூபே மாகாணத்தை சேர்ந்தவர்கள்.
சுவிட்சர்லாந்தில் 1000 பேருக்கும் அதிகமானோர் கலந்து கொள்ளும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் மார்ச் 15 வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஐஸ்லாந்து, நைஜீரியா, மெக்சிகோ, நியூசிலாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளிலும் கடந்த இரண்டு மாதங்களில் முதல்முறையாக கொரோனா வைரஸ் பாதிப்பு பதிவாகி உள்ளது.
சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் 50 நாடுகளில் பரவி உள்ளது.
ஜப்பானில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டைமண்ட் ப்ரின்சஸ் சொகுசு கப்பலிலிருந்த பிரிட்டன் குடிமகன் ஒருவர் கொரோனா வைரஸால் பாதிப்புக்கு உள்ளாகி இருந்தார். அவர் உயிரிழந்துவிட்டதாகப் பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாகப் பங்குச் சந்தை மிக மோசமாக ஆட்டம் கண்டுள்ளது.
கொரொனா வைரஸ் பாதிப்பானது சர்வதேச அளவில் மிகவும் மோசமான கட்டதை எட்டியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொடர்பாகப் பரவும் பொய் தகவல்களை எதிர்கொள்வதுதான் மிகுந்த சவாலாக உள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் கூறி உள்ளார்.
இரானுக்கு உதவத் தயாராக இருப்பதாக அமெரிக்கா வெளியுறவு செயலர் மைக் பாம்பியோ கூறி உள்ளார். ஆனால், இந்த உதவிகளை இரான் நிராகரித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 30/1 தீர்மானத்தில் இருந்து இலங்கை அரசாங்கம் விலகுவதற்கு எடுத்த தீர்மானம் தொடர்பில் கவலை அடைவதாக மனித உரிமை ஆணையாளர் மிஷேல் பெஷலட் தெரிவித்துள்ளார்.
ஜெனிவாவில் நடைபெற்று வரும் மனித உரிமை பேரவையின் 43 ஆவது கூட்டத் தொடரில் வியாழக்கிழமை (பிப்ரவரி 27) கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மனித உரிமைகளை முன்னோக்கி கொண்டு செல்வது தொடர்பிலான தீர்மானம் குறித்து இதற்கு முன்னர் எட்டிய முடிவுகளுக்கு அப்பாற் சென்று புதிய அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் தொடர்பில் கவலை அடைவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அரசாங்கம் ஒன்று மக்களுக்காகவே செயற்பட வேண்டும் என்பதுடன், சிறுபான்மை மக்களின் தேவைகளை அறிந்து அவற்றை செயற்படுத்த வேண்டும் எனுவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் இலங்கை பெற்றுக் கொண்டவற்றை பாதுகாத்துக் கொள்ளுமாறும், முன்னேற்றிக் கொள்ளுமாறும் தான் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்வதாக அவர் கூறியுள்ளார்.
குறிப்பாக காணாமல் போனோரை கண்டறிவதற்காக ஆரம்பிக்கப்பட்ட அலுவலகத்தை முன்னேற்றமடைய செய்ய அரசியல் ரீதியிலும், வளங்கள் ரீதியிலும் உதவிகளை மேற்கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அனைத்து இனங்களிலும் காணாமல் போயுள்ள மக்களின் உறவினர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தின் ஊடாக கொண்டுவரப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்கள் ஜனநாயகத்தின் பிரதான தூண்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொது மக்களுக்கும், ஊடகங்களுக்கும் இருக்க வேண்டிய உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என கூறிய அவர், பாதுகாப்பு அமைச்சின் கீழ் முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகள் ஊடாக சிவில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை இலக்காக கொண்டு மேற்கொள்ளப்பட்டு வரும் சோதனை நடவடிக்கைகள் தொடர்பில் தான் கவலை அடைந்துள்ளதாக மனித உரிமை ஆணையாளர் கூறியுள்ளார்.
வைராக்கியத்துடனான கருத்துக்கள் வெளிப்படுத்தப்படுவதாகவும், தமிழ் மற்றும் முஸ்லிம் வேறு விதமாக (வித்தியாசமாக) கவனிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை கடந்த காலங்களில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பில் இதுவரை கவனம் செலுத்தப்படாமை கவலை அளிப்பதாக அவர் நினைவூட்டியுள்ளார்.
இவ்வாறான நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து பாதுகாப்பு தரப்பு புனரமைக்கப்படவில்லை என அவர் கூறியுள்ளார்.
இலங்கை கடந்த காலங்களில் உள்நாட்டு பொறிமுறையின் ஊடாக பொறுப்பு கூறுவதில் தோல்வி அடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் புதியதொரு விசாரணை ஆணைக்குழு அமைக்கப்படுவது குறித்து தனக்கு நம்பிக்கை கொள்ள முடியாது என மனித உரிமை ஆணையாளர் மிஷேல் பெஷலட் தெரிவித்துள்ளார்.
இலங்கை மக்கள் தமக்கு வழங்கிய மக்கள் ஆணையின் அடிப்படையிலேயே, 30/1 தீர்மானத்திலிருந்து விலக தாம் தீர்மானித்ததாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஜெனிவாவில் நடைபெற்று வரும் மனித உரிமை பேரவையின் 43 ஆவது கூட்டத் தொடரில் மனித உரிமை ஆணையாளர் உரை நிகழ்த்தியதன் பின்னர் அதற்கு பதிலளிக்கும் வகையிலேயே தினேஷ் குணவர்தன இதனைக் குறிப்பிட்டிருந்தார்.
இலங்கையிலுள்ள சட்ட வரையரைக்குள் பிரச்சினைகளுக்கான தீர்வை பெற்றுக் கொள்வதாக அவர் இதன்போது கூறியுள்ளார்.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எனினும், சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை, காலி மற்றும்மாத்தறைமாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
வடமேல் மாகாணத்திலும் ஹம்பாந்தோட்டை, மொணராகலை, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
மழை நிலைமை : நாட்டைச் சூழவுள்ளகடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையில் இருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25-35 கிலோ மீற்றர் வரை காணப்படும்.
மன்னாரில் இருந்து புத்தளம் ஊடாக கொழும்பு வரையான கடற்பரப்புகளிலும் காலியில் இருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்.
கடல் நிலை : மன்னாரில் இருந்து புத்தளம் ஊடாக கொழும்பு வரையான கடற்பரப்புகளும் காலியில் இருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளும் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.
நான்கு செயற்பாடுகளின் கீழ் இலங்கையை முஸ்லிம் ராச்சியமாக்குவதற்கான திட்டத்தை ஜம்மியத்துல் உலமா சபை நடைமுறைப்படுத்தியதாக தமக்கு தகவல் கிடைத்திருந்ததாக முன்னாள் நீதியரசர் விஜேதாஸ ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்றைய தினம் சாட்சியமளித்தபோது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது அடிப்படைவாதத்தை ஊக்குவிக்கும் அரசியல்வாதிகள் உள்ளனரா? என அரசாங்கத்தின் பிரதி மன்றாடியார் நாயகம் வினவியுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள விஜேதாஸ ராஜபக்ஸ எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா, முஜிபுர் ரஹ்மான், அசாத்சாலி போன்றோர் அடிப்படைவாதத்தை ஊக்குவித்துள்ளதாக குறிப்பிட்டார்.
2018 ஆம் ஆண்டில் மாவனெல்லையில் புத்தர்சிலை சேதமாக்கப்பட்டமை உள்ளிட்ட சில அடிப்படைவாத சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் குற்றப்புலனாய்வு அதிகாரிகளுக்கு அசாத் சாலி, ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் அழுத்தம் வழங்கினர் என விசாரணைகள் அதிகாரிகள் தம்மிடம் கூறியதாக விஜேதாஸ ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானுக்கு ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடைய தெமட்டகொடையை சேர்ந்த இப்ராஹிம் குடும்பத்துடன் தொடர்பு உள்ளதை தான் அறிந்துள்ளதாகவும் விஜேதாஸ ராஜபக்ஸ ஆணைக்குழுவில் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஜம்மியத்துல் உலமா சபை நான்கு செயற்பாடுகளின் ஊடாக இலங்கையை முஸ்லிம் ராஜ்சியமாக்குவதற்கு திட்டமிட்டு இருந்ததாக சம்பிரதாய முஸ்லிம் நண்பர்களின் ஊடாக தனக்கு அறிய கிடைத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, ஹலால் சான்றிதழ், பெண்களின் முகத்தை மறைத்தல் ஷரியா சட்டத்தை இந்த நாட்டின் நடைமுறையாக சட்டமாக்குல், அரபு மொழியை கற்பிப்பதன் ஊடாக இந்த நாட்டை முஸ்லிம் ராஜ்சியமாக்குவதற்கு தனக்கு தகவல் கிடைத்திருந்தததாக விஜேதாஸ ராஜபக்ஸ தெரிவித்திருந்தார்.
இதன்போது கேள்வி எழுப்பிய ஆணைக்குழு, இதற்காக அரசியல் ரீதியான ஒத்துழைப்பை வழங்கியது யாரென வினவியது?
இதற்கு பதிலளித்துள்ள விஜேதாஸ ராஜபக்ஸ, எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, றிஷாட் பதீயுதீன் போன்றோர் ஊடாக கிடைக்கும் மத்திய கிழக்கின் உதவிகள் மூலம் ஷரியா சட்டத்தை கற்பிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் இடம்பெற்றதாக கூறியுள்ளார்.
அரசியலமைப்பு சபை, ஆணைக்குழுக்களுக்கு மதிப்பளிக்க வேண்டுமெனவும் தெரிவிப்பு
ஜனாதிபதி கவலை
தேசிய கொள்கைகளில் கவனம் செலுத்துவதற்கும் திறமையான அரச சேவையை முன்னெடுப்பதற்கும் நேரத்தை செலவிட முடியாதவாறு ஆர்ப்பாட்டங்கள் தனது கவனத்தை மட்டுப்படுத்துவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கவலை தெரிவித்தார்.
பாராளுமன்ற குழுக்கள் முன்வைத்திருக்கும் அறிக்கையிலுள்ள சிபாரிசுகளை நடைமுறைப்படுத்த தான் விரும்பினாலும் தனது அலுவலகத்துக்கு முன்னால் நடக்கும் ஆர்ப்பாட்டங்களில் தனது நேரத்தையும் கவனத்தையும் மட்டுப்படுத்துவதால் அந்த அறிக்கைகளை ஆராயமுடியாமல் இருப்பதாகவும் கூறினார்.
மிகச்சிறந்த செயற்பாட்டை அடைந்துள்ள அரசாங்க நிறுவனங்களை அடையாளம் காண்பதற்காக அரசாங்க கணக்கியல் குழுவின் ஏற்பாட்டில் (கோபா) பாராளுமன்றத்தில் நடத்தப்பட்ட விருது வழங்கும் நிகழ்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.தொடர்ந்து ஜனாதிபதி உரையாற்றுகையில்,
பல்வேறு அமைச்சுகளுக்கூடாக வரும் பிரச்சினைகளுக்கு அமைச்சு மட்டத்தில் தீர்வு காணப்பட வேண்டும். சுமார் 1.5 மில்லியன் அரசாங்க உத்தியோகத்தர்கள் எம்மிடம் உள்ளனர். இதற்கு மேலதிகமாகவும் பலர் அரசாங்க சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். இதனால் அரசாங்கத் துறையிலுள்ள சம்பள அதிகரிப்பு மற்றும் முரண்பாடுகளை தீர்ப்பதற்காக அடிக்கடி ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும். அரசாங்க வருமானத்தை அதிகரித்தால் மட்டுமே இத் தேவைகளை நிறைவு செய்ய முடியும். இதற்காக நாம் ஊழல் மற்றும் வீணான செலவுகளை தவிர்த்து புதிய தொழில்நுட்பங்களை கண்டுபிடித்தால் மட்டுமே இவற்றுக்கு முகம்கொடுக்கலாம். இல்லாவிடில் இந்த ஒட்டுமொத்த முறையும் கவிழ்ந்துவிடும்.
மக்களுக்கு சிறப்பான சேவையை பெற்றுக்கொடுப்பதற்காகவே இப் பொறிமுறைகள் அனைத்தும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதனால் நாட்டின் ஆட்புல ஒருமைப்பாட்டுக்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றுமாறு நான் அரசாங்க உத்தியோகத்தர்களை கேட்டுக்கொள்கின்றேன். சேவைகள் தாமதமாவது, நேரம் வீணாவது, நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டியது, ஒரு வேலையை நிறைவேற்றுவதற்காக பல இடங்களுக்குச் சென்று வர வேண்டியது ஆகியனவே பொதுவான முறைப்பாடுகளாக உள்ளன.
இக் குறைபாடுகளை தீர்க்க வேண்டியது அவசியம்.
ஒரு முதலீட்டாளர் அனுமதிக்காக மூன்று வருடங்களுக்கு காத்திருக்க வேண்டி ஏற்பட்டால் அவரும் இதே யோசனையை தான் முன்வைப்பார். அத்துடன் அதிகாரிகளை கவனமாக கையாளுங்கள். தற்போது குழுக்களின் சந்திப்புக்கள் ஊடகங்களில் காண்பிக்கப்படுகின்றன. அண்மையில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் விசாரணையை நான் பார்த்தேன்.
மிகவும் திறமையான மற்றும் அறிவான நபர்களை நாம் இக் குழுக்களின் தலைவராகவும் பணிப்பாளர் சபை உறுப்பினர்களாகவும் நியமித்துள்ளோம். இவர்களுக்கு இதற்காக எவ்வித சம்பளமோ அல்லது சிறப்புரிமைகளோ வழங்கப்படுவதில்லை. நான் அதனை தொலைக்காட்சியில் பார்த்த பின்னர், புதிய தலைவருக்கு நான் தனிப்பட்ட முறையில் தொலைபேசி அழைப்பு செய்து 'கோப்' விசாரணையில் அவர் நடத்தப்பட்ட முறைக்காக அவரை ஏமாற்றம் கொள்ள வேண்டாமென்று கேட்டுக்கொண்டேன் என்றார்.
மகாபொல புலமைப் பரிசில் பெறும்; மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவுள்ளது. தற்போது 11 ஆயிரம் பேர் வரையில் இந்த புலமைப் பரிசில்களை பெற்றுவருகின்றனர்.
இந்த எண்ணிக்கையை 20 ஆயிரமாக உயர்த்துவதற்கு விசேட வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளது. இது தொடர்பில் அமைச்சர் பந்துல குணவர்த்தன முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
சுரக்ஷா காப்புறுதி திட்டம் தொடர்ந்தும் மேம்படுத்தப்படவுள்ளது. ஐந்து வயது முதல் 19 வயதுக்குட்பட்ட சகல பாடசாலை மாணவர்களுக்கும் இத்திட்டத்தின் மூலம் பயன்கிடைக்கவுள்ளது. இது தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அரச தொழில்வாய்ப்புக்காக விண்ணப்பித்துள்ள அனைத்து வேலையில்லாப் பட்டதாரிகளுக்கான நியமனங்கள் இன்று வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
ஒருவருட பயிற்சிக் காலத்தின் அடிப்படையில் அரச சேவைக்கு இணைத்துக்கொள்ளப்படும் இவர்களுக்கு 20,000 ரூபா பயிற்சிக்கால சம்பளமாக வழங்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,
நாட்டில் 50,000 வரையான பட்டதாரிகள் வேலைவாய்ப்பற்றிருந்தனர். இவர்கள் அனைவருக்கும் தொழில் வாய்ப்புகளை வழங்குவதே அரசாங்கத்தின் கொள்கையாக காணப்பட்டது. அதன்படி அனைவரிடமும் விண்ணப்பங்கள் கோரப்பட்டன.
அரச தொழில்வாய்ப்புகளுக்காக விண்ணப்பித்த அனைத்து வேலையில்லாப் பட்டதாரிகளுக்கும் இன்று நியமனம் வழங்கப்படவுள்ளது. மார்ச் முதலாம் திகதி முதல் அரச சேவையில் இணைத்துக்கொள்ளும் வகையிலேயே நியமனம் வழங்கப்படுகிறது.
ஒருவருடகாலம் இவர்களுக்கு பயிற்சிக் காலமாகும். இக் காலப்பகுதியில் 20,000 ரூபா சம்பளமாக வழங்கப்படும். அதன் பின்னர் அவர்கள் முறையான அரச சம்பளப் பட்டியலுக்குள் உள்வாங்கப்படுவார்கள்.
நியமனம் பெறும் இடத்தில் கட்டாயம் ஐந்து ஆண்டுகள் பணிபுரிய வேண்டும். அதன் பின்னரே இடமாற்றத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். அரச சேவையை வறுமையான பிரதேசங்களுக்கு கொண்டுசெல்லும் நோக்கில் இவர்களுக்கான நியமனம் வழங்கப்படவுள்ளது என்றார்.
இன்று மாலை நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் சின்னம் தொடர்பாக எவ்வித தீர்மானமும் எட்டப்படாமல் நிறைவடைந்துள்ளது.
ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான கூட்டணியான ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ள ஏனைய கட்சிகளுடனான புரிந்துணர்வு உடன்படிக்கை எதிர்வரும் மார்ச் 2 இல் கைச்சாத்திடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மீண்டும் ஞாயிற்றுக்கிழமை மத்திய செயற்குழுக் கூட்டம் இடம்பெறவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.