நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையை, கருத்திற் கொண்டு பொதுமக்களுக்கு விசேட சலுகைகள் பல வழங்கபட்டுள்ளன.
தனக்குள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, இந்த சலுகைகளை வழங்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தீர்மானித்துள்ளார்.
இதற்கமைய, வருமான மற்றும் வட் வரி, சாரதி அனுமதிப்பத்திரத்தை புதுப்பிப்பதற்கான கட்டணம், 15 ஆயிரத்திற்கு குறைவான நீர் மற்றும் மின்சார கட்டணம், காசோலைகளின் செல்லுபடியான காலம் மற்றும் 50 ஆயிரத்திற்கு குறைவான கடன் அட்டை கட்டணம் என்பவற்றை செலுத்துவதற்கான கால எல்லை ஏப்ரல் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், முச்சக்கர வண்டி உரிமையாளர்களிடமிருந்து மாதாந்த தவனைக் கட்டணத்தை ஆறு மாதங்களுக்கு அறவிட வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து 10 லட்சம் ரூபாவுக்கு குறைவாக பெற்றுக் கொண்ட தனியார் கடன்களை மூன்று மாதங்களுக்கு அறவிட வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், புதிதாக அரச சேவைக்கு இணைத்துக் கொள்ளப்பட்ட பட்டதாரிகளின் இந்த மாதத்திற்கான 20 ஆயிரம் ரூபா சம்பளத்தை, அவர்களது வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பிவைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரச ஊழியர்கள் மற்றும் தனியார் பிரிவுகளின் நிர்வாகத்தை அல்லாத ஊழியர்களின் சம்பளத்தை முன்னிலைப்படுத்தி பெற்றுக் கொண்ட மாதாந்த கடன் தொகை அறவீடுகள் 2020ஆம் ஆண்டு மே மாதம் 30ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் ஒழிப்பு நடவடிக்கைகளில் உள்ள சுகாதார, பொலிஸ், சிவில் பாதுகாப்பு படை உள்ளிட்ட அரச ஊழியர்களுக்கான ''அக்ரஹார" காப்புறுதி திட்டம் இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா, ஆடை, சிறு மற்றும் மத்திய தர வர்த்தகம் ஆகியவற்றிற்காக 6 மாத கால கடன் நிவாரண காலத்தை நடைமுறைப்படுத்தல் மற்றும் அதற்கான நிதியை இலங்கை மத்திய வங்கி வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வங்கி, மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி, இலங்கை காப்புறுதி கூட்டுதாபனம், ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியன ஒன்றிணைந்து திரைசேறி முறிகளுக்கான நிதி முதலீடுகளை மேற்கொள்ளும் சந்தர்ப்பத்தில், அதிலிருந்து நிதி வர்த்தகத்திற்கு 7 சதவீத வட்டி வீதத்தை உறுதிப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது
மாதாந்த கடன் நிதியான 50,000 வரை உள்நாட்டு கொடுக்கல் வாங்கல்களுக்காக பயன்படுத்தப்படும் கடன் அட்டைகளுக்கான கடன் வட்டி வீதத்தை 15 வீதமாக்குவதுடன், மாதாந்தம் குறைந்தது 50 வீதமான கடனையே அறிவிடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் அனைத்து வங்கிகளின் கிளைகளும், வாடிக்கையாளர்களுக்கு இயலுமான அளவு சேவையை வழங்கும் வகையில் திறந்து வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கை துறைமுகம், சுங்கம் மற்றும் ஏனைய நிறுவனங்களின் ஊடாக மக்களுக்கு அத்தியாவசிய உணவுகள், உரம், மருந்து வகைகள் மற்றும் எரிப்பொருள் ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சமுர்த்தி பயனாளர்கள் மற்றும் கூட்டுறவு கடனட்டை உரிமையாளர்களுக்காக 10,000 ரூபா வட்டியற்ற மேலதிக தொகையை அனைத்து கூட்டுறவு வங்கிகளின் ஊடாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
லங்கா சதொச மற்றும் கூட்டுறவு வர்த்தக நிலையங்கள் ஆகியவற்றில் வெட் வரி மற்றும் ஏனைய பிரதேச வரிகளை இல்லாது செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறைந்த வருமானத்தை பெறுவோருக்காக போஷாக்கு உணவு வகைகளை வழங்குவதற்கு பதிலாக, சமுர்த்தி அதிகார சபை மற்றும் குறைந்த வருமானத்தை பெறும் குடும்பங்களுக்காக உரிமையாளர் சான்றிதழை உடனடியாக வழங்க வேண்டும் எனவும், அந்த குடும்பங்களில் முதியோர் அல்லது குறைந்த வருமானத்தை பெறுவோர் இருப்பார்களாயின் அவர்களுக்கு அரிசி, பருப்பு. வெங்காயம் ஆகியவற்றுக்கான உணவு சான்றிதழை வாராந்தம் வழங்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Thanks - Capital News
கருத்துரையிடுக