இலங்கையில் ஒரு சில அரச இணையத்தளங்கள், செயற்பாட்டாளர்கள் குழுவினால் (activist) சேதப்படுத்தப்பட்டதை (defaced) இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு | ஒருங்கிணைப்பு மையம் (Srilanka CERT | CC) உறுதிப்படுத்தியுள்ளது.
இவ்வகையான செயற்பாட்டாளர்களின் இறுதி இலக்கு, பார்வையாளர்களின் கவனத்தை ஈர்ப்பதும் வெறுப்பான செய்திகளை பரப்புவதுமாகும் என இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு | ஒருங்கிணைப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி லால் டயஸ் தெரிவித்தார்.
இத்தகைய செயற்பட்டாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாமல் இருப்பது அவசியமாகும். கடந்த காலங்களிலும் இதேபோன்ற இணையத்தள தாக்குதல்கள் ஏற்பட்டுள்ளன. மேலும் இந்த வகையான தாக்குதல்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் இலங்கை கணினி அவசர தயார்நிலை அணி | ஒருங்கிணைப்பு மையமானது செயலூக்க நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக ஒரு செயலணியையும் மற்றும் ஒரு செயற்குழுவையும் நிறுவியுள்ளது. இச்செயற்குழுவில் இணைய சேவை வழங்குநர்கள் உள்ளிட்ட முக்கிய அரச மற்றும் தனியார் துறை பங்குதாரர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு | ஒருங்கிணைப்பு மையம், பாதுகாப்பு அமைச்சின் மேற்பார்வையின் கீழ் செயற்பட்டு வருகின்றது. இலங்கையின் தகவல் மற்றும் தகவல் அமைப்புகளின் உள்கட்டமைப்பைப் பாதுகாப்பதே இந்த அமைப்பின் முக்கிய பணியாகும்.
இணையத்தள செயலிழப்பானது, தாக்குதல் நடத்துபவரினால் இணையப்பக்கம் அல்லது இணையத்தளத்தின் காட்சி, தோற்றத்தினை மாற்றுவதன் மூலம் நிகழ்த்தப்படுகின்றது. தற்போது ஏற்பட்ட இணையத்தளங்களை இழிவுபடுத்தும் இந்த முயற்சியில் தரவு மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை என அவர் வலியுறுத்தினார்.
"செயலணியினரால் தக்க தருணத்தில் பாதிப்புக்குள்ளான இணையத்தளங்களை அடையாளம் காணவும், நிலைமையை நிவர்த்தி செய்ய முடிந்தது எனவும் இந்த இணையத்தள தாக்குதல்கள் காலை 6.38 மணிக்கு கண்டறியப்பட்ட அதேவேளை, காலை 7.30 மணியளவில் இலங்கை கணினி அவசர தயார்நிலை அணியில் உள்ள தகவல் பாதுகாப்பு பொறியியலாளர்களால் இணையத்தளங்கள் மீண்டும் சரி செய்யப்பட்டது” எனவும் அவர் விளக்கமளித்தார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.