(செ.தேன்மொழி)

உழைக்கும் போராளிகளால் நாட்டை சௌபாக்கிய பாதை நோக்கி அழைத்துச் செல்வதாக குறிப்பிட்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் உழைக்கும் மக்களின் பணத்தை கைப்பற்ற முயற்சிக்கிறது. ஆளும் தரப்பின் அரச தலைவர்கள் அவர்களுக்குரிய சுகபோகங்களை அனுபவிக்கையில், உழைக்கும் மக்களை நாட்டுக்காக தியாகம் செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கின்றனர் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றம் சாட்டினார்.

தமது குடும்ப உறவினர்கள் மற்றும் சகாக்களை போஷித்துவரும் ராஜபக்ஷக்களின் கொள்ளையினால், தற்போது வரபிரசாரங்களை அனுபவித்து வரும் ராஜபக்ஷ குடும்பத்தினரும், அவர்களது சகாக்களும் நாட்டுக்காக எந்த அர்ப்பணிப்பையும் செய்யாமல் இருக்கையில் சாதாரண மக்களிடம் வேண்டுகோள் விடுப்பது நியாயமற்ற செயலாகும் என்றும் குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, அரசாங்கம் ஆட்சியமைத்து ஆறு மாதம் கடந்துள்ள நிலையில் எந்தவொரு திட்டமும் இன்றி செயற்படுகின்றது. இந்த ஆறு மாத காலத்திற்கு நாட்டுக்கு நன்மைதரும் எந்த விடயங்களையும் மேற்கொள்ளாது, தற்போது கொரோனாவை காண்பித்துக் கொண்டு உழைக்கும் மக்களின் பணத்தையும் பறிக்க திட்டமிட்டுள்ளது.

ஆட்சிக்கு வந்தவுடனே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவுக்கு விஜயத்தை மேற்கொண்டு, இந்தியாவுக்கு செலுத்த வேண்டியுள்ள கடனை செலுத்துவதற்காக காலவகாசம் வழங்குமாறு கேட்டுக் கொண்டிருந்தார்.

 தற்போது கொரோனாவினால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்காக அரச ஊழியர்களின் சம்பளத்தை அர்பணிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போது அரசாங்கம் மன்றாடி பிராத்திக்க ஆரம்பித்துள்ளது. இவர்களால் எந்த பயன்தரும் திட்டங்களும் இல்லை. எப்போதும் தமது குடும்பத்தையும் உறவினர்கள் மற்றும் சாக்களையும் போஷிக்கும் கொள்கை படைத்த ராஜபக்ஷாக்கள், இம்முறையும் இந்த மோசடிகரமான செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளனர்.

முக்கியமான பல பதவிகளை அவர்களுக்கு சாதகமான பலருக்கு பெற்றுக் கொடுத்துள்ளனர். பாரியளவான வரப்பிரசாதங்களை அவர்கள் அனுபவித்து வருகின்ற நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்துடன் நுவரெலியாவில் உள்ள அவரது வீட்டில் சுகபோகங்களை அனுபவித்து வருகையில் நாட்டுக்காக முன்மாதிரியாக எந்த அர்ப்பணிப்பையும் செய்யாது அரச ஊழியர்களை அவர்களது சம்பளத்தை அர்பணிக்குமாறு வேண்டுகோள் விடுத்திருக்கின்றனர்.

வரிச் சலுகை வழங்குவதாக குறிப்பிட்டு அரசுக்கு சொந்தமான 500 பில்லியன் ரூபாய் பணத்தையும் இழந்து யாருக்காக அந்த சலுகையைப் பெற்றுக் கொடுத்தார்கள். வரிச் சலுகையின் நலன்களை சாதாரண மக்கள் அனுபவித்தார்களா? இந்த வரி குறைப்பால் யார் பயனடைந்தது. மேல் மட்டத்திலான வர்த்தகர்களே இந்தப் பயனைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஜனாதிபதி தேர்தல் பிரசார செயற்பாடுகளின் போது கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளித்த மேல் மட்டத்திலான வர்த்தகர்களுக்கு இலாபம் ஈட்டிக் கொடுக்கும் நோக்கிலேயே இந்த சலுகை வழங்கப்பட்டிருந்தது.

சுகாதார செயற்பாடுகள் தொடர்பிலும் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. வைரஸ் பரவல் மற்றும் தற்போது ஏற்பட்டு வரும் திடீர் மரணங்கள் தொடர்பில் அரசாங்கம் உண்மைக்கு புறம்பான தகவல்களை வழங்கி வருவதாக சந்தேகம் எழுந்துள்ளது.

மட்டக்குளி - மோதரை பகுதியில் உயிரிழந்த பெண்ணொருவர் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனைகளில் அவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து அவரது இறுதிக்கிரியைகளை தொற்று நீக்க சட்டத்திற்கமைய மேற்கொண்டிருந்தனர்.

ஆனால் வைத்திய இரசாயன பிரிவின் பணிப்பாளர் அது பொய்யான அறிக்கை என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சுகாதார அமைச்சரோ ஜனாதிபதியோ எந்தவித அறிவிப்பையும் செய்யாமல் இருப்பது ஏன்?

நாட்டில் வைரஸ் பரவல் கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக காண்பித்துக் கொண்டு அரசாங்கம் தேர்தலை நடத்த முயற்சிக்கின்றது. தேர்தல் நடத்துவதற்கு நாங்களும் ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளோம். ஆனால் தேர்தலுக்கான தருணம் இதுவல்ல வைரஸ் தொற்றிலிருந்து மக்களை பாதுகாப்பதே தற்போது அவசியமாகும். மக்களின் சடலங்களுக்கு மேல் தேர்தலை நடத்த நாங்கள் தயாராக இல்லை.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.