யாழ்ப்பாணம், வேலணையில், சிறுவர்களுக்கு போதை மாத்திரைகளை வழங்கி வந்த குற்றச்சாட்டில் சிறுவன் ஒருவனை பொலிஸார் பண்ணைக் கடலுக்குள் நீந்திச் சென்று கைது செய்துள்ளனர்.

இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை வீதியில் மண்டைதீவுச் சந்திக்கு அண்மையில் இன்று (12) மாலை இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சிறுவன் ஒருவன், வேலணைப் பகுதியில் உள்ள சிறுவர்களுக்கு போதை மாத்திரைகளை வழங்குவதாக ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்துக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அவனைக் கைது செய்ய முயற்சித்துள்ளனர்.
கைது செய்ய முற்பட்ட வேளை குறித்த சிறுவன் பண்ணைக் கடலுக்குள் பாய்ந்து தப்பிக்க முயற்சித்துள்ளான். எனினும் கடற்படையினர் விரைந்து செயற்பட்டதால் அந்தச் சிறுவனை நீண்ட தூரம் நீந்திச் சென்று பிடித்துள்ளனர்.

வேலணை - வெள்ளைக்கடற்கரை (சாட்டி) பள்ளிவாசல் பகுதியில் வசிக்கும் 18 வயதுச் சிறுவனே இவ்வாறு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளான்.

சிறுவனை கைது செய்த பொலிஸார், முன்னெடுத்த விசாரணைகளுக்கு அமைய, தனக்கு போதை மாத்திரைகளை வழங்குபவரை அடையாளம் காட்டுவதாக சிறுவன் தெரிவித்ததையடுத்து சாட்டி பகுதிக்கு குறித்த சிறுவன் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

(நியூஸ்வீவ்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.