Covid-19 தொற்று காரணமாக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் 14 சதவீதமானோர் மரணமடைந்துள்ள நிலையில் இலங்கையில் வெறும் 10 பேர் மட்டுமே பலியாகியுள்ளதாக தெரிவித்திருக்கும் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, அரசாங்கம் எடுத்த துரித நடவடிக்கைகள் மூலம் கோவிட் 19 தொற்றுப்பரலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிந்ததாகவும் தேர்தலை நடத்துவதற்கு நிலைமை சாதகமாக இருப்பதாகவும் தெரிவித்தார். தேர்தலுக்கு எதிராக உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 07 மனுக்கள் தொடர்பான விசாரணை உச்ச நீதிமன்றில் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி வாதம நாளாக நடைபெற்ற போது இடையீட்டு மனுதாரர் பேராசிரியர் சுனந்த லியனகே சார்பில் ஆஜராகி வாதிடும்போது ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவர் கொண்ட நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணை நடைபெற்று வருகின்றது. புவனெக அலுவிகார, சிசிர டிஆப்ரு, பிரியந்த ஜயவர்தன, விஜித மலல்கொட ஆகியோர் ஏனைய நீதிபதிகள் ஆவர்.
இங்கு வாதத்தை தொடர்ந்த ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, அமெரிக்க ஐக்கிய இராச்சியம் உள்ளிட்ட நாடுகள் கொவிட் 19 தொற்றாளர்களில் 14 சதவீதத்துக்கும் கூடுதலாக மரணிக்கும் நிலையில், எமது இலங்கையில் ஆரம்பம் முதல் இன்றைய நாள் வரை பத்து பேர் மட்டுமே மரணமாகியுள்ளனர்.

 இது அரசாங்கம் மேற்கொண்ட துரித நடவடிக்கைகளுக்கு பிரதி பலனாகும்.
பாதுகாப்பு, சுகாதாரத் தரப்புகள் நோய்களை கட்டுப்படுத்த எடுத்த பணிகள் உலகின் எந்த ஒரு நாட்டையும் விட மெச்சத்தக்கதாகவே காணப்படுகின்றது. இந்த நிலையில் நாட்டில் தேர்தலை நடத்தக் கூடிய சாதகமான நிலையை வெளிப்படையாகவே காணமுடிகிறது. இத்தருணத்தில் இவ்விடயத்தை குறுகிய அரசியல் நோக்குடன் பார்க்காமல் உரிய காலத்தில் தேர்தலை நடத்த ஒத்துழைக்க வேண்டும்.
மனுதாரர்கள் சார்பில் சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. மேலோட்டமான குற்றச்சாட்டுகளை பாரதூரமாக உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளக் கூடாது.

அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து இந்த விசாரணையை முடிவுக்குக் கொண்டுவருமாறு நாம் நீதிமன்றத்தைக் கேட்டுக் கொள்கின்றோம் எனவும் அவர் தெரிவித்தார்.

அரசியல் ரீதியிலான இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிடுவது ஜனநாயக பண்பாக காண முடியாது. அரசியலமைப்பில் காணப்படும் சில முரண்பாடான கருத்துக்களை மனுதார்கள் தமக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்றனர். இதனை நீதிமன்றம் கவனத்தில் கொள்ளவேண்டுமெனவும் ஜனாதிபதி சட்டத்தரணி தமது வாதத்தில் தெரிவித்தார்.

இந்த மனுவில் பிரதிவாதிகளாக தேர்தல்கள் ஆணைக்குழு, அதன் தலைவர் மஹிந்த தேசப்பிரிய உள்ளிட்ட உறுப்பினர்களான பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல். ஜனாதிபதி சட்டத்தரணி எம். என்.ஜே அபசேகர. ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பி.பீ ஜயசுந்தர, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க. சட்ட மாஅதிபர் ஆகியோர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

மனுதாரர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், ஜனாதிபதி சட்டத்தரணி மனோகர டி சில்வா, சட்டத்தரணி விரான் கொரயா உள்ளிட்ட குழுவினர் ஆஜராகியுள்ளனர்.

தேர்தல் ஆணைக்குழு சார்பில் சட்டத்தரணி வி கே சொக்ஷியும் ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ ஜயசுந்தர சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வாவும், சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க மற்றும் சட்ட மாஅதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே, மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி இந்திகா தெமுனி டி சில்வா ஆகியோரும் ஆஜராகினர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.