வன்னியில் பல போலியான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தாலும் தமது கட்சிக்கு 42,524 வாக்குகளை மக்கள் வழங்கியுள்ளனர் என பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற வேட்பாளர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் கூறுகையில், 'இம்முறை இடம்பெற்ற தேர்தலில் எனக்கும் எனது கட்சிக்கும் வாக்களித்த அனைத்து மக்களுக்கும் முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

வன்னி மாவட்டத்தில் அதிக வாக்குகள் பெற்ற இரண்டாவது கட்சியாக நாம் இருக்கின்றோம். கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் எமது வளர்ச்சி பாரிய அளவில் இருக்கின்றது.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் 26 ஆயிரம் வாக்குகளைப் பெற்றநிலையில் இம்முறை அதிக வாக்குகள் கிடைத்துள்ளமை பாரிய வெற்றியாகும்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீதும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷச மீதும், என்மீதும் வைத்த நம்பிக்கையின் அடிப்படையில் எனக்கு இந்த வாக்குகளை மக்கள் அளித்துள்ளார்கள்.

எமக்கு அளிக்கப்பட்ட வாக்குகளின் பெறுமதியை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சிரேஷ்ட அமைச்சர்களிடம் தெரிவித்து அதனூடாக வன்னி மாவட்டத்திற்குத் தேவையான நிலையான அபிவிருத்திகளையும், திட்டமிட்ட அபிவிருத்திகளையும் செய்வதற்கு நடவடிக்கை எடுப்பேன்.

அதேபோன்று இங்குள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான சுயதொழில் வாய்ப்புக்கள் மற்றும் வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்துவதற்கு எமது தலைவர்களோடு கலந்துரையாடி ஏற்பாடுகளை செய்யவுள்ளேன்.

மக்கள் அதிகப்படியான வாக்குகளை அளித்திருந்த போதும் இன்னும் சொற்பளவு வாக்குகளைப் பெற்றிருந்தால் இரண்டு ஆசனங்களைப் பெற்றிருக்க முடியும்.

இதேவேளை, எமது கட்சி அதிகமான வாக்குளைப் பெற்றுள்ளமையால் வன்னிக்கான சிரேஷ்ட அமைச்சுப் பதவி ஒன்று வழங்குவது தொடர்பாக கட்சியின் உயர்பீடம் தீர்மானிக்கும்' என்றார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.